ஜீவன் பென்னி கவிதைகள்
காத்திருத்தல்
குடும்பத்தோடு
இடம்பெயர்ந்து விட்ட
வாடகை வீட்டில்
பிடிவாதமாயிருக்கின்றன
ஒருமுறை பயன்படுத்திய
ஸ்டிக்கர் பொட்டுக்கள்
மீண்டும் அவள் நெற்றி
அல்லது புதியதொரு நெற்றியேனும்
கிடைக்குமென்று. . .
மறந்து போனநாள்
கடைசியாக மழைபெய்த நாள்
பழையதாகிக் கொண்டிருக்கிறது
இயல்பாக மறக்க ஆரம்பித்திருக்கிறது
எல்லா நாட்களையும் பாதுகாக்கும் அவசரத்தில்
கை தவறிய நாளது.
ஓர் இலை விழுவதற்கான எல்லாக்
காரணங்களும் இதற்கு பொருந்துகின்றன
சிறு நீரோடையொன்றின் குளிர்ச்சியின்
மிக மெதுவாக அந்தநாள் என்னை
கடந்து போகின்றது
சாலையைக் கடக்கும் பட்டாம்பூச்சிபோல்
பின்னகரும் மரம் போல்
அழுகை
இன்று பெய்யும் மழை
மழை போலவேயில்லை
விரிந்திருக்கும் பெரும் கருமேகத்திலிருந்து
ஒரேயொரு துளியெனப் பெய்கிறது
பெரும் மழை
இன்று பெய்யும் மழை
நேற்றைய மழைபோலில்லை
உனதொவ்வொரு அங்கத்திலிருந்தும்
ஒரே தடவையில் ஒரேயொரு துளியெனப்
பெய்கிறது பெரும்மழை
இன்று பெய்யும் மழை
நாளைய மழைபோலிருப்பதில்லை
அவ்வளவு உப்புக்கரிப்புடன்
பெய்கிறது
பெரும் மழை
இன்று பெய்த மழை
இன்று பெய்தது போலவேயில்லை
அத்தனை பழசு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|