பசுமை நாட்கள்
- டாக்டர். ஜி. சந்தானக்குமார்
இப்புவியில் அனைத்து நாடுகளிலும் மக்கட்தொகை பெருகி வருகிறது. அதன் காரணமாக அனைவருக்கும் வேலை, உறையுள், உணவு உற்பத்தியைப் பெருக்குதல் போன்ற காரணங்களினால் தொழிற்புரட்சி ஏற்பட்டது. பொருளாதார முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி என்ற நோக்கில் உலகின் பல பகுதிகளில் இயற்கை வளங்கள் வெகுவாகக் குறைந்தன. விழைவு சுற்றுச்சூழல் மாசு, சூழ்நிலைக்கேடு. இதன் காரணமாக மனித வாழ்க்கைக்கு அச்சுறுத்துதல் ஏற்பட்டுள்ளது.
இப்புவியானது பல்வேறு உயிரினத் தொகுதியினைத் தன்னுள் அடக்கியுள்ளது. அதன் காரணமாகவேதான் இப்புவியினை உயிரினக்கோளம் என்றழைப்பர். உலகின் பல்வேறு பகுதியில் அல்லது வாழிடத்திலுள்ள தாவர விலங்கினங்கள் உயிரினப்பன்மையாக அமைந்துள்ளன. அவை அனைத்தும் மனித பயன்பாட்டிற்குரிய இயற்கை வளங்களை நல்குவதாகத்தான் இருந்து வருகின்றன. இதனை உணர்ந்த அல்லது புரிந்த சான்றோர்கள் நிலத்தினை நான்கு வகையாகப் பிரித்து நானிலம் எனப் பெயரிட்டனர்.
அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனப்படும். குறிஞ்சியும், முல்லையும் அண்மையில் அமைந்ததினால் கோடைகாலங்களில் மாறுதல் அடைந்து பாலை எனப் பெயர்பெற்றது. ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் தனித்தன்மை வாய்ந்த தாவர விலங்கினங்கள் உண்டு. அவை அனைத்தும் மனிதர்களுக்கு வளம் மற்றும் வாழ்வினை நல்குவதாக அமைந்து உள்ளது.
நாடுகளின் வளர்ச்சி என்ற பெயரால் வளிமண்டலத்திலுள்ள பாதுகாப்பு உறையாகிய ஓசோன்படலம் அழிவது, பூமியின் வெப்பஅளவு கூடுவது, நீர் மாசுறுவது போல்வன மிகுந்த வேதனை தருவதாக உள்ளது. மனிதன் உட்பட பல்லுயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கின்ற நச்சுப்பொருட்கள் குறிப்பிட்ட அளவிற்கு மிகுதல், அவைகள் நிலம், நீர், காற்றுச்சூழலில் கலத்தல் என்பது மிகுந்துகொண்டே வருகின்றது. தற்போது பன்னாட்டினரும் தங்களின் வளர்ச்சிப்பாதைகளை, விளைவுகளை சிந்தித்துப் பார்க்க வேண்டிய சூழலில் உள்ளனர். இச்சிந்தனையின்போது பல்வேறான வளர்ச்சி நிரந்தரமான வளர்ச்சிக்கு (Sustainble growth) வழிகோலுகின்றதா என்ற கேள்வியினை எழுப்பி விடைகாண முயலுதல் வேண்டும்.
எதிர்வரும் காலங்களில் நாம் நமது வளர்ச்சிக்கு என்று வகுக்கும் திட்டங்கள் அனைத்தும் சூழியலைப் பசுமையாக்குகின்ற திட்டம் என்ற அணுகுமுறையோடு செயல்பட வேண்டும். இந்த அணுகுமுறைக்கு உலகளவிலான சூழியல் பிரச்சனைகள் குறித்த புதிய சிந்தனைகளும் இடம்பெற வேண்டும். இவற்றைப் பற்றிய விழிப்புணர்வு மக்களை அடைய வேண்டும் என்ற நோக்கில் சுற்றுச்சூழல் அவற்றின் வளங்கள் பற்றிய விழிப்புணர்வினைத் தூண்டுவதற்காக சுற்றுச்சூழல் தினங்கள் என்ற சிந்தனை உலகில் எழுந்தது. அவை பற்றிய சிந்தனை சூழல்வளம் பேணுவதாக அமைகின்றன.
இந்த நிலையில் உலகின் பல நிறுவனங்கள் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காகப் பல நாட்களை நினைவுகூர்ந்து சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுகின்றனர்.
அத்தினங்கள் சுற்றுச்சூழல் தொடர்பான உலகளவிய கூடுதலாகவும், சூழியல்மாற்றங்கள் பற்றிய சிந்தனைக் கூட்டங்களாகும்.
அவை :
1. உலக சதுப்புநில நாள் - பெப்ரவரி 2
2. உலக வனநாள் - மார்ச்சு 21
3. உலக நன்னீர்/நீர் நாள் - மார்ச்சு 22
4. உலகப் பாரம்பரிய நினைவு நாள்/உலகப் புவி நாள் - ஏப்ரல் 22
5. உலக பயிரினப் பன்மய நாள் - மே 22
6. உலக சுற்றுச்சூழல் நாள் - சூன் 5
7. பாலைவனம் ஆவதினைத் தடுத்தல் நாள் -சூன் 17
8. உலக மக்கள் தொகை நாள் - சூலை 11
9. ஓசோன் நாள் - செப் 16
10. உலக வாழிட நாள் (உலகக் குடியிருப்பு நாள்) - அக்டோபர் முதல் திங்கள்
11. வன உயிரின நாள்/உயிரின வாரம் - அக்டோபர் 2 முதல் அக் 7 வரை
12. தேசிய மாசுக்கட்டுப்பாட்டு நாள் - டிசம்பர் 2
13. தேசிய (மின்) ஆற்றல் சேமிப்புநாள் - டிசம்பர் 14
இந்நாட்கள் அனைத்தும் சுற்றுச்சூழல் தொடர்பாகவும், அச்சூழல் மேம்பாடு அடையவும் சிந்தனை செய்தலுக்காகவும், அதுதொடர்பாக பல வல்லுனர்கள் கூடி அன்று சிந்திக்கப்பட்ட தினம். எனவே அதன் முக்கியத்துவத்தை உணர்ந்த அன்று கடைப்பிடிக்கப்படுகின்றது.
எடுத்துக்காட்டாக மார்ச்சு 21, 1971 ஆண்டு ஐரோப்பாவின் வேளாண்ம்ைப் பொதுக்கூட்டமைவு கூடியது. அதன் நினைவாக, அன்று உலக வனநாள் கொண்டாடுவது முடிவு செய்யப்பட்டது. அந்தநாள் சூரியன் பூமத்தியரேகையினை கடந்து பகலிரவு சமமாக அமைவதுமாகும். அதுவுமல்லாது வனங்கள் மனிதகுலத்திற்கு நல்கும் நன்மையினைப்புரிந்து அவற்றைப் பேண வேண்டும் என்ற சிந்தனை எழுதல் வேண்டும் என்ற நோக்கோடு அந்நாள் உறுதி செய்யப்பட்டது.
ஸ்விடனின், ஸ்டாக்கோம் நகரத்தில் 1972 ஆண்டு சூன் 5 தேதி உலகெங்கிலும் உள்ள அரசுப்பிரிதிகள் கூடி சுற்றுச்சூழல். மனிதன் உறவு பற்றி கரிசனம் எழுந்தது. இதில் சூழல் பாதுகாப்பு, வளங்கள் பேணுதல், போன்ற சிந்தனையோடு "சூழல் அழிவில்லா வளர்ச்சி வேண்டும்" என்றனர். எனவே சூன் 5 உலக சுற்றுச்சூழல் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
இங்கு கூறப்பட்டுள்ள ஒவ்வொரு நாட்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாட்களாகும். அவற்றின் சிறப்பினைப்புரிந்து, அந்த நாட்களின் முக்கியத்தினைப் பகிர்ந்து சூழல் பேணுவோமாக!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|