சுகிர்தராணி கவிதைகள்
கூடடைதல்
கட்டுறாத மார்பினைப் போல்
விறைத்திருக்கும் மலையின் கோட்டையில்
என்னை நீராட்டுகிறார்கள்
உலர்ந்த கூந்தலுக்குத் தைலமிட்டு
கற்பதித்த அணிகளை
உடலெங்கும் போர்த்துகிறார்கள்
அகிலின்புகை பரவிநிற்கும் மண்டபத்தில்
ஊஞ்சலாடு கிறதென் தேகம்
காந்தள் மலர்கள் நெருப்பாய் குவிந்திருக்கும்
சுனையின் கரைகளில்
சேடிகளோடு நடக்கிறேன்
ஈட்டிகள் ஏந்திய வெற்பர்கள்
கண்ணசைவுக்காய் காத்திருக்கிறார்கள்
நீலப்பூ மலர்ந்திருக்கும் வானத்தில்
மஞ்ஞைகள் தலையுரசி பறந்து செல்கின்றன
தீவட்டிகள் உறங்கும் யாமம்
திரைச் சீலைகளற்ற அந்தப்புரத்தில்
விழுப்புண் மார்புடையவன்
மெலிதாக என்னைப் புணருகின்றான்
களைப்பின் நீர் வடிந்ததும்
பழகிய முரட்டுப் புரவியிலேறிச்
சீராகத் தரையிறங்கிச் செல்லுகின்றான்
மேன்மாடத்து கூடடைகிறது நிலா
உடலெழுத்து
வெறுங்கால்களால் கடக்க முடியாத
வெப்ப நாளின் முன்னிரவில்
மதுவருந்த அழைக்கப்பட்டிருந்தேன்
மூவருக்கான அவ்வீட்டில்
நானும் அவளுமே தனித்திருந்தோம்
கண்ணாடியில் செதுக்கப்பட்ட குப்பிகளில்
நொதித்த திரவம் நிரம்பியிருந்தது
குழல் நீண்ட மதுக் கோப்பைகள்
பற்றப்பட வாகாய் காத்திருந்தன
பனித்துண்டங்கள் மிதக்கும் நீரை
மிடறுகளாக விழுங்க ஆரம்பித்தோம்
போதையின் ஒளி
பரவத் தொடங்கிய போது
வேற்றறையின் படுக்கையிலிருந்தேன்
குவிந்த என் மார்பின் மென்மைபற்றி
வெகுநேரம் வினாவெழுப்பிக் கொண்டிருந்த
அவளுடைய தேகமும்
மிகக் குழைவாக இருந்தது
பிறகவள் மூச்சின் வெளிச்சத்தில்
உடலெழுத்துக்கள் ஒவ்வொன்றையும்
விடியும் வரை பழகிக் கொண்டிருந்தாள்
நீண்ட யுகங்களுக்குப் பிறகு
அன்று தான்
என்னுடல் என்னிடமிருந்தது.
செந்நாரை முட்டைகள்
வெயில் தனது ஆயிரம் நாவுகளில்
வறட்டு நீரை உமிழ்ந்தபடி
வானத்தின் தெருக்களில் அலைகிறது
நெருப்பின் ஓய்வறை தேசத்திலிருந்து
அலகினால் காற்றைக் குடித்தபடி
இடம் பெயருகின்றது
கால் நீண்ட ஒரு செந்நாரை
துக்கத்தின் விளிம்பில் காலிடரும்போது
ஏந்திக் கொண்ட அன்பின் நதியில்
மல்லாந்து மூழ்கிக் களிக்கிறது
உடைப்பெடுத்த பருவத்தின் சுரப்பு
இறகுகள் வழியே பீறிட
நீர் உடலின் கூச்செரிந்த மரத்தின்
வளைந்த கிளைகளில்
குதித்தோடி சப்தமெழுப்புகிறது
குறுக்கும் நெடுக்குமாய் உழுத
வயலின் செம்மையைப் போல்
தனது இணையைப் புணர்கிறது
நினைவுகள் பின்னியக் காட்டில்
சிவந்த மலையின்
பறித்த கிழங்குகளென மின்னுகின்றன
இடப்பட்ட செந்நாரை முட்டைகள்
அம்முட்டைகளி லிரண்டு
என் முலைகளாகிக் கிடக்கின்றன.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|