ஒரு சூழ்நிலைக் கைதியின் மரணம்
ராஜசேகரன்
நிச்சயிக்கப்பட்ட உன் மரணமும்
என் மரணமும் கொட்டடிக்குள்
என்றல்லவா சட்டப்புத்தகங்கள்
அங்கலாய்க்கின்றன.
களைப்பின் கேவல்களென்று
ஊரே வேடிக்கை பார்க்கிறது
களைப்புற்ற பந்தயக் குதிரை போலல்லவா
நீயும் நானும் எல்லோர் முன்னும்
பந்தாடப் படுகிறோம்.
அசந்த நேரத்தில் நான் தப்ப முயல
நீ தூங்கிக் கொண்டிருக்கிறாய்.
நான் தூங்க முயலும் அந்நேரம்
நீ சுவரேறிக் குதிக்க ஆயத்தமாகிறாய்.
வறண்ட போலித் தனங்களால்
என் மார்பின் முடிகள்
ஸ்பரிசம் காணாமலேயே
தூக்குக் கயிறு மாட்டிவிடுமோ
என்கிற பயம் என்னில்.
எத்தனை காலம் தான்
நம் உறவைத் தள்ளிப் போட முடியும்.
இன்று இரவிலாவது
சுவரேறிக் குதிக்கும் என் மனதை
இறுகக் கட்டியணைத்து
உன் விருப்பத்திற் கேற்ப
என்றெண்ணியபடி
சுவற்றில் பசலைக் கையோடு. . .
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|