பெரியார் தான் உயிர்த்தெழ வேண்டுமா?
- செந்தில்நாதன்
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சார்லஸ்(43). மின் வாரிய உதவி பொறியாளராக கோவையில் பணியாற்றி வந்தார்.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் அன்னை இந்திரா நகரில் மனைவி சாந்தி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வேலையை உதறி விட்டு சுகமளிக்கும் அற்புதக் கூட்டம் என்ற பெயரில் பிரார்த்தனை கூட்டங்களை நடத்தி வந்தார்.
பாஸ்டர் பட்டம் பெற்ற சார்லஸ் 'தேற்றுவார் ஊழியம்’ என்ற ஜெப அமைப்பை நிறுவி, வெளியூர்களுக்கும் சென்று பிரார்த்தனை கூட்டம் நடத்தி வந்தார். இவரது ஜெபத்தினால் கவரப்பட்ட வெளி நாடு வாழ் இந்தியர் ஒருவர் ஒரு பங்களாவை அளித்துள்ளார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன் சார்லசை பார்க்க அவரது சகோதரர் செல்வகுமார் கோவை வந்தார். சார்லசின் பேச்சில் மயங்கி அவரும் ஊழியத்தில் ஈடுபட துவங்கினார். நீண்ட நாட்களாக செல்வகுமாருடன் தொடர்பு இல்லாமல் போனதால் கோவை வந்த இவர்களின் சகோதரர் ராஜேந்திரன், செல்வக்குமாரின் மனைவி அனுராதா மற்றும் குடும்பத்தினர் சந்தேகத்தில் சார்லசின் வீட்டு பூட்டை உடைத்து பார்த்தனர்.
கதவு உடைத்து ஆட்கள் வருவது கூட தெரியாமல் வீட்டில் ஒரு அறையில் சார்லஸ், மனைவி சாந்தி, அவரது மகள்கள் ஏஞ்சல், லிடியா, சேரோ, மகன் ஸ்டுவக் ஆகியோர் கட்டில் அருகில் அமர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். செல்வக்குமார் கட்டிலில் இறந்து கிடந்தார். உடல் அழுகி இருந்தது.
கதவை திறந்தவுடன் கடும் துர்நாற்றம் வீசியது. அங்கு மர கட்டிலில் செல்வகுமாரின் உடல் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு மேல் ஆனதால் உடல் அழுகிபோய் காணப்பட்டது. அறையின் தரையிலும், சுவரிலும் புழுக்கள் ஓடின. துவாரங்கள் வழியாக மற்ற அறைகளுக்கும் புழுக்கள் வந்துள்ளன.
அதிர்ச்சி அடைந்த அவர்கள் சார்லசிடம் கேட்டபோது, 'ஏப்ரல் 6ம்தேதி பிரார்த்தனைக்காக நான் வெளியூர் சென்றபோது மன பயத் தால் செல்வக்குமார் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இயேசுவின் ஆணையின் பேரில் செல்வகுமார் மீண்டும் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் ஜெபம் செய்வதாகÕ கூறினாராம்.
சார்லஸ் குடும்பத்தினர் இந்த அறையில் தினமும் பகலில் 10 மணி நேரம், முழு இரவு ஜெபம் என விடிய விடிய பிரார்த்தனை செய்து வந்துள்ளனர். அவ்வப்போது பக்கத்து அறையில் ஓய்வெடுத்து, சாப்பிட்டு, தங்கி இருந்துள்ளனர்.
"எனது ஜெப மகிமையால் பல அற்புதங்களை நிகழ்த்தி உள்ளேன். குருடர்களுக்கு பார்வை கிடைத்துள்ளது. முடமானவர்களை நடக்க வைத்துள்ளேன். கேன்சர் போன்ற நோய்களிலிருந்து பலரை குணமாக்கியுள்ளேன். இறந்த எனது தம்பியை மீண்டும் உயிர்ப் பிக்க ஜெபம் செய்தோம். 90 நாட்களில் தம்பியை உயிர்ப்பிக்க முடியும். தம்பி மீண்டும் உயிர்த்தெழுவதற்கான காலகட்டம் வந்தநிலையில் போலீசாரும், குடும்பத்தினரும் கெடுத்துவிட்டனர். தம்பியின் ஆவியுடன் பேசினேன். அவனது கை, கால்களில் அசைவு தெரிய துவங்கியது. அதற்குள் அவனை உயிர்ப்பிக்க முடியாமல் சாகடித்து விட்டனர்" என்று சார்லஸ் திரும்ப திரும்ப கூறினராம்.
பக்தி, மூடநம்பிக்கை என எல்லாவற்றையும் தாண்டி உன்மத்தம் பிடித்துவிட்ட இவர்களிடமிருந்து உலகைக் காக்க பெரியார்தான் மீண்டும் உயிர்த்தெழுந்து வரவேண்டுமோ?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|