தலையங்கம்
மனித முகங்களற்ற நீதிபதிகள் - தீர்ப்புகள் - சட்டங்கள்
நிறுவனர் எஸ். ராஜா ஹாசன்
சமீபத்தில் உச்ச நீதிமன்றத்திலிருந்து வெளிவருகின்ற நீதிபதிகளின் குரல்கள் இந்திய ஜனநாயகத்திற்கும், சமூகநீதிக்கும் உகந்ததாக இல்லை. இந்திய சமூகம் உலகின் மற்ற எல்லா சமூகங்களையும் விடவும் அடிப்படையில் வித்தியாசமானது. இந்திய சமூகத்தில் மட்டும் தான் ஒரு மனிதனின் சமூகத் தகுதி பிறப்பை வைத்து இரண்டாயிரம் ஆண்டுகளாக தீர்மானிக்கப்பட்டு வருகிறது. இப்பொழுதும் தீர்மானிக்கப்படுகிறது.
பிறப்போடு தொடர்புபடுத்தப்பட்ட சமூகத் தகுதி இந்திய மனிதனின் கல்வி உரிமையை, வழிபாட்டு உரிமையை, பொது இடத்தில் புழங்குகின்ற உரிமையை, உடை உடுத்துகின்ற உரிமையை, திருமண உரிமையை, சொத்து வைத்திருக்கின்ற உரிமையை இப்படி ஏகப்பட்ட உரிமைகளை நிர்ணயம் செய்தது. இந்த வர்ணாசிரம ஒடுக்குதல்களிலிருந்து இந்தியாவின் தொண்ணூறு விழுக்காட்டிற்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்டெடுக்கும் விதமாக சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து சமூக ரீதியாக, பண்பாட்டு ரீதியாக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களை மேம்படுத்துவதற்காக கல்வி வேலை வாய்ப்பு இவற்றில் இடஒதுக்கீடு என்கின்ற சமூக நீதி நடைமுறைப்படுத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்த முயற்சிகள் தீவிரப்பட்டன. இது இந்திய சமூகத்தை பிற்படுத்தப்பட்டவர்கள், மிகப் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் என வரையறை செய்து அவரவர்களின் நிலைமைகளுக்கு ஏற்ப இந்த வாய்ப்புகளை வழங்க வழி வகை செய்தது.
ஒவ்வொரு மாநிலங்களும் இதனடிப்படையில் தங்கள் மாநில சூழ்நிலைக்கேற்ப இடஒதுக்கீடு அளவினை வரையறை செய்து கொண்டன. இப்படி செய்த பிறகும் இன்னும் பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும், பழங்குடி மக்களும் முற்றிலுமாக இந்த வாய்ப்புகளை பெற்றுவிடவில்லை என்பது கவலைக்குரிய விஷயம். இந்த சூழ்நிலையில் தான் உச்சநீதிமன்றத்தின் இடஒதுக்கீடு தொடர்பான தீர்ப்புகள் இந்திய சமூகத்தின் எதார்த்தத்தை புரிந்து கொள்ளாத, மனித முகமற்ற ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தியா போன்ற ஒரு நாட்டில் ஜனநாயகமும் அந்த ஜனநாயக அரசமைப்பு உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டமும் மக்களை ஆட்சி செய்தது மாறி இப்போது நீதிமன்றங்கள் சட்டத்தின் வழியிலாக ஆட்சியை நிலை நிறுத்த முயற்சிக்கின்றன.
இந்தியாவின் நீதித்துறையில் இடஒதுக்கீடு இன்னும் குறைந்தபட்ச அளவு கூட பின்பற்றப்படவில்லை என்பதை இந்திய நீதிபதிகளின் புள்ளி விபரங்களைப் பார்த்தாலே தெரிந்து விடும். இந்திய நீதித்துறையின் உயர் பதவிகளை தங்களுடைய சமூகத்தின் விகிதாச்சாரத்தையும் தாண்டி கைப்பற்றியிருக்கும் உயர்சாதி சமூகத்தின் குரலாகத்தான் இந்திய நீதிபதிகளின் சமீபத்திய குரல்கள் வெளிப்படுகின்றன.
சமூக ரீதியாக சாதியால் பிளவுபட்டிருக்கும் ஒரு தேசத்தில் சாதியின் பெயரால் சமூக நீதிகள் இரண்டாயிரம் ஆண்டு காலம் மறுக்கப்பட்ட ஒரு சூழலில் சமூகத்தின் பதட்டத்தைத் தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த சமூக நீதி கோட்பாடு இன்றைக்கு நீதிமன்றங்களின் சமூக நீதி பார்வையற்ற நடவடிக்கைகளால் சிதைக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் உருவாகியிருக்கிறது.
இந்திய சமூகத்தின் ஜனநாயகப் படிநிலை வளர்ச்சியில் அதனை பின்தள்ளக் கூடிய இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியது ஜனநாயக சக்திகளின், சமூகநீதி ஆர்வலர்களின் இன்றைய தலையாய கடமையாக இருக்கிறது. இந்தியாவில் நாம் உருவாக்கி வைத்திருக்கும் சட்ட அமைப்புகள், நீதித்துறைகள் இந்திய சமூகத்தில் ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும், சமூகநீதியையும் கொண்டு வருவதற்கு உதவுவதற்காகத் தானே தவிர அவற்றை குழிதோண்டி புதைப்பதற்கல்ல.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|