தலையங்கம்
'வெட்டிச் சிதைத்த பாடல்... எப்படி தேசபக்திப் பாடலாகும்?’
நிறுவனர் எஸ். ராஜா ஹாசன்
தேசபக்திப் பாடல் என்று கருதப்படுகின்ற வந்தேமாதரம் பாடல் இந்தியச் சூழலில் அறிமுகமாகி 100 வருடங்கள் ஆவதை ஒட்டி எழுந்திருக்கும் சர்ச்சை தேசம் முழுவதும் மீண்டும் ஒரு விவாதத்தை கிளப்பியிருக்கிறது. இந்திய அரசியல் மதத்தின் பெயரிலான வகுப்புவாதத்தில் சிக்குண்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும் நாம் இதை வரையறை செய்து கொள்ளலாம்.
வந்தேமாதரம் பாடல் ஆனந்த மடம் என்ற நாவலில் இடம் பெறுகின்ற பாடல். இந்த நாவலை எழுதியவர் பக்கிம் சந்திர சட்டர்ஜி. இந்த நாவல் உருவான பின்னணி இந்தியாவில் வெள்ளை ஏகாதிபத்தியம் தன் காலனி வலையை விரிக்கத் தொடங்கிய போது அது முதலில் வங்காளத்தை குறிவைத்தது. வங்காளத்தில் அதிகாரத்தில் இருந்த ஜமீன்களையும் நிலப்பிரபுக்களையும் தோல்வி அடையச் செய்தது வெள்ளை ஏகாதிபத்தியம். இந்தச் சூழலில் காலனி ஒடுக்குமுறையை எதிர்த்து இந்து சன்னியாசிகளும் முஸ்லிம் பக்கிர்களும் இணைந்து போரிட்டார்கள். வரலாறு இதை பக்கிர்கள் சன்னியாசிகள் கலகம் என்று மதிப்பிடுகிறது.
இரண்டு சமூகங்களும் இணைந்து போரிட்ட வரலாற்றை மிகத் திட்டமிட்டு திரித்து இந்து சன்னியாசிகள் முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கெதிராக போராடிய போராட்டமாக ஆனந்த மடம் நாவலை சட்டர்ஜி உருவாக்கினார். சட்டர்ஜியைப் பற்றி மதிப்பிடுகின்ற ஆய்வாளர்கள் அவரை ஒரு முஸ்லிம் விரோதியாகவே மதிப்பிடுகின்றார்கள். இந்திய தேசியம் என்பதை இந்து தேசியமாக வரையறை செய்தவர் சட்டர்ஜி. சட்டர்ஜி தேசபக்தியை மதமாகவும்; மதத்தை தேசபக்தியாகவும் மாற்றிவிட்டார் என்று ஆய்வாளர் மஜுந்தாம் குறிப்பிடுகின்றார்.
இந்த நாவலின் கடைசிப் பகுதியில் சன்னியாசிகளின் தலைவனாக வருகின்ற சத்தியானந்தாவிற்கும் அந்த நாவலில் வருகின்ற தெய்வ உருவுக்கும் நடைபெற்ற உரையாடலாக ஒரு பகுதி வருகிறது. அதில் தெய்வ உரு சொல்லும் முஸ்லிம்களை நாம் ஆட்சியில் இருந்து விரட்டி விட்டோம். எனவே ஆயுதங்களை கீழே போடுங்கள் என்று. அப்பொழுது இந்த சன்னியாசிகளின் தலைவன் திருப்பிக் கேட்பார், ஆங்கிலேயர்கள் இருக்கின்றார்களே என்று. அப்போது அந்த தெய்வ உரு சொல்லும் ஆங்கிலேயர்கள் நமது நண்பர்கள் மட்டுமல்ல; அவர்கள் நமது ஆட்சியாளர்கள் என்று. அடிப்படையில் இந்த நாவல் ஆங்கில ஆட்சி எதிர்ப்பு நாவல் அல்ல. முஸ்லிம் எதிர்ப்பு நாவல். இந்த நாவலில் ஒரு இடத்தில் ஒரு பகுதி வரும் முஸ்லிம்கள் நம்முடைய மதத்தை, நம்முடைய சாதியை, நம்முடைய கௌரவத்தை சிதைத்து விட்டார்கள். எனவே அவர்களை அழித்தொழிப்பது எப்போது? அது போல முஸ்லிம் மசூதிகளை இடித்து அந்த இடங்களில் கோயில் கட்டுவது எப்போது? என்று.
இந்த நாவலில் வரக்கூடிய வந்தே மாதரம் பாடல் நான்கு பகுதிகளைக் கொண்டது. அதில் மூன்றாவது பகுதி இந்தியத் தாயை காளியாகவும், நான்காவது பகுதி துர்க்கையாகவும் சித்தரிப்பது. இதுபற்றிய சர்ச்சை உருவானபோது 1938ல் கூடிய காங்கிரஸ் ஒர்க்கிங் கமிட்டி கடைசி இரண்டு பகுதியை தவிர்த்து விடலாம் என்று சொன்னது. வரலாற்று ஆய்வாளர் ஏ.ஜி.நுரானி சொல்கிறார் வெட்டி சிதைக்கப்பட்ட ஒரு பாடல் எப்படி எல்லாருக்கும் பொதுவாக இருக்க முடியும் என்று.
மதவெறியை அடிப்படையாகக் கொண்ட இந்திய விடுதலை என்பதை இந்து விடுதலையாக மதிப்பிடக்கூடிய சட்டர்ஜியின் பாடலைத்தான் எல்லா பள்ளிகளிலும் பாடுவதற்கான குரலை பாரதீய ஜனதா உருவாக்க நினைக்கிறது. இந்திய அரசியலில் தொடர்ந்து சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கக் கூடிய பாரதீய ஜனதா இதன் வழியாக மீண்டும் தனக்கான இடத்தை உருவாக்க முயற்சிக்கிறது. இந்துத்துவ வைதீக எதிர்ப்பில் சமரசமற்ற யுத்தம் செய்த தந்தை பெரியாரின் ஆட்சியை நடத்தக் கூடிய தி.மு.க. அரசும் வந்தே மாதரம் பாடலை பாடச் சொல்கிறது (தினகரன் மதுரை பதிப்பு ஆகஸ்டு 31). அதே வேளையில் பாராளுமன்ற வளாகத்தில் காந்தி சிலையின் முன்பு செப்டம்பர் 7 அன்று வந்தே மாதரம் பாடுவதற்கு அனுமதி கோரிய பி.ஜே.பி. சிறுபான்மை பிரிவுக்கு சபாநாயகர் அனுமதி மறுத்துள்ளார். மேற்குவங்க முதல்வர் வந்தே மாதரம் பாடலை பாடுவதை கட்டாயமாக்குவதை கடுமையாக விமர்சித்துள்ளார். முலாயம்சிங் யாதவும் இதை கட்டாயமாக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
வந்தே மாதரம் பாடலை நிராகரிக்கின்ற முஸ்லிம்கள் இதனுடைய பண்பாட்டு அரசியலை பற்றிய அக்கரையின்றி இஸ்லாமிய மரபுப்படி `இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டோம்’ என்ற வெறும் சமய வார்த்தை சார்ந்த விவாதமாகவே இதை முன்னெடுக்கின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் இந்தப் பாடலை அதனுடைய உள் கிடக்கையாக இருக்கின்ற இந்துத்துவ அரசியலை கட்டவிழ்ப்பதும் அதற்கெதிரான குரலை வலுப்படுத்துவதும் காலத்தின் தேவையாக உள்ளது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|