சர்வதேச சாளரம்
அர்ச்சனா
இஸ்லாமிய வங்கியியல்
இஸ்லாமிய வங்கியியல் ஒரு வளர்ந்து வரும் துறையாக மாறியுள்ளது. ஷரியத் சட்டங்களுக்கு உட்பட்டு பணப் பரிவர்த்தனைகளை நடத்த பல வங்கிகள் முன் வருகின்றன. ஜெர்மன் நாட்டின் மிகப்பெரும் வங்கி ஒன்று பஹ்ரைன் துபாய் நாடுகளைச் சேர்ந்த வங்கிகளுடன் இணைந்து 200 கோடி டாலர் மதிப்புள்ள ஷரியத் சட்டங்களின்படி நடத்தப்படும் வங்கி ஒன்றைத் துவங்கியுள்ளது. சிட்டி பேங்க், எச்.எஸ்.பி.சி. பதுர் போன்ற வங்கிகளும், தங்கள் சேவைகளை வட்டியற்ற இஸ்லாமிய பணப் பரிவர்த்தனை அமைப்புக்கு மாற்றி வருகின்றன. உலகின் மொத்த இஸ்லாமிய வங்கியியல் பரிவர்த்தனைகள் 20,000 முதல் 50,000 கோடி டாலர் எனவும், வருட வளர்ச்சி விகிதம் 10ரூ எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகள் மட்டுமல்லாது, சுவிட்சர்லாந்து, மலேசியா போன்ற நாடுகளும் இஸ்லாமிய பொருளாதாரத்தின் மையமாக விளங்குகிறது.
இஸ்லாமிய வங்கியியல் நிறுவனங்கள் வட்டி வாங்குவதோ, கொடுப்பதோ கிடையாது. மேலும் சூதாட்டம், மதுபான உற்பத்தி போன்றவைகளுக்கு கடன் வழங்குவதும் இல்லை. வட்டி வாங்கா விட்டாலும், இவை தொண்டு அமைப்புகளாகவும் இல்லை. தொண்டு நிறுவனங்களாக இல்லாவிட்டாலும், இந்நிறுவனங்கள் பொருளாதார எற்றத் தாழ்வுகளை சீராக்க உதவுகின்றன. பேராசையை ஒழிக்க உதவுகிறது என்கிறார் மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகப் பேராசிரியர் எங்கு ராபியா அடாவிய எங்கு அலி.
துணிகம்
‘ஃபென்டி’ என்ற பெயரில் ஆடம்பரப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனம் எல்வி எம் ஹெச், அமெரிக்காவின் மிகப்பெரும் சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் 4ன் மேல் வழக்கு தொடர்ந்துள்ளது. தனது பெயரைப் பயன்படுத்தும் போலி பொருட்களை விற்பனை செய்வதாக வால்மார்ட்டை குற்றஞ் சாட்டியுள்ளது. “ஓரிஜினல்” என்ற பெயரோடு 70ரூ தள்ளுபடி விலையில் போலிப் பொருட்களை விற்பதாகக் குற்றச்சாட்டு, வால்மார்ட் 925 மதிப்புள்ள கைப்பையை 295.03 டாலருக்கு விற்பதாகக் குற்றஞ் சாட்டியுள்ளது. இன்னொரு பிரெஞ்சு சில்லரை வர்த்தக நிறுவனம் ‘கேர்ஃபோர்’ம் இதே போன்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது. இந்நிறுவனம் சீனாவில் தயாரிக்கப்பட்ட போலி கைப்பைகளை விற்பதாகக் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் நஷ்ட ஈடுவழங்கவும், போலிப் பொருட்களை அழிக்கவும் உத்தரவிட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நமது நாட்டில் சில்லரை வர்த்தகத் துறையின் அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டதும் இங்கு கால் பதிக்க துடித்துக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.
நமது நாட்டிலும், உலகின் பல நாடுகளிலும், வங்கியியல், ஆயுள்காப்பீடு ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் ஐ.என்.ஜி. நிறுவனம் 18 கோடி டாலர் ஊழல் வழக்கொன்றை அமெரிக்காவில் சந்திக்கிறது. ‘நியு ஹாம்ப் ஹையர் டென்ஷன் திட்டம்’ என்ற இந்நிறுவனத்தில் திட்டத்தில் மோசடியாக நடந்து கொண்டதாக குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி முதலீடு செய்வது, முறைகேடான வணிக நடத்தைகள் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஐ.என்.ஜி. பொருளாதார ஆலோசகர்கள் என்ற நிறுவனமும், ஐ.என்.ஜி. ஆயுள் காப்பீடு மற்றும் பென்ஷன் நிறுவனம் என்ற ஐ.என்.ஜி. நிறுவனங்கள் மீது அரசு விசாரணை மேற்கொண்டு 100கோடி டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொலிவியா
வறுமை ஒழிப்பு மற்றும் வேலைவாய்ப்புப் பெருக்கத்திற்கான தீவிரத் திட்டம் ஒன்றை பொலிவிய அரசு அறிவித்துள்ளது. சுமார் 1700கோடி டாலர் செலவிடப்படும் இத்திட்டம் பலபொதுப் பணிகளை உள்ளடக்கியது. வருடத்திற்கு ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை அடுத்த 5 வருடங்களுக்கு உருவாக்கும் இத்திட்டம் பள்ளிகளில் உணவு வழங்கும் திட்டத்தையும், நாட்டிற்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தையும் உள்ளடக்கியது. வறுமை ஒழிப்பிற்காகவும், ஏழை, பணக்காரர் இடைவெளி குறையவும் மேலும் பல திட்டங்களை அறிவித்திருக்கும் அதிபர் இவோமொரோல்ஸ் இதற்கான வருவாய், சமீபத்தில் தேசியமயமாக்கப்பட்ட எரிவாயு வயல்களிலிருந்து கிடைக்கும் என்கிறார். நிலச் சீர்திருத்தம் மூலம் முதல்கட்டமாக 30,000கி.மீ. நிலம் ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் நிலப்பரப்பில் பிரித்து வழங்க 1/5 பிரித்து பங்கு என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கால்பந்து
சுமார் 1000 டச்சு கால்பந்து ரசிகர்கள் நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியை வெறும் உள்ளாடைகளுடன் அமர்ந்து பார்க்க வேண்டியதாயிற்று. காரணம் இவர்கள் அணிந்து வந்த ஆடையில் ஒரு டச்சு மதுபானக் கம்பெனியின் சின்னம் பிரதானமாக இருந்தது. ஒரு அமெரிக்க மதுபான நிறுவனம் அரங்கினுள் விளம்பரம் செய்வதற்கான முழு உரிமையைப் பெற்றிருந்ததால், மற்ற நிறுவனங்களின் சின்னங்களுக்கு அனுமதியில்லை. எனவே ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரையும் டச்சு மதுபான நிறுவனத்தின் சின்னத்தை அகற்றிவிட்டு வரக் கேட்டுக் கொண்டனர். வேறு உடை இல்லாத நிலையில் ரசிகர்கள் வெறும் உள்ளாடைகளுடன் அமர்ந்து போட்டியைக் கண்டு களித்தனர். ஒரு விளம்பர யுத்தத்தை முறியடித்து விட்டதாக ‘பிபா’ கூறிக்கொள்கிறது.
சூரியமின்சக்தி
உலகின் மிகப்பெரும் சூரிய ஒளி மின்சக்தி ஆலையை போர்ச்சுக்கல் நாடு 5கோடியே 50 லட்சம் யூரோ செலவில் அமைத்துள்ளது. 11 மெகாவாட் திறன் கொண்ட 150 ஏக்கர் ஆலை 8000 வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும். 30,000டன் கரியமிலவாயு உற்பத்தியைத் தடுக்கும் இந்த ஆலை சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதோடு, நாட்டை ஆற்றல் சயசார்புடையதாகவும் மாற்ற வல்லது. காற்று, அலை, நீர் ஆகியவற்றிலிருந்தும் மின்சாரம் தயாரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
வியட்னாம்
வியட்னாமில், பள்ளிகளில் பரிட்சையில் காப்பியடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. செல்போன்கள், தலையில் அணியும் நீளமான பொய்த் தலைமுடிகள் (wige) என புதுமையான முறைகளில் காப்பியடிக்கின்றனர். காப்பியடிக்க உதவும் ஏராளமான கும்பல்கள் உள்ளன. சமீபத்தில் ஒரு ஆசிரியர் மாணவர்கள் காப்பியடிப்பதை வீடியோ படம் எடுத்ததன் மூலம் இப்பிரச்சனை அதிகாரப் பூர்வமாக வெளிவந்துள்ளது.
வியட்னாமின் கல்வி முறை, குறிப்பாக பல்வேறு புள்ளி விபரங்கள் கொண்ட நீண்ட பாடங்களை மனப்பாடம் செய்து தேர்வில் ஒப்பிக்க வேண்டி இருப்பது போன்றவை, அதிக மார்க் வாங்க வேண்டும் என்ற பெற்றோரின் உந்துதல், மார்க் அதிகமானவர்களுக்கு உதவித் தொகை போன்றவை காப்பியடிக்க தூண்டுதலாக இருப்பதாகக் கல்வியாளர்கள் கூறுகின்றனர். கடும் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அரசு கூறிக் கொண்டாலும், தற்போது கையறு நிலையில் இருக்கிறது என்பதே உண்மை.
கத்தோலிக்க திருச்சபை
கத்தோலிக்க ஆர்ச்பிஷப் இம்மானுவேல் மிலிங்கோ, மதகுருமார்களுக்கு திருமணம் செய்து கொள்ள அனுமதி கோரியுள்ளார். திருச்சபை மணமான மதகுருக்களை ஏற்றுக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது என பத்திரிகையாளர்களிடம் கூறிய அவர் திருமணம் செய்து கொண்டதற்காக தண்டிக்கப்பட்ட மதகுருமார்களை, ‘கத்தோலிக்கச் சிறைகளிலிருந்து’ வெளியே வந்து பொறுப்புகளை எற்றுக் கொள்ளுமாறு அறைகூவல் விடுத்துள்ளார்.
லுசாகா ஆர்ச் பிஷப் ஆக பணியாற்றி வந்த இம்மானுவேல் மிலிங்கோ, கடந்த 2001ம் ஆண்டு காணமல் போய்விட்டார். பின் நியு பார்க் நகரில் 43 வயதான தென்கொரிய அக்குபஞ்சர் நிபுணரான மரியாசங் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். சபையிலிருந்து வெளியேற்றப் போவதாக எச்சரிக்கட்டபின், திருமணமான 4 மாதங்களுக்குப் பின் திருமணத்தை ரத்து செய்து பணிக்கத் திரும்ப விருப்பம் தெரிவித்தார். போப் இரண்டாம் ஜான்பால் அவர்களின் தலையீடு காரணமாக ஒரு வருட பயிற்சிக்குப் பின் ரோம் நகருக்கு அருகில் மாற்றப்பட்டார். காதலில் வீழ்ந்த மத குருமார்கள் மனநோயாளிகளாக மாறும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்று கூறிய அவர் தான் திருச்சபையை விட்டு வெளியேறுவதை விட அதை மாற்ற முயற்சிப்பதாக பத்திரிகையாளர்களிடம் கூறினார். ‘அதிர்ச்சியடைந்த’ திருச்சபை ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாகத் தெரியவருகிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|