Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2005
கனவு மெய்ப்பட வேண்டும்
வீ. சந்திரமோகன்

இந்தியாவில் நாட்டு நலப்பணித் திட்டம் என்ற மாணவர்களின் தொண்டு திட்டம் உருவாக காரணமாக இருந்தவர் மகாத்மா காந்தி அவர்கள். மாணவர்களை தேசிய பொதுப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்ற காந்தியின் எண்ணத்திற்கு வடிவம் கொடுத்தவர் பல்கலைக்கழக மானியக்குழுவின் முதல் தலைவரான டாக்டர் இராதாகிருஷ்ணன்.

ஜனவரி 1950-ல் நடைபெற்ற மத்திய கல்வி ஆலோசனைக் குழுவில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது. பின்னர் 1958-ல் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு மாணவர்களை உயர்கல்விக்கு முன்பாக சமூகப் பணிகளில் ஈடுபடுத்துவதன் அவசியம் குறித்து அனைத்து மாநிலத் தலைவர்களுக்கும் ஒரு கடிதம் எழுதினார்.

அதனைத் தொடர்ந்து இந்திய அரசு 1959ல் டாக்டர். சி.டி.தேஷ்முக் தலைமையில் மாணவர்களை பொதுப்பணிகளில் ஈடுபடுத்துவது குறித்து ஆராய்வதற்கும் தகுந்த ஆலோசனை வழங்குவதற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு பள்ளி மாணவர்களை 9 மாதங்கள் நாட்டு நலப்பணித் திட்டத்தில் ஈடுபடுத்தலாம் என்றும் பின்னர் இத்திட்டத்தினை கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திற்கும் விரிவுபடுத்தலாம் என்றும் ஆலோசனை வழங்கியது.

இக்குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து இந்திய அரசு ‘நாட்டு நலப்பணியில் இளைஞர்கள்’என்ற பொருளில் ஒரு இயக்கத்தை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டது. இறுதியாக நடுவண் அரசு 1966-ல் டாக்டர் டி.எஸ். கோத்தாரி தலைமையில் ஒரு தேசிய கல்விக் குழுவை அமைத்தது. இக்குழு தேசிய நாட்டு நலப்பணியை மாணவர் சமுதாயத்தில் ஏற்படுத்துவது தொடர்பாக மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் விவாதித்து ‘நாட்டு நலப்பணி’ என்ற பெயரில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

1967-ம் ஆண்டு பல்கலைக்கழக துணைவேந்தர் மாநாட்டில் இம்முயற்சி வரவேற்கப்பட்டது. இத்திட்டம் தேசிய ஒருமைப்பாட்டினை வலியுறுத்தும் முக்கிய அமைப்பு என்று பாராட்டினார்கள். இத்திட்டத்திற்கு (என்.எஸ்.எஸ்) 4வது ஐந்தாண்டு திட்டத்தில் திட்டக்கமிஷன் 5 கோடி ரூபாய் ஒதுக்கியது.

காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் செப் 24, 1969-ம் ஆண்டு (காந்தியடிகளின் பிறந்தநாள் நூற்றாண்டில்) இந்திய கல்வி அமைச்சர் டாக்டர்.வீ.கே.ஆர்.ராவ் அவர்கள் நாட்டு நலப்பணித் திட்டத்தை நாடு முழுவதும் 37 பல்கலைக்கழகங்களில் ஒரே நேரத்தில் துவங்கி வைத்தார். 40,000 மாணவர்களுடன் 37 பல்கலைக்கழகங்களில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம் இன்று ஆலமரம் போல் விழுதுவிட்டு 237 பல்கலைக்கழகங்களில் சுமார் 23,00,000 மாணவர்களைக் கொண்டு மாபெரும் தொண்டு இயக்கமாக விளங்குகிறது. அவர்களுடன் பொதுமக்கள் கைகோர்த்து செயல்படும் பட்சத்தில் வளமான இந்தியாவிற்கு நம்முடைய பங்கை ஆற்ற முடியும். இதுதான் இந்தியக் குடியரசுத் தலைவரின் கனவும். அவரது கனவு நனவாக வேண்டும்.

*கட்டுரையாளர் முதுநிலை விரிவுரையாளர் மற்றும் நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர், மாதா கல்லூரி, மானாமதுரை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.