இந்துத்துவ அரசியல்
சீக்கியர் படுகொலைகளும் ஆர்.எஸ்.எஸ்.சும்
எம். அசோகன்
பிரதமர் இந்திரா காந்தியை 1984 -ல் அவரது இரண்டு மெய்க்காவலர்கள் சுட்டுக் கொன்றனர். கொலைகாரர்கள் இருவரும் சீக்கியர்கள். ‘அதனால்’ நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 10,000 பேர் என்று ஒரு கணக்கு சொல்கிறது. தலைநகர் டெல்லியில் மட்டும் 3,000 பேர்.
இக் கொடூரம் குறித்து விசாரிக்க எட்டு கமிஷன்கள் அமைக்கப்பட்டு ஒன்பாதாவதாக கடந்த பாஜக ஆட்சிக் காலத்தில் நானாவாதி கமிஷன் அமைக்கப்பட்டது. சீக்கியர்களுக்கு எதிரான ‘கலவரங்களை’ விசாரிக்குமாறு தான் அதற்குச் சொல்லப்பட்டது. ஆனால் இவை கலவரங்கள் அல்ல ‘திட்டமிட்ட இனப்படுகொலை’ (ஆர்கனைஸ்டு ஜுனோசைட்) என்று அத்வானி கூறியுள்ளார்.
அது சரிதான். அதிலொன்றும் சந்தேகமில்லை. ஆனால் ஏன் திட்டமிட்ட இனப் படுகொலையை விசாரியுங்கள் என்று அவர் துணைப் பிரதமராக இருந்த அரசாங்கம் சொல்லவில்லை? நானாவதி அறிக்கை வந்த பின்பு தான் அவருக்கு ஞானோதயம் வந்ததா? இக்கேள்விகளுக்கு அவரிடம் பதிலில்லை.
உண்மையில் அது இனப் படுகொலையல்ல. மதப் படுகொலை. அவர்கள் பஞ்சாபியர்கள் என்பதற்காகக் கொல்லப்படவில்லை. சீக்கிய மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்பதற்காகக் கொல்லப்பட்டனர். குருத்வாராக்கள் தாக்கப்பட்டன. இதர சீக்கிய மதம் சம்பந்தப்பட்ட இடங்கள் தாக்கப்பட்டன. ‘இந்து’ மதத்தைச் சேர்ந்த இந்திரா காந்தியை ‘சீக்கிய’ மதத்தைச் சேர்ந்த இருவர் கொன்றதற்காக ஒரு பாவமும் அறியாத ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் வேட்டையாடப்பட்டனர்.
இப்படுகொலைகளில் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமே ஈடுபட்டதாக இன்றுவரை பொதுவாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால் வேறு பாசிச மற்றும் வகுப்புவாத சக்திகளும் அதில் ஈடுபட்டன என்பது தான் உண்மை. யாரென்று இந் நேரம் புரிந்திருக்க வேண்டும். ஆம்; இந்து வகுப்புவாதிகள் தான்.
படுகொலை நடத்தப்பட்டவிதமும், சீக்கியர்களும், அவர்களது வழிபாட்டு தலங்களும், சொத்துகளும் தாக்கி அழிக்கப்பட்ட விதமும் உறுதி செய்கின்றன. இவ்விஷயத்தில் ‘காங்கிரஸ் குண்டர்களுக்கு’ பயிற்சி எதுவும் அளிக்கப்படுவதில்லை. ஆனால் ஆர்எஸ்எஸ்சுக்கோ அதுதான் வேலை. அதில் அவர்கள் எவ்வளவு கைதேர்ந்தவர்கள் என்பதை 2002 -ல் குஜராத்திலும், 1992-93ல் மும்பையிலும் கண்டோம்.
மேலும் டில்லியின் பல காவல் நிலையங்களில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மீது எப்.ஐ.ஆர்.கள் போடப்பட்டுள்ளன. இன்றைய பிரதமர் மன்மோகன்சிங் கடந்த மக்களவைத் தேர்தலின் போது இதைத் தெரியப்படுத்தியுள்ளார்.
ஆனால் இப்போது நானாவதி கமிஷன் அறிக்கை வெளியே வந்த பின்பு பாஜகவினர் பெரும் கூச்சல் போட்ட போது ஏன் காங்கிரஸ்காரர்கள் இவ்வுண்மையை பெரிய அளவிற்கு எடுத்துச் சொல்லவில்லை என்பது புரியாத புதிர். அமைச்சர் கபில்சிபல் மட்டுமே பேசினார். ஆனால் அது பெரிதாக யாராலும் கண்டு கொள்ளப்படவில்லை.
குஜராத்தையும், மும்பையையும் சுட்டிக்காட்டி டெல்லியைப் பற்றிப் பேச சங்பரிவாரத்திற்கு அருகதை இல்லை என்று தான் பேசினார்களே தவிர டெல்லி விஷயத்திலேயே அவர்கள் குற்றவாளிகள் தான் என்பதை அம்பலப்படுத்தியிருக்க வேண்டாமா?
மேலும் குஜராத்தைப் பற்றி காங்கிரஸ் பேசியபோதெல்லாம் ‘டெல்லியைச்’ சேர்ந்த காங்கிரசுக்கு இதைப் பற்றிப் பேச உரிமை இல்லை என்று கூறி குஜராத்தை நியாயப்படுத்தினார்களேயொழிய ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தினர் உளப்பூர்வமாக சீக்கியர்கள் படுகொலையைக் கண்டிக்கவில்லை. காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு அக் கொடூரத்தைப் பயன்படுத்திக் கொண்ட வகுப்புவாதிகள் உண்மையில் சீக்கியர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தியவர்கள்.
இந்திராகாந்தி கொலைக்குப் பின் சில நாட்களில் ஆர்.எஸ்.எஸ்.சின் மூத்த தலைவரும் அதன் தத்துவவாதியுமான நானாஜி தேஷ்முக் ஒரு கட்டுரை எழுதி அரசியல்வாதிகள் பலரிடம் விநியோகித்தார். பின்னர் 1984, நவம்பர் 25ஆம் தேதி ‘பிரதிபக்ஷ்’ என்ற ஹிந்தி வார இதழில் (அதன் ஆசிரியர் ஜார்ஜ் பெர்னான்டஸ்) வெளியிடப்பட்டது. அக்கட்டுரையில் என்ன இருந்தது என்று பார்க்கும் முன் இதழின் ஆசிரியரும், பெர்னான்டஸ் ஆசிரியர் குறிப்பாக என்ன எழுதியிருந்தார் என்பதைப் பார்ப்போம்.
‘இந்த ஆவணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், எங்கள் இதழின் கோட்பாட்டை மீறி பிரசுரிக்கிறோம். இந்திரா காங்கிரசிற்கும் ஆர்.எஸ்.எஸ்.சிற்கும் இடையே புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் ஒற்றுமைகளை அது முக்கியமாக வெளிப்படுத்துகிறது.’
அப்படி என்ன தான் எழுதியிருந்தார் தேஷ்முக்? சீக்கியர்கள் வேட்டையாடப்பட்டதை நியாயப்படுத்தியிருந்தார். ‘அது எந்தக் குழுவின் அல்லது சமூக விரோத சக்திகளின் வேலையல்ல. மக்களின் உண்மையான கோபத்தின் வெளிப்பாடு’ என்றார். இந்திரா காந்தியைக் கொன்ற இரு சீக்கியர்களையும் ஒட்டுமொத்த சீக்கிய சமுதாயத்தின் பிரதிநிதிகளாகச் சித்தரித்தார். சீக்கியர்கள் வேட்டையாடப்பட்டதற்கு சீக்கியர்களே காரணம் அவர்களாகவே அதை வரவழைத்துக் கொண்டார்கள் என்று வாதிட்டார். அக்காலத்தில் பஞ்சாபில் நடைபெற்ற வன்முறைகளுக்கு சீக்கிய சமுதாய முழுமையும் பொறுப்பு என்றார்.
காலிஸ்தான் பிரிவினைவாதிகள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட போது, சில விதிவிலக்குகள் தவிர, சீக்கிய சமுதாயம் அதைக் கண்டிக்கவே இல்லை, மௌனமாக இருந்தது என்று அபாண்டமாக குற்றம் சாட்டுகிறார். ஆனால் அதே சீக்கிய சமுதாயம் பொற்கோவிலுக்குள் ராணுவம் நுழைந்ததைக் கண்டித்ததாகவும் அதைக் கண்டு தேசமே அதிர்ச்சி அடைந்ததாகவும் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை மேலும் தூண்டுகிற மாதிரி எழுதுகிறார். அதாவது கோத்ரா சம்பவத்தை முஸ்லிம்கள் கண்டிக்கவில்லை என்று கூறி குஜராத் படுகொலைகளை வாஜ்பாய் நியாயப்படுத்திய மாதிரி.
இதை விட முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது அவர் அக்கட்டுரையில் தெரிவித்திருக்கும் இந்து வகுப்புவாதத்தின் அடிப்படையான கருத்துக்களாகும்.
சீக்கிய மதம் இந்து மதத்தின் ஒரு பிரிவுதான். அதன் போர்க்குணம் அந்நிய மொகலாய ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடுவதற்காக பத்தாவது குருவால் தற்காலிகமாக உருவாக்கப்பட்டது தான். குறுகிய கால ஏற்பாடுதான். ‘கல்சா’ என்பது பரந்துபட்ட இந்து சீக்கிய சகோதரத்துவத்தின் ஒரு சிறு பகுதியே என்றும், இந்து சமுதாயத்தையும் அதன் பாரம்பரியங்களையும் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஆயுதம் தாங்கிய அமைப்பு என்றும் குரு கோவிந்த் சிங் அப்படித்தான் போதித்தார் என்றும் தேஷ்முக் கூறுகிறார். ஆனால் இவையெல்லாம் இன்று துரதிருஷ்டவசமாக சீக்கிய மதத்தின் அடிப்படையான மற்றும் அவசியமான வடிவங்களாக முன்னிறுத்தப்படுகின்றன. சீக்கிய மத அறிவு ஜீவிகள் சீக்கியர்களை அவர்களது இந்து வேர்களில் இருந்து வெட்டி எடுத்து சீக்கிய சமுதாயத்தை தீவிரவாத சமுதாயமாக மாற்றிவிட்டார்கள். அதனாலேயே தேசிய வாத இந்துக்களின் தாக்குதலை வரவழைத்துக் கொண்டார்கள் என்று கருத்துக்களைப் பதிவு செய்கிறார்.
தேஷ்முக்கால் சீக்கிய மத அடையாளங்களை, அவை இந்து மதத்திலிருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டுவதால் சகித்துக் கொள்ள முடியவில்லை. சீக்கியர்களின் வேலை இந்துக்களையும், இந்துப் பாரம்பரியங்களையும் பாதுகாப்பது தான் என்று புரட்டுகிறார். அதற்காக ஏந்திய ஆயுதத்தையும், உருவாக்கப்பட்ட போர் குணத்தையும் கைவிட வேண்டும் என்கிறார். அன்பு, சகிப்புத்தன்மை மற்றும் தியாகம் ஆகியவற்றையே குருநானக் அவர்களுக்கு போதித்தார். ஆனால் இவர்களோ தங்களைத் தாக்கியத் ‘தேசியவாத’ இந்துக்களைத் திருப்பித் தாக்குவதன் மூலம் ‘கலவரம்’ பரவுவதற்கு உதவுகிறார்கள் என்று பழிக்கிறார். கொலைகாரர்கள் தேசியவாதிகளாம்.
இந்திரா காந்தியின் கொலையை ஒரு இந்து கொலை செய்யப்பட்டதாகப் பார்ப்பதும், சீக்கிய சமுதாயம் முழுமையுமே பிரிவினைவாத பயங்கரவாத சமுதாயமாகச் சித்தரிப்பதும் (எண்ணற்ற சீக்கியர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதை வேண்டுமென்றே மறைக்கிறார்), சீக்கியர்களை நரவேட்டையாடிய குண்டர்களை ‘தேசியவாத இந்துக்கள்’ என்று புகழ்வதும் படுகொலைகளை நியாயமான கோபத்தின் வெளிப்பாடு என்பதும் ஆர்.எஸ்.எஸ். இக்கொடுரத்தை ஆதரித்து நியாயப்படுத்தியது என்பதற்கு அசைக்க முடியாத சான்றுகளாக விளங்குகின்றன.
நியாயப்படுத்துவதற்கும் நேரடியாகப் பங்கேற்பதற்கும் வித்தியாசமில்லையா என்ற கேள்வி எழும். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பலர் மீது பல காவல் நிலையங்களில் எப்.ஐ.ஆர்.கள் போடப்பட்டுள்ளன. மேலும் மத அடிப்படையிலான பிரச்னைகள் தோன்றும் போது இந்துத்துவாதிகள் நேரடியாகக் களத்தில் இறங்கி தங்கள் ரத்த தாகத்தைத் தீர்த்துக் கொள்ளத் தவறுவதில்லை. ஒரு இந்துவிற்கும் வேற்று மதத்தவருக்கும் இடையே ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதை உடனே மதப் பிரச்னையாக மாற்றுகிறவர்கள் இப்படியொரு வாய்ப்பை நழுவ விடுவார்களா என்ன?
எப்படியாயினும், சீக்கியர்கள் கொல்லப்பட்டதில் ஆர்எஸ்எஸ்சுக்கும் சம்பந்தமுண்டு என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை சட்டத்திற்குத் தேவையான சாட்சியங்கள் கிடைக்காமல் போகலாம். ஏனெனில் அவர்கள் உறுப்பினர் அட்டைகள் வைத்துக் கொள்வதில்லை. கொடுக்கப்படுவதுமில்லை. மேலும் காந்தி படுகொலை விஷயத்தில் கோட்சே ஆர்எஸ்எஸ்காரன் அல்ல என இன்று வரை அவர்கள் சாதித்து வருவதை நாமறிவோம்.
நமது வேண்டுகோளெல்லாம், பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலையில் ஆர்எஸ்எஸ்சிற்கு இருக்கும் பங்கு குறித்து விசாரிக்கப்படவேண்டும். அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். கொலையும் செய்து விட்டு கொல்லப்பட்டவருக்காக ஒப்பாரி நாடகமும் ஆடும் ஆர்எஸ்எஸ்சின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்த வேண்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|