தேசிய நாடக விழா
நாடகம் - ஒரு மொழி சார்ந்த ஊடகம்
ராஜேஷ்
மதுரையில் கடந்த மாதம் 20 முதல் 26 வரை ராஜா முத்தையா மன்றத்தில் ‘தேசிய நாடக விழா’ நடைபெற்றது. இதை தென்னகப் பண்பாட்டு மையமும் தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டுத்துறையும் இணைந்து நிகழ்த்தியது. இந்த விழாவின் இயக்குனராக நா.முத்துச்சாமி செயல்பட்டார். மா.வீ.முத்து இயக்கிய “இந்தியத்தாயே உனக்காக” (தமிழ்), எஸ். ராமானுஜம் இயக்கிய ‘மூதேவித்தெய்வம்” (மலையாளம்), கணைலால் கைத்துவாஸ் இயக்கிய “துவிதா” (ஹிந்தி) எம்.பிரான்ஸிஸ் இயக்கிய ‘மஹோ மொஹன்சதாரோ” (தெலுங்கு), ஜெயஸ்ரீ இயக்கிய “கரிமாயி” (கன்னடம்), மு.ராமசாமி இயக்கிய ‘கலிலியோ” (தமிழ்), பல்வீந்தர் தாகூர் இயக்கிய “பாவா ஜீட்டோ” (டோக்ரி) என ஆறு மொழியைச் சேர்ந்த ஏழு நாடகங்கள் நிகழ்த்தப்பட்டது.
நிகழ்த்தப்பட்ட ஏழு நாடகங்களில் பார்வையாளர்களை உணர்வுபூர்வமாக பாதித்த ஒரே நாடகம் “பாவா ஜீட்டோ” என்னும் காஷ்மீரி நாடகம், இதை பல்வீந்தர் தாகூர் இயக்கியுள்ளார். இந்த நாடகம் டோக்ரி என்று நான் இதுவரை கேள்விப்படாத மொழியை பிரதியில் கொண்டது. பிரதியின் அடையாள மொழியை (டோக்ரி) தாண்டி உடல் மொழி மூலம் நாடகத்தை மிக எளிதாக உணர்த்தினார்கள். மேடையில் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் சில கம்புகள் மாத்திரமே. ஆனால் அவர்கள் மேடையில் உருவாக்கிய படிமங்கள் ஏராளம். பச்சைப்பயிர்கள், தீ என அவர்கள் கொண்டு வந்த படிமங்கள் பழைய யுக்தியாக இருந்தாலும், கோபம், தவிப்பு, ஆணவம், ஆதிக்கம் போன்ற உணர்வுகளுக்கு, அவர்களின் உடல் அசைவுகள் மூலம் உயிர்கொடுத்தது பாராட்டுதற்குரியதே.
தமிழில் நிகழ்த்திய நாடகங்கள் புரியாமல் தவித்த பார்வையாளர்களை ‘டோக்ரி’என்னும் புதியதொரு மொழி நாடகம் ரசிக்க வைத்தது. நிகழ்த்தப்பட்ட தமிழ் நாடகங்களின் போதாமையை சுட்டிக்காட்டியது. கரிமாயி, மூதேவித்தெய்வம், துவிதா போன்ற நாடகங்களும் பிரதியின் மொழியைத் தாண்டி இசையுடன் கூடிய பாடலை நாடினர். ஆனால் முழுமையாக கையாளப்படாததால் பல நேரங்களில் பிரதியின் மொழியே மேலோங்கியது. அந்தந்த நாடகங்களின் இயக்குனர்களும், நடிகர்களும் அவர்கள் பிரதியில் உள்ள பல அரிய விஷயங்களை, அடுத்த நாள் காலை நடைபெற்ற கலந்துரையாடலில் விவாதித்தனர். ஆனால் அதில் எந்த பிரயோஜனமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் நாடகம் நிகழ்த்தப்பட்ட போது பார்வையாளர்களுக்கு அவர்கள் கூறிய எந்த அற்புதங்களும் தென்படவில்லை.
மாறாக அவர்களின் பிரதியின் மொழி வெறும் சப்தமாகவே கேட்டது. மதுரையில், நாடக விழாவிற்கு பார்வையாளர்களின் வருகை அதிக அளவில் இருந்த போதிலும் நிகழ்த்தப்பட்ட நாடகங்களின் தன்மை (பாவா ஜிட்டோவை தவிர்த்து) பார்வையாளர்களிடம் நாடக ஆர்வத்தை வளர்க்கும் விதமாக இல்லை. மாறாக அதை ஒரு புரியாத ஊடகமாகவே சித்தரித்தது. ஏனெனில் ‘பாவா ஜிட்டோவை’ தவிர மற்ற நாடகங்கள் வார்த்தைகளை முதன்மைப் படுத்திய பிரதியாகவே இருந்தது. நாடகக் கலையில், மொழி என்பது வார்த்தைகளைக் கடந்த ஒன்றாகும். நாடக பிரதி ஒரு குறிப்பிட்ட மொழியில் இருந்தாலும், அதை நிகழ்த்தும் போது கையாளப்படும் மொழி என்பது எல்லா கலாச்சாரத்தை சேர்ந்த மக்களாலும் எளிதாக அனுபவப்படுத்திக் கொள்ளும் தன்மை உடையதாக இருக்க வேண்டும். இந்த ‘நாடகமொழி’யின் அவசியத்தை இந்த தேசிய நாடக விழாவில் முழுமையாக உணர முடிந்தது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|