சீராகட்டும் தாமிரபரணி
- கு.ம. இராசேந்திரன்
மாநில எல்லை தாண்டி வரும் நீரெல்லாம் மனமாச்சரியங்களால் தடுக்கப்படும் சூழலில் தங்கத் தமிழகத்துக் கிடைத்த சத்தான சொத்தான தாமிரபரணி ஆற்றின் நிலை என்ன?
நெல்லுக்கு வேலி கட்டிக்காத்ததால் நெல்லையப்பர் என்ற வரலாற்றுக்கு உயிர் கொடுத்தது தாமிரபரணி நதி நீரல்லவா. அப்படிப்பட்ட நதி நீர் இன்று நாற்றமெடுக்கும் சகதி நீராக மாறிடல் முறையோ?
அரிதான மானுடர் நாமென்றால் அருமையான தாமிரபரணி நதி சிறுமையமைந்ததேனோ? தாமிரபரணி நதிநீர் மனிதர்களுக்கு உடலையும், உள்ளத்தையும் அறிவையும் வளர்த்திடும் ஓர் அரிய மருத்துவ குணமுள்ளதென்பதை நாம் எத்தனை பேர் அறிந்திருக்கின்றோம்?
40, 50 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த அருமையான நதி எப்படி இருந்தது தெரியுமா? ஒரு பெண்ணை சீவி முடித்துச் சிங்காரிப்பது போல், ஒவ்வொரு ஆண்டும், அதன் உள்ளும், கரையோரங்களிலும் தடையாகத் தோன்றும், முள்செடிகள், தடை ஏற்படுத்தும் சகதிகள், தூர்வாரப்பட்டு (வாரி சீவியது) கரைகள் செப்பனிட்டுள்ள காட்சிக்கு சாட்சியாகத்தான் சீவி முடித்து சிங்காரித்த பெண்ணின் உதாரணமாகும்.
இது தமிழகத்தின் ஓடுகின்ற அனைத்து நதிகள், அணைகள், ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் என அங்கெங்கெனாதடி எங்கும் தூர்வாரும் பணிகள் தவறாது நடைபெற்று வந்துள்ளன. ஆறுகளின் கரை ஓரங்களெல்லாம் பசுஞ்சோலைகளாக பாடித்திரியும் பறவைக்கூட்டங்களாக கண்கொள்ளா காட்சியாக இருக்கும், அதற்கு பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக் காலம் ஓர் சாட்சிக்காலமாகும்.
குளங்கள், ஏரிகளிலிருந்து வண்டல் மண் மற்றும் பாசிகளை விவசாயிகள் எடுத்து வயல்களுக்கு இட்ட காலம் அது. எல்லா நீர் நிலைகளும், ஆழம் குறையாமல் இருந்ததால் நிலத்தடி நீரும் குறையாது இருந்துள்ளது.
தாமிரபரணி என்றில்லை எல்லா இடங்களிலும் அணைகள், ஆறுகள், குளங்களை சீரமைப்பது பெரும்பணியாகும்.
காடுவளர்ப்புத் திட்டங்களுக்காக கோடி கோடியாக கொட்டப்பட்டும், சோலைவனங்களுக்கு பதில் பாலைவனங்களே பெருகிக் கொண்டிருக்கிறது. அதை அப்படியே திருப்பி, ஆறுகள், அணைகள், குளங்களின் கரையோரங்களை செப்பனிட்டு மரங்களை நட்டுப் பாதுகாக்கும் பணிகளில் வேலை இல்லாத இளைஞர்களை விவசாயிகளை ஈடுபடுத்தி, ஒருவருக்கு இத்தனை மரங்கள் வளர்க்கும் பொறுப்பு என 5 ஆண்டுகள் தேவைப்பட்டால் ஒன்றிரண்டு ஆண்டுகள் அதிகரிக்கச் செய்தால் பாலைவனங்கள் மாறி சோலைவனங்கள் உருவாகும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|