சிரிப்புதரும் சிந்தனைகள்
நீலம் மதுமயன்
பார்ப்பது ஒன்றாகவும், பதிவது இன்னொன்றாகவும் இருப்பது வரவேற்கத் தகுந்த பழக்கமல்ல. இவர்கள் தான் ஒன்றைத் தேடி ஒன்றை அடைபவர்கள். தேடியது கிடைக்க வில்லையோ என்ற கவலையும் இவர்களுக்கு இருக்காது. அடைவை அப்படியே அங்கீகரிக்கும் அற்புத மனிதர்கள் இவர்கள்தான். காட்சிக்கு புலப்படும் ஒன்றை விட்டு விட்டு புலப்படாத ஒன்றை, புலன் தேடித் தருமானால், அங்கே இருப்பது தெரியாது, ஆனால் அவரிடம் இல்லாதது தெரியும். எப்படி என்கிறீர்களா?
மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு, போரசிரியர் ஒருவர் இறந்து போன ஒரு பெண்ணின் உடலை வைத்து வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். அந்த வகுப்பின் முக்கியப் பாடம் கர்ப்பப்பையைப் பற்றியது. எனவே அந்த பெண் உடம்பின் எல்லா பாகங்களையும் பற்றி மேலோட்டமாகச் சொல்லி விட்டு கர்ப்பப்பையைப் பற்றி சொல்வதற்கு முன்வந்தார்.
இறந்த உடலையே பார்த்துக் கொண்டிருந்த மாணவர்களில் ஒரு மாணவனைப் பார்த்து; கர்ப்பப்பையைக் காட்டி, “இது என்ன?”- என்றார். அந்த மாணவர் அது என்ன என்று உணர முடியாமல் தவித்ததை உணர்ந்த ஆசிரியர் அவருக்கு உதவி செய்வதற்காக, “தம்பி இது உனக்கும் இல்லாதது எனக்கும் இல்லாதது- இப்ப கண்டுபிடி பார்ப்போம்”- என்றார். உடனே அந்த மாணவர் சற்றும் யோசிக்காமல் “மூளை சார்”- என்றார்.
சிரிப்பு அடங்க சில நிமிடங்கள் ஆயின. கண்ணுக்கு முன் இருப்பது (கர்ப்பப்பை) தெரியவில்லை. எனவே, அவருக்கு இல்லாதது (மூளை) தெரிந்தது. எனவே இருக்கும் இடத்தில் இருப்பதும், பார்க்கும் பொருளைப் பார்ப்பதும் அவசியமான பழக்கமாகும். கண்ணொன்றைப் பார்க்க, காதொன்றைக் கேட்க வாழும் கவனமற்ற வாழ்க்கையில் பெருமையில்லை.
கண்ணுக்கு முன் இருப்பது தெரியவில்லை என்றால், கருத்துக்கள் இல்லாதது தெரியும். எண்ணம் பார்வையில் முகாமிடும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். காட்சிப் பொருளும் காணும் பொருளும் ஒன்றானால்தான் கருத்து மெய்ப்படும்; இல்லையெல் பொய்ப்படும்.
ஒன்றின் உண்மையை உணர்ந்து கொள்ள இந்தப் பண்பு மிக அவசியம். ‘இருக்கும் இடத்தில் இரு’ என்னும் பொன் மொழியின் பொருண்மை புரிந்து வாழ வேண்டும். ‘கண்ணும் கருத்துமாக இரு’ என்பதும் இதற்காகத்தான். நடப்பது என்ன என்பது புரிய வேண்டுமானால், இந்தப் பண்பு அவசியம்.
தமிழாசிரியர் ஒருவர் வகுப்பில் கம்பராமாயணம் நடத்திக் கொண்டிருந்தார். பாடலை எப்போதுமே இசையோடு பாடுவது இவரது வழக்கம். மட்டுமல்ல; பாடும் போது கண்களையும் மூடிக் கொள்வார். அன்றும் 50 மாணவர்கள் இருந்த வகுப்பில், ‘வெய்யோன் ஒளி தன் மேனியில்’- என்னும் கம்பராமாயணப் பாடலை கண்களை மூடி ராகத்தோடு பாடி முடித்து விட்டு விளக்கம் சொல்ல கண்களைத் திறந்து பார்த்தார். ஒரு மாணவன் மட்டுமே இருந்தான். மற்ற எல்லோருமே போய்விட்டனர்.
ஆனாலும் அவர் அது பற்றிக் கவலைப்படாமல், “எல்லோரும் போய்விட்டாலும் நீ ஒருவனாவது கம்பனின் கவிச்சுவையைப் பருக அமர்ந்தாயே, உன்னைப் பாராட்டுகின்றேன்”- என்று கூறி பாடம் நடத்தத் தொடங்கியதும் அவன், “அவனுக கிடக்கிறானுக சார் நன்றி கெட்டப் பயலுக”- என்றான். ஆசிரியருக்கு மகிழ்ச்சி. ஒருவனாவது நன்றியுடையவனாக இருக்கின்றானே என்று எண்ணி முடிப்பதற்குள், இருந்தவன், “என்ன ஆனாலும் சொல்லாமப் போகலாமா? நான் சொல்லிட்டுப் போகலாமேண்ணுதான் இருந்தேன் சார், வாறேன்”- என்று கூறிவிட்டு அவனும் போய்விட்டான்.
ஒரு முறை அரசுத் தேர்வில் ஒரு கல்லூரி மாணவன் மொத்தம் உள்ள ஆறு பேப்பரில் ஐந்து பேப்பரை அவன் எழுதிவிட்டு ஒரு பேப்பரை மட்டும் வேறு ஒருவனை வைத்து எழுதி விட்டான். அதை தேர்வுக்குழுவும் கண்டு பிடித்துவிட்டது. எல்லாப் பேப்பரையும் அவன் எழுதி விட்டு, ஒரு பேப்பரை மட்டும் வேறு ஒருவனை வைத்து எழுதி ஆள் மாறாட்டம் செய்துள்ளது நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது. அந்த மாணவனை பல்கலைத் தேர்வுக்குழு அழைத்து நேர்காணல் நடத்தியது. நான்கு மூத்த பேராசிரியர்கள் சுற்றியிருந்து சரமாரியாக கேள்விகள் கேட்டு அவனைப் புண்ணாக்கினர்.
அவனும் பேப்பரைப் பார்க்கணும் சார் என்றான். பேப்பர் தருவிக்கப்பட்டது. முதலில் அவனே எழுதிய பேப்பர்களை ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டினார். “இது நீ எழுதியதுதானா?”-அவன், “ஆமா சார் நான் எழுதியது தான்”- என்றான். இப்படி அவன் எழுதிய ஐந்து பேப்பர்களையும் காட்டி விட்டு ஆறாவது பேப்பரைக் காட்டி, “இது யார் எழுதியது? ஆள் மாறாட்டம் பண்ணுறியா?”- என்றதும் பேராசிரியர்கள் ஒருவருக்கு ஒருவர், ‘மாட்டிக் கொண்டான்’ என்ற பெருமிதத்துடன் சிரித்துக் கொண்டனர்.
அவன் மெதுவாக, “அந்த அஞ்சு பேப்பரும் நான் எழுதியதுதான்; ஆனா இது நான் எழுதியது இல்லை. ஆமா நான் எழுதின பேப்பர் எங்க சார்? நான் எழுதின பேப்பர ஒளிச்சி வச்சிட்டு எவன் பேப்பரையோ காட்டுறீங்க. என் பேப்பர் இப்ப வரல்லண்ணா நான் கன்சியூமர் கோர்ட்டுக்குப் போவேன்”- என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான். யாரும் எதிர்பாராமல் வெடித்ததில் எல்லோருமே காணாமல் போனார்கள். எப்போதும் பிடரியில் கண் வைத்துப் பார்ப்பதன் பிழையை அறிந்து செயல்பட்டால் அதுவே அறிவின் ஆரோக்கியம் ஆகும். அறிவால் ஏமாறுவதும் அறிவென்று அறிக.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|