சிக்குன் குன்யா கொசுவின் மரபணு வரைபடம் கண்டுபிடிப்பு
ஆதி
சிக்குன் குன்யா. தென் மாநிலங்களையும், தமிழகத்தையும் கடந்த ஆண்டு ஆட்டிப்படைத்த ஒரு விஷக் காய்ச்சல். சிக்குன் குன்யா மட்டுமல்ல, டெங்கு, மஞ்சள் காய்ச்சல் போன்ற மற்ற ஆட்கொல்லி காய்ச்சல்களையும் ஏற்படுத்தும் கொசு ஏடிஸ் எஜிப்டி.
இந்தக் கொசுவை அழிப்பதற்காக விஞ்ஞானிகள் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பொழுது இந்த முயற்சியில் மிக முக்கிய முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. அந்தக் கொசுவின் மரபணு வரைபடம் கண்டறியப்பட்டுள்ளது. வெப்பமண்டல நாடுகளில் 5 கோடி பேரை டெங்கு காய்ச்சல் தாக்குகிறது, மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா, தென்னமெரிக்காவின் சில பாகங்களில் ஆண்டுதோறும் மஞ்சள் காய்ச்சலால் 30,000 பேர் இறக்கிறார்கள்.
இந்தியாவின் பல மாநில மக்களை சிக்குன்குன்யா கடந்து ஆண்டு கலைத்துப் போட்டது. அப்போது 12 லட்சம் பேரை இந்த நோய் தாக்கியது. இப்படி உலகெங்கும் மக்களை ஆட்டுவித்த நோய்களை பரப்பும் மையமாக இந்தக் கொசு செயல்பட்டுள்ளது.
இதுவரை இரண்டு கொசுக்களின் மரபணு வரைபடங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. மலேரியா உருவாகக் காரணமாக உள்ள கிஸீஷீஜீலீமீறீமீs ரீணீனீதீவீணீமீ என்ற அறிவியல் பெயர் கொண்ட கொசுவின் மரபணு வரைபடம் 2002ம் ஆண்டு கண்டறியப்பட்டது. (மனிதனல்லாத ஒரு உயிரினத்தின் மரபணு வரைபடம் முதன்முதலில் கண்டறியப்பட்டது எது என்று பார்த்தால், அது இந்தக் கொசுவின் மரபணு வரைபடமே).
மலேரியாவை பரப்பும் ஒட்டுண்ணியான Plasmodium falciparum என்ற ஒட்டுண்ணியின் மரபணு வரைபடத்தை மற்றொரு குழு அதேநேரம் கண்டறிந்தது.
ஏடிஸ் எஜிப்டி கொசு, அனோபேலஸ் காம்பியே கொசு ஆகிய இரண்டின் மரபணுகள் அமைந்துள்ள விதத்தை ஒப்பிட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். 15 கோடி ஆண்டுகளுக்கு முன் காம்பியே கொசுவில் இருந்து பிரிந்து தனியாக உருவான, மற்றொரு வகைக் கொசுதான் எஜிப்டி வகை. அதன் காரணமாகத்தான் அவற்றின் தோற்றம், உண்ணும் முறையில் இரண்டுக்குமே வேறுபாடு உருவாகியுள்ளது. அவை இரண்டும் ஒரே எண்ணிக்கையிலான மரபணுக்களைப் பெற்றிருந்தாலும், அவை வேறுவேறு நோய்களைப் பரப்புவதற்கும் இந்த கால இடைவெளியே காரணம். கட்டுப்படுத்தப்பட வேண்டிய இந்த இரண்டு கொசுக்களின் மரபணு வரைபடங்கள் கண்டறியப்பட்டுள்ளது பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த கண்டுபிடிப்புகள் வேறுசில விஷயங்களையும் கவனத்துக்குக் கொண்டு வருகின்றன. அறிவுசார் சொத்து உரிமைகள் என்ற பெயரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. உலகின் வெவ்வேறு மூலைகளில் அடிப்படை அறிவியல் கண்டுபிடிப்புகளால் ஏற்பட்ட முன்னேற்றங்கள் தரும் பலன்கள் அனைவருக்கும் கிடைக்கவிடாமல் தடுக்கப்படுகின்றன. பொது நன்மைக்காக உலகிலுள்ள வெவ்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பெரிய அளவிலான அடிப்படை ஆராய்ச்சித் திட்டங்களை இணைந்து மேற்கொள்வது தடுக்கப்படுகிறது.
மக்கள் நலன், உலக முன்னேற்றம் என்பதெல்லாம் புறக்கணிக்கப்பட்டு அறிவியல் வளர்ச்சி, மேம்பாடு என்பது சில தனியார் நிறுவனங்கள் உலகை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், லாபம் சம்பாதிக்கவும் மட்டும் உதவுவதாக இருக்கக் கூடாது. வளர்ச்சியடைந்த நாடுகள், அந்த நாடுகளின் அரசுகளையும், அரசியல் தலைமைகளையும் கட்டுப்படுத்தும் பெரும் நிறுவனங்கள் இப்படி மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்படுகின்றன.
வளர்ச்சியடையாத நாடுகளுக்கு நலநிதிகளையும், கடனையும் வாரி வழங்குவதாக அடையாளப்படுத்திக் கொள்ளும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், பன்னாட்டு நிறுவனங்கள் உடல்நலத் துறையில் ஏற்படும் முன்னேற்றங்களை பகிர்ந்து கொள்ள முன்வராமல் இருக்கின்றன. இது அவற்றின் பேச்சுக்கு நேர்முரணாக இருக்கிறது. மருத்துவ அறிவியல் துறைகளில் ஏற்படும் முன்னேற்றங்கள் உலகையும் இங்குள்ள அனைத்து உயிரினங்களையும் இன்னும் மேம்பட்டதாக்கவும், மனித வளர்ச்சிக்கு உதவுவதாகவும் இருக்க வேண்டும்.
இந்த இரு நோய்பரப்பி கொசுக்களின் மரபணு வரைபடம் கண்டறியப்பட்டதன் உண்மையான பொருள், அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் மக்களைச் சென்றடையும்போது மட்டுமே எட்டப்படும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|