விரல்கள் பத்தும் மூலதனம் - நூல் விமர்சனம்
இரா. இரவி
வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்
மேற்குறித்த வரிகள் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்ட அற்புதக் கவிஞர் தாரா பாரதியின் வைர வரிகளையோ நூலிற்கு பெயராக சூட்டிய பேராசியருக்கு முதல் பாராட்டுக்கள். நூலின் பெயரை வைத்தே இந்நூல் தன்னம்பிக்கை விதை விதைக்கும் சுயமுன்னேற்ற நூல் என்பது விளங்கி விடுகின்றது. இந்நூல் பிரபல இதழ்களில் பிரசுரமானவைகளும், பிரசுரமாகாத புதியவைகளும் மொத்தம் 60 கட்டுரைகள் அத்தனையும் முத்திரை பதிக்கும் கட்டுரைகள். சிந்தனை விதை விதைக்கும் அறிவார்ந்த கட்டுரைகள். நூலாசிரியர் இரா.மோகன், மு.வ. அவர்களின் செல்லப் பிள்ளை என்பதால் கட்டுரை எப்படி எழுத வேண்டும் என்பதை எளிதாக பயிற்றுவிக்கின்றார். எழுத்துலகில் கால் பதிக்க விரும்புகிறவர்கள் அவசியம் படித்து அறிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள நூல்.
இவரின் நடை தனி நடை வேறு எவரின் நடையும் பின் பற்றாமல் தனக்கென தனி பாணி அமைத்துக் கொண்டு எப்படி ஒரு கட்டுரையை வடிவமைக்க வேண்டும் என்பதை உணர்ந்து சிற்பி சிலை செதுக்குவது போல மிகவும் கவனமாக செதுக்கி இருக்கிறார்கள். ஒப்பிலக்கியத் துறைத் தலைவராக இருக்கின்ற காரணத்தால் மொழிப் புலமை, இலக்கியப் புலமை அனைத்தும் இருப்பதால் பல நூல்கள் படித்துப் பட்டறிவின் காரணமாக அற்புத மாக வடித்து இருக்கிறார். இந்நூல் ஒரு நூல் படித்தால் நூறு படித்த இன்பம் கிடைக்கின்றது. பிழிந்து கொடுத்த பழச்சாறு போல இனிமையாக உள்ளது. மு.வ. முதல் கல்கி, கு.ப.ரா. புதுமைப்பித்தன், கண்ணதாசன், என்.எஸ். கிருஷ்ணன் வரை படம் பிடித்து காட்டி இருக்கிறார். இவர்களை பற்றி அறிந்திராக இளைய சமுதாயம் அறிந்து கொள்ள வாய்ப்பாக உள்ளது. ஒவ்வொருவரிடமும் உள்ள தனிச் சிறப்புகளை நம் கண் முன் காட்சி போல கொண்டு வந்து விடுகிறார். இதுவே நூலின் வெற்றியாகும். ஜென் கதைகள் முதல் ஆனந்த விகடன் முத்திரைக் கவிதைகள் வரை எதையும் விட்டு வைக்கவில்லை. அலசி ஆராய்ந்து இருக்கிறார். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் நறுக்குகளில் நெஞ்சம் கவர்ந்த கவிதைகளை தொகுத்து கவி விருந்து வைத்துள்ளார்.
திரைப்படச் சுவரொட்டியை
தின்ற கழுதை கொழுத்தது
பார்த்த கழுதை புழுத்தது
இந்த ஒரு கவிதை போதும் திரைப்படத் துறையின் பண்பாட்டு சீரழிவை படம் பிடித்துக் காட்டும், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல ஒரு நறுக் கவிதை.
குழல் இனிது யாழ் இனிது என்ப
யாழ்ப்பாணத் தமிழ் கேளாதவர்
இது நூலாசிரியரின் பொன் மொழி. இம்மொழியில் உள்ள உண்மை யாழ்ப்பாணத் தமிழர் களின் தமிழ் கேட்டவர்களுக்கு நன்கு விளங்கும். புலம் பெயர்ந்த தமிழர்கள் பலருடன் நல்ல நட்பு இருக்கின்ற காரணத்தால் உணர்ந்த காரணத்தால் மிகவும் ரசித்துப் படித்தேன் நூலாசிரியர் பொன் மொழியை. அவருடைய நேர் முகத்தையும், இந்நூலில் கேள்வி பதில் வடிவில் அப்படியே பதிவு செய்திருப்பது நூலிற்கு தனிச் சிறப்பு. நூலாசிரியரின் திறமையை தரணிக்கு பறை சாற்றுகிறது.
நூல் : விரல்கள் பத்தும் மூலதனம்
ஆசிரியர் : பேரா. இரா. மோகன்
வெளியீடு : அறிவகம்,
7/705, ஆழ்வார் நகர்,
நாகமலை, மதுரை/19.
விலை: ரூ.80/- பக்கம்: 265
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|