நூல் விமர்சனம் : மல்லிகைக்காடு (கவிதை)
கமகமவென்று மணக்கிறது
சோலை.சீனிவாசன்
என்னைப் போன்றோருக்கு எளிதில் புரியும் வடிவத்தில் நவீனக் கவிதைகளை படைக்கத் தெரிந்திருக்கிறது மதியழகன் சுப்பையாவுக்கு. அதுவே அவரின் வெற்றி.
தொன்று தொட்ட காலத்தில் இருந்தே இலக்கியத் தமிழ் என்றால் அதில் காமம் சாகா வரத்துடன் உயிர் மூச்சாய் தகித்துக் கொண்டேயிருக்கும். அது மல்லிகைக் காட்டிலும் நிகழ்ந்திருக்கிறது.
பைபிளின் உன்னத பாட்டில் ‘சாலமன்’ இப்படி வர்ணிப்பார்: “உன் கூந்தல் கீலோயத் மலையில் மேயும் ஆட்டு மந்தைப் போல் அடர்த்தியாகவும், உன் உதடுகள் சிவப்பாகவும், உன் கழுத்து அண்ணாந்து பார்க்க கூடிய கோபுரம் போலவும், உன் ஸ்தனங்கள் (முலைகள்) லீலி புஷ்பக் காட்டில் மேயும் மானின் இரட்டைக் குட்டிகள் போலவும் இருக்கிறது” என்று.
சங்க இலக்கியங்களில் அக, புற நானூறுகளில் காமம் பற்றிப் பேசாத புலவர்களில்லை. 96 கவிதைகளில் 20க்கும் உட்பட்ட கவிதைகள் காமம் பற்றிப் பேசினாலும், மற்ற கவிதைகளை வலுக்கட்டாயமாய் மனதில் பதிய வைக்கும்படி காமம் தோய்ந்த கவிதைகள் கண் முன்னால் நிழலாடுவதை மறுப்பதற்கில்லை.
முத்தங்கள் குறித்த சில கவிதைகளும் இதில் இடம் பெற்றிருக்கிறது. பலரின் உந்து சக்தி இது.
கண்களால் தொட்டாய்
கவிதையானேன்.
இதழால் தொடு
காவியமாகிறேன்’.
கல்லூரிகளுக்கு தெரியப்பட்டால் இளசுகளின் தேசியகீதமாகும் வரிகள் இவை. ‘காத்திருப்பு’ கவிதைகளுக்கு படிப்பவர்கள் அனுபவப் பட வேண்டும் போலிருக்கிறது. துளி கவிதைகள் - அருமையான, பூப்போன்ற மனதை வருடுகின்றன சாரல்துளியாய்.
வெறும் தொலைபேசி எண்ணை எழுதி வைத்துவிட்டு, பிறிதொரு சமயம் இது யாருடைய எண் என திகைப்பது, பயப்படுவது, யோசிப்பது என எல்லாருக்கும் (சிலர் தவிர்த்து) வரும் பிரச்சனை கவிஞருக்கும் வந்திருக்கிறது. இதை அவருடைய கவிதை வரிகளிலேயே புரிந்து கொள்ளவும் முடிகிறது.
ஜீன்களின் அடிப்படையில் தலை வழுக்கையாகலாம். காதோர நரை பித்தம் என்றால் செல்லமான தொப்பை மகிழ்ச்சியான வாழ்வின் அறிகுறி. காதலுக்கு ஏது வயது?
‘கதவை திற, காற்று வரும்
கூரையே திற, ஒளியும் வரும்
அதீதமான கற்பனையோ?’
எல்லோரையும் போல் இல்லாமல் விலகி நின்று பேசியபோதும், தோளில் கை போட்டபோதும், முத்தம் கொடுத்த போதும், வாங்கிய போதும், காத்திருந்த பொழுதுகளிலும் மௌனமாய் இருக்கும் காதல் உடலுறவில் வெளிப்படுவது இயற்கையாகவே அமையும்.
நான் ஏற்கனவே இன்னொருத்தனை (அ) இன்னொருத்தியை காதலித்திருக்கிறேன்; அதனாலென்ன, இருந்து விட்டுப் போகட்டுமே; எனக்கு இதெல்லாம் பிடிக்காது; புதிதாக காதலிப்பவர்களுக்கு ஆறுதல் வரிகள் இவை. நற்றுணையொன்றுக்காய் தவமிருக்கும் குரலாய்த் தெரியவில்லை.
தனிமையை விரும்பும் குரலாய் தெரிகிறது. சில நேரங்களில் காதலுக்காய் ஆர்ப்பரிக்கும் இந்த குரல், காமத்தில் உருண்டு புரண்டு எழுகிறது.
ஆதிக்க சமுதாயத்தில் வெறுப்புகளை உள் வாங்குவதாய் நினைக்கும் இக்குரல் அச்சமுதாயத்திற்கு எந்த அறை கூவலும் விடுக்கவில்லை என்பது ஆச்சர்யம்.
இளையராஜாவின் இசையை பிசிறடிக்கச் செய்த, இன்னொரு குரலுக்காக இந்த குரல் ஏன் இவ்வளவு வருத்தப்படுகிறது என்பதும் ஆச்சர்யமாகவே இருக்கிறது.
‘எனைத்தொன்று இனிதேகான் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று இல்’.
தம்மால் காதலிக்கப்படுவாரைப் பிரியும் போது நினைத்தால் துன்பம் இல்லை, ஆனால் எவ்வளவு குறைந்த கால அளவினதாக இருந்தாலும் காமம் என்பது இன்பம் தருவதேயாகும் என்கிறார் வள்ளுவர்.
வாழ்வின் போக்கில் எல்லோருக்குமான பிரச்சனைகள் தாம் காதல் மற்றும் காமம். இது மதியழகனின் நவீன எழுத்தில் சற்று அழுத்தமாக, விகாரமாக சொல்லப்படுகிறது.
பார்வைகள் - பார்வைகளைப் பொறுத்தமையும் முதல் நூல் மல்லிகைக் காடு மணக்கிறது சற்றே காம நெடியுடன்.
*நூலாசிரியர் மதியழகன் சுப்பையா மும்மை ரிலையன்ஸ் இன்போகாம் நிறுவனத்தில் தமிழ் மொழி பெயர்ப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். ‘அணி’என்னும் கவிதை இதழை நடத்தி வருகிறார்.
நூல் : மல்லிகைக்காடு
ஆசிரியர் : மதியழகன் சுப்பையா
வெளியீடு : மருதா பதிப்பகம்
226 (188) பாரதிசாலை,
இராயப்பேட்டை, சென்னை-14.
விலை : ரூ.50 பக்கம் : 80
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|