சூட்சுமம்
பழ. தேவராஜன்
எனக்குப் புரியாத - ஆனால்
தெரிந்த ஒன்றை லாவகமாக
லயத்துடன் அபிநயித்து
அடிமனதின் ஆதங்கத்தை
மயிலிறகால் தடவி
எனக்குள் எதையோ தகர்த்து
கல்லுக்குள் கசியும் நீராய்
ஏக்கத்தின் எச்சத்தில் - விழியோரம்
வழியும் நீரில் - இந்த
பிரபஞ்சத்தின் எந்த வார்த்தைக்கும்
வசப்படாத ஒன்றை - எனக்குள்
ரகசியமாய் பிளந்து, பிழிந்து
பிதற்றச் செய்தாயே!? - பிரமாதம்
எத்துணை சுமைகளை
இறக்கி வைத்தாய்
எத்துணை மனங்களை
லயிக்கச் செய்தாய்
ரசனைகளின் ரகசியத்தை - நின்
அசைவுகளும், அடவுகளும்
மனதின் அடி ஆழத்தில் நினைவுகளுக்கும்
புலப்படாத ஒன்றை சற்றே
சலனத்துடன் கடந்த பின்னும்
இறக்கி வைக்க முடியாத - ஒரு
இனம் புரியாத சுமை, சுகமாய்
கரைந்து, கரைந்து
கவலைகளாய், திவலைகளாய்
விழியோரம் வழியும்போது
ஒரு ரௌத்திரம், ஆங்காரம்
அசைவுகளுக்குள் அகப்படாமல்
ஆனந்தமாய் பிரிகிறதே! எப்படி?!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|