Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya kaatruPuthiya Kaatru
செப்டம்பர் 2005
கனவு மெய்ப்பட வேண்டும்

பழனி என்றொரு எழுத்துத் தேனி
ஹாமீம் முஸ்தபா

பழனி. வெகுஜன இதழ்களில் துணுக்குச் செய்திகள் உச்சத்தில் இருந்த போது அந்தத் துறையில் தனித்துவமான முத்திரை பதித்தவர். மதுரை மேலமாசி வீதியில் சிந்துபாத் கதைகளிலும், வாரமலர் செய்திகளிலும் தன்னுடைய சிறுவயது பருவத்தை செலவிட்ட இந்த 40 வயதைக் கடந்தவருக்கு மதுரை குறித்த தகவல்கள் எல்லாம் விரல் நுனியில்.

தந்தையார் ரெங்கசாமி மதுரா கோட்ஸ் தொழிலாளி. தொழிற் சங்கவாதி. எல்லாவற்றையும் விட தமிழ் ஆர்வலர். தந்தை பழைய புத்தகங்களை குறிப்பாக வரலாற்றுப் புத்தகங்களை வாங்கி வீட்டில் சேகரிக்க பழனியின் எழுத்துகளுக்கு அதுவே விழுதுகளாக இன்றும் அவருக்கு துணை நிற்கின்றன.

பழனியை எழுத்தாளனாக ஆர்வத்தைத் தூண்டியதில் மதுரையில் அன்றைய காலகட்டத்தில் பரவலாக இருந்த ஞாயிறு படிப்பகங்களுக்கு மிகுந்த பங்களிப்பு இருந்திருக்கிறது. ‘நூலகங்களைப் பயன்படுத்துவது அதிகம் என்றாலும் மனிதர்களை வாசிப்பதில், குறிப்பாக வயதான முதியவர்களிடம் தகவல்களைத் தேடி திரட்டுவதும், அதனை ஞாபகங்களின் பதிவறைகளில் சேகரித்து வைப்பதுமே தனது எழுத்தை பலமாக்கியிருக்கிறது’ என்கிறார். ‘முதியவர்கள் ஒவ்வொருவரும் ஒரு நூலகம்’ என்ற ஆப்பிரிக்க பழமொழிக்கு ஏற்ப, முதியவர்களிடம் இருந்து செய்திகளைத் திரட்டி அதனை எழுத்து வடிவில் தரும் ‘ஒரு கலாச்சார தொடர்பாளன்’ என்றே தன்னைப் பற்றி பழனி தன்மதிப்பீடு செய்கிறார்.

மனித நேயமாக எழுதும் அனைவரின் எழுத்தின் மீது தனி ஈடுபாடு இருக்கிறது. தன்னை செழுமைப்படுத்தியதில் வலம்புரிஜானுக்கும், ‘பாக்யா’ இதழ் மூலமாக தொடர்ந்து ஆதரவு தந்ததில் பாக்யராஜ்க்கும் பெரும் பங்கு இருக்கிறது என்கிறார். அந்துமணி, சாவி, மணியன் போன்றவர்கள் தன்னை ஆரம்பத்தில் உற்சாகப்படுத்தினார்கள் என்கிறார். இயக்குநர் பாரதிராஜா குழுவிடம் பணியாற்றிய அனுபவமிருக்கிறது என்கிறார் ரொம்ப இயல்பான முகத்துடன்.

5000-க்கும் மேற்பட்ட துணுக்குகள் எழுதியிருக்கும் பழனி 1990 - 95 காலகட்டங்களில் முதல் 10 துணுக்கு எழுத்தாளர்களில் ஒருவராக கவனிக்கப்பட்டிருக்கிறார். இன்று பத்திரிகைகளில் வாசகர் கடிதத்தை தவிர வாசகர்களின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது மிகவும் குறைந்துவிட்டன என்கிறார் புன்னகையை தவழ விட்டபடி.

திரைப்படம் குறித்த தகவல்கள் ஏராளம் வைத்திருக்கும் இவர் வாசகர்களை ஈர்த்துக் கொள்வதில் திரைப்படம் குறித்த செய்திகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்று கூறும் பழனியின் பல திரைவிமர்சன குறிப்புகள் பத்திரிகைளில் இடம் பெறும் திரைப்பட விளம்பரங்களில் முத்திரை வாக்கியங்களாக இடம் பெற்றிருக்கின்றன.

மதுரை ஆதீனம், பாரதிராஜா, ரஜினிகாந்த், வலம்புரிஜான், வைகோ உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்களிடமிருந்தும் பரிசுகள் பெற்றிருக்கும் பழனி தன் எழுத்தின் ஆர்வத்தில் பெற்றோருக்கும், தன் சக நண்பர்களுக்கும் பெரும் பங்கு உண்டு என்கிறார். இவர்களின் உற்சாகமே தொடர்ந்து தன்னை எழுதத் தூண்டுகிறது என்கிறார். குட்டி குட்டித் தகவல்களுக்கு எப்பொழுதும் இருக்கும் வாசக ஈர்ப்பே இன்று வார இதழ்களில் செய்திகளை சுருக்கமாக பதிவு செய்தலாக உருமாறி இருக்கிறது என்பது பழனியின் மதிப்பீடு.

மதுரை குறித்த ஆய்வுச் செய்திகளுக்கும் செய்தி சேகரிப்புக்கும் வேண்டி மதுரைக்கு வரும் வெளி வட்டார செய்தியாளர்களையும், ஆய்வாளர்களையும் தொடர்பு கொண்டு களப்பணியில் உதவி செய்வது தன்னுடைய பணிகளில் ஒன்றாகக் கருதுகிறார்.

‘புதிய காற்று’ இதழில் ‘எம்.ஜி.ஆர் ரசிகர்கள்’ குறித்து எழுதிய கட்டுரை, ‘திரை அரங்கம் டாக்ஸி ஸ்டாண்டுகளாக மாறிக் கொண்டிருக்கும்’ கட்டுரை போன்றவை வாசகர்களை மிகவும் நெகிழ்வுட்டியதும், பலராலும் கவனிக்கப் பெற்றதுமாகும். எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கட்டுரையின் பிதாமகனான எம்.ஜி.ஆரின் ரசிகர் செல்லூர் சுந்தரம் வாழ்வின் நெருக்கடியிலிருந்து இன்னும் மீள முடியாமல் இருக்கிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் செல்லூர் சுந்தரம் குடும்பத்திற்கு உதவி செய்து அவரையும், அவரது குடும்பத்தையும் மீட்டால் நிறைவாக இருக்கும் என்கிறார் ஈரம் ததும்பும் மனதுடன். துணுக்கு எழுத்தாளருக்கான உலக சாதனையை நோக்கி வேகமாக நடைபோட அவரது நண்பர்களும் புதிய காற்றும் வாழ்த்துகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.