கட்டுரை
தேர்தல் 2006 வாக்காளர்களின் நாடித்துடிப்பு?
செம்பவளம்
தமிழ்நாட்டு தேர்தல் களம் அனல் வீசிக் கொண்டிருக்கிறது. அரசியல் கொள்கைகளின் பின்புலத்துடன் இயங்கும் கட்சிகளின் அணிவகுப்புக்கும், தனி நபர்கள் தங்களின் ஆளுமைக்கு உட்படுத்திக் கொண்ட அரசியல் கோட்பாடுகளுக்கும் உரிய போட்டி போல் தற்போது தமிழக சட்டமன்ற தேர்தல் களம் காட்சியளிக்கிறது.
இந்த இரு பெரும் பிரிவுகளை பற்றியும் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டிய வாக்காளர்கள் ஓரளவு எடை போட்டு வைத்து இருந்தாலும், தங்களின் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய கட்சிகளுக்கோ அல்லது அவர்கள் சுட்டி காட்டும் அணிக்கோ வாக்களிக்க உடனடியாக முடிவு எடுக்க சற்று தயங்கி இருக்கிறார்கள் என்பதனை ஒருவாறாக யூகிக்க முடிகிறது. தாங்கள் மானசீகமாக போற்றும் கட்சிகளிடமிருந்து ஏதோ ஒரு குறை எப்படியோ ஒரு வடிவில் வாக்களிக்க விரும்பும் வாக்காளர்களின் மனதை நெருடிக் கொண்டிருக்கிறது. தமிழக முஸ்லிம் வாக்கு வங்கி தொடர்ச்சியாக தி.மு.க. கூட்டணிக்கு பெரும்பாலும் ஆதரவாக இருந்திருக்கிறது. ஆனால் சமீப காலமாக அவர்களிடம் வேகம் பெற்று வருகின்ற கல்வி, வேலை வாய்ப்புகளில் தங்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோசம் இந்தத் தேர்தலில் வலுப்பெற்றுள்ளது. இடஒதுக்கீட்டிற்கான உத்தரவாதத்தை வழங்குகின்ற/தரும் என்று நம்பிக்கை அளிக்கின்ற கூட்டணிக்கே வாக்களிக்க இருக்கிறார்கள். இந்த நம்பிக்கையை ஊட்டுவதற்கு தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் முயற்சிக்கின்றன.
இந்த வாக்கு வங்கியை தக்க வைத்தபின் கட்சிகள் தங்களுடைய வெற்றி இலக்கை அடைவதற்கு குறிவைத்து செயல்படுவது தமிழகத்தின் பிரதான இருவித வாக்காளர் பிரிவுகளும், தேர்தல்களில் எப்பொழுதும் உற்சாகத்துடனும், அதிக எண்ணிக்கையிலும் பங்கெடுக்கின்ற பெண் வாக்காளர்களையும் நோக்கித்தான். இதில் நாம் முதலில் சொன்ன இருவித வாக்களர்கள் இதுவரை நடந்த தேர்தல்களில் இருவித பிரிவு வாக்காளர்கள் யார் என்பது கூர்ந்து கவனித்தால் தெரிந்து கொள்ளலாம்.
முதல் வித வாக்காளர்கள் விஷயம் தெரிந்தவர்களாக இருப்பார்கள். அரசியலின், அரசியல்வாதிகளின், கட்சிகளின் கடந்த காலத்தில் நடந்த விஷயங்கள், நிகழ் கால செயல்பாடுகள், வருங்காலத்தில் எப்படி செயல்படுவார்கள் என கணித்து கூட்டி கழித்து கணக்கு போட்டுப் பார்ப்பார்கள். இவர்கள் உடனடியாக முடிவினையும் எடுத்து விடமாட்டார்கள். யார், யாருடன் கூட்டு சேர்ந்து இருக்கிறார்கள். இவர்களுக்கு வாக்களித்தால் நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் எவ்வகையில் நன்மை உண்டு என்கிற சிந்தனையை மையப்படுத்தி, யாரால் நாம் இடர்பாடுகளை சந்தித்தோமோ அவர்களை முறியடிக்கும் சக்தி இவர்களுக்கு உண்டா என யோசித்து முடிவெடுக்கும் பிரிவு இவர்கள்தான்.
அரசுப் பணியாளர்கள், பல்வேறு சமூக அமைப்பினர்கள் இந்தப் பிரிவில் சேர்வார்கள். இவர்கள் கட்சிகளின் பொதுவான தன்மைகளை கணக்கிலெடுத்து வாக்களிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அ.தி.மு.க. அரசு தங்கள் மீது மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக சென்ற 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு அரசு பணியாளர்கள் வாக்களித்தார்கள். இப்பொழுது அரசுப் பணியாளர்களின் பறிக்கப்பட்ட பல்வேறு சலுகைகள், உரிமைகள் மறுபடியும் அ.தி.மு.க. அரசால் வழங்கப்பட்டிருப்பதாக கருதப்படும் சூழலில் இவர்களின் வாக்கு யாருக்குப் போகப் போகிறது என்பது இந்தத் தேர்தலில் முக்கியமாகிறது. அதுபோல மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு இருக்கின்ற சேது சமுத்திரத் திட்டம், சுனாமி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அரசின் செயல்பாடு இவை மக்களை எப்படி பாதித்திருக்கிறது என்பதைப் பொறுத்தும் கடலோர ஓட்டுக்கள் ஆளும் கட்சிக்கு சார்பாகவோ, தி.மு.க. கூட்டணிக்கு சார்பாகவோ போவதற்கு வாய்ப்பிருக்கிறது.
இப்பிரிவு வாக்காளர்களை எத்தரப்பு இழுத்து கொள்ள முயற்சிக்கிறதோ அதுவே வெற்றிக் கோட்டை நெருங்கி வரும். சரியான திருப்தி கிடைக்கவில்லையென்றால் இப்பிரிவில் சிலர் யாருக்குமே வாக்களிக்காமல் ஒதுங்கி விட கூடியவர்களாகவும் இருந்து விடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படி எடுக்கும் முடிவினை அறிவார்ந்த பிரசாரமே திசை திருப்பி இவர்களை வாக்கு அளிக்க வாக்கு சாவடிக்கு வரவழைக்க முடியும்.
மற்றொரு தரப்பு வாக்காளர்கள் புதுமுக வாக்காளர்கள். இவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு எடுக்க வைப்பது இவர்களுடைய சுற்றுப்புற சூழல் இத்தரப்பு வாக்காளர்களில் பெரும்பாலோர் குடும்பத் தலைவர் சொல்லும் அமைப்புக்கே வாக்களிக்க கூடியவர்களாக இருப்பார்கள் சிலருக்கோ தங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய வெகு நெருங்கிய நபர் சொல்கிற அமைப்புக்கே வாக்களிக்க விருப்பிய படுவதுண்டு. தன்னிச்சையாக முடிவு எடுப்பதில் சிரத்தை காட்டுவதில்லை என்பது கண்கூடாக காணும் விஷயமாக இருக்கிறது. எது எப்படியோ இத்தரப்பை வாக்களிக்க வைக்க முயற்சி செய்வது ஏற்கனவே முதலில் நாம் கண்ட வாக்கு வங்கிதான் என்பது நடைமுறையில் தென்படுகிறது. புதுமுக வாக்காளர்கள் பெரும்பாலும் கல்லூரி மாணவர்களாகவோ, .இளைஞர்களாகவோ இருக்கிற காரணத்தால் புதிதாக களம் கண்டிருக்கும் விஜயகாந்த் பக்கம் அவர்கள் சாய்வார்களா என்பதும் கேள்வியாக உள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக துடி, துடிப்பான சில வாக்காளர்கள் ஜெயிக்கிற அணிக்கு வாக்களிப்போம் என்ற மோகம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எந்தவொரு அமைப்பின் மீதும் அதிகப்படியான ஈடுபாடு இல்லாதவர்களாகவும், நாட்டு நடப்பினை பற்றி நன்கு தெரிந்தவர்களாகவும் இருப்பார்கள். தேர்தல் நேர சலுகைகளுக்கு ஓரளவு ஆட்பட்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுடைய போக்கு தேர்தலுக்கு பத்து நாட்களுக்கு முன் தென்படும். இவர்களே மோதும் அணிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்கள்.
2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ரேசனில் இலவசமாய் பத்து கிலோ அரிசி, இலவச கலர் டிவி போன்ற கோசங்கள் இவர்களை நோக்கியே ஒலிக்கப் படுகின்றன. கீழ்தட்டு தலைவர்கள் இவர்கள் மீதுதான் மிக கவனமாக இருப்பார்கள். தேர்தல் நேர அலை என்கிற வார்த்தையை இத்தரப்பு வாக்களர்களே நிர்ணயிப்பார்கள். எல்லா தொகுதியிலும் பரவலாக இருக்கும் வாக்காளர்கள் இவர்களே. எல்லா அமைப்புகளின் பிரமுகர்களின் கூட்டத்தையும் கவனிப்பார்கள். தேர்தல் அறிக்கையை படிப்பார்கள், அலசுவார்கள் ஆனால் கட்டயாம் வாக்கு அளித்து விடுவார்கள்.
அனைவரின் கவனத்திற்கும் உள்ளாகும் வாக்காளர்கள் பெண் வாக்காளர்கள்தான். இவர்களில் அறுபது சதவீதம் பேர் தன்னிச்சையான முடிவு எடுக்க கூடியவர்கள். எந்தவொரு அமைப்பால் பயன்பாடு அடைந்து இருந்தாலும் அதனை பற்றி எண்ணாமல் தாங்கள் விரும்பும் அமைப்புக்கே வாக்களிப்பார்கள். வாக்களிக்கும் முறை மிக ரகசியமாக இருப்பது பெண்கள் சுயமாக தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வாய்ப்பாக இருக்கிறது.
அதிகாலையில் வாங்கும் காய்கறி மற்றும் பால் வகையிலிருந்து இரவு நேரம் கொளுத்தி வைக்கும் கொசுவத்தி வரை ஒவ்வொன்றோடும் நேரடித் தொடர்புடையவர்களாக பெண்கள் இருப்பதால் விலைவாசி ஏற்றம் சந்தையில் பொருட்கள் கிடைக்கின்ற தன்மை இவையெல்லாம் சேர்ந்து பெண்கள் வாக்களிக்கும் முறையினை தீர்மானிக்கின்றன. மீதி நாற்பது சதவீதம் பேர் குடும்பத்திலுள்ள நபர்கள் சொல்லும் அமைப்புக்கே வாக்களிப்பார்கள் இந்த பெண் வாக்காளர்களின் நிலை கடந்த தேர்தல் வரை இவ்வாறுதான் இருந்தது.
இத்தேர்தலிலோ இவர்களின் நிலைப்பாடு சற்று வித்தியாசமாக இருக்கும் என்று தெரிகிறது. விழிப்புணர்வு கொள்ள வைக்கும் இவர்களின் போக்குக்கு முக்கிய காரணம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் எனலாம். ஆகவே இவர்கள் சற்று சிந்தித்து எவ்வித நிர்பந்தத்திற்கும் ஆட்படாமல் வாக்களிக்க முன் வருவார்கள் என எதிர்பார்க்கின்றனர்.
இத்தனை தரப்பு வாக்காளர்களையும் அந்தந்த கட்சிகள் மேற்கொள்ளும் தேர்தல் உத்திகள்தான் போட்டியை கடுமையாக்கும். ஆனால், இதில் ஒன்றை மட்டும் தெளிவாக குறிப்பிடலாம். முதல் தரப்பு வாக்காளர்கள் என கருதப்படுவோர் ஒரு முடிவினை எடுத்து விட்டார்கள். அது வாக்கு வாங்கிகளை கையில் வைத்து இருக்கும் ஒன்றோடு ஒன்று ஒருங்கிணைந்து இருக்கும் அமைப்பிடம் சார்ந்து இருப்பது போல் தெரிகிறது. அந்த அமைப்புகள் எவ்வித சிக்கலும் இல்லாமல் ஒருங்கிணைந்து தேர்தல் பணி ஆற்றினால் வெற்றியை சாதகப்படுத்தி கொள்ளலாம், இல்லையென்றால் கவர்ச்சி ரூபம் எடுத்திருக்கும் புது கட்சிக்கு உபரி வாக்குகளை விட்டு கொடுத்து இழுபறிக்கு தள்ளப்படும் நிலையும் உண்டாகலாம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|