சிரிப்பு தரும் சிந்தனைகள்
மாற்றுபவர்களும் மாறவேண்டும்
நீலம் மதுமயன்
தேர்தல் வருகிறது தேர்தல் வருகிறது மீண்டும் உங்கள் விரல்களுக்கு கரும்புள்ளி வைக்க தேர்தல் வருகிறது என்ற நவீன குடுகுடுப்பையின் ஒலி அடங்கும் முன் அது வந்து போய்விட்டது. ஏன் வாக்களித்தவர் கை விரலில் கரும்புள்ளி வைத்தார்கள்? சில கரும்புள்ளிகளை பெரும் புள்ளிகளாக்குவதன் நினைவாகத்தான்.
ஒரு தேசத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தேர்தல் தள்ளாடக் காரணம் அறிவாளர்கள் அதை அண்ட மறுப்பதுதான். அறிவாளர்களும் சிந்தனையாளர்களும் அரசியலுக்கு அன்னியமானால் சுயநலம் அதனை சுவிகாரம் செய்து கொள்ளும் இழி நிலை வந்து சேரும். அதனால் தான் அது யாருக்கு வாக்களிப்பது? என்று சிந்திப்பவனையும் சிதற வைக்கும் போர்க்களமாகி விட்டது.
அரசியல்வாதிகள் பற்றிய மரியாதையை அவர்களே அடகு வைத்துக் கொள்வதை அவர்களே ஒரு அவமானமாகக் கருதவில்லை. இந்தத் தேய்வு நிலை நீங்க வேண்டும். மரியாதை மிகுந்த, மதிப்பு மிகுந்த, தியாகம் மிகுந்த அரசியல் இன்று வணிக நோக்குடையதாகி வருகிறது.
‘எங்கக் கட்சித் தலைவர் மெத்தையில் படுக்க மாட்டார். எப்பவுமே தரையில்தான் பாய் விரித்துப் படுப்பார். அவ்வளவு எளிமை’- என்று சொன்னதைக் கேட்டதும் அடுத்தவர், ‘அது ஒண்ணும் எளிமைக்காக இல்லை காலையில் எழுந்ததுமே எதையாவது சுருட்டணும்ணுதான்’- என்றார். இந்த சுருட்டும் போக்கை சுருக்கிக் கொண்டால் அரசியலுக்கும் சுவை கூடும்.
தற்காப்புச் சிந்தனை ஒரு சராசரிக்கு இருப்பதைவிட அரசியல்வாதிக்கு அதிகமாகி வருவதும் தவிர்க்கப்பட வேண்டும்.
முண்டந்துறை புலிகள் சரணாலயத்தைப் பார்க்க ஒரு கட்சியைச் சேர்ந்த சிலர் போனார்கள். அந்த கிளையின் தலைவர் அவர்களை வழி நடத்திக் கொண்டு போனார். திடீரென்று முன்னால் போன தொண்டர்கள் புலி புலி என்று கத்திக் கொண்டே ஓடி வந்தனர். உடனே அந்தத் தலைவர் உரத்தக் குரலில், ‘புலி என்னடா புலி. இந்தப் புலிக்கா பயப்படுறீங்க, நான் கீழே படுத்துக்கிறேன் புலிக்குப் பயப்படுறவன் எல்லாம் எம் மேலவந்து படுங்கடா’- என்றரே பார்க்கலாம்.
பொது நலம் பேண வேண்டியவர்கள் சுய நலத்தின் சொந்தக்காரர்களாக இருப்பது மேலும் அரசியலை அவஸ்த்தையாக்கும். இது பற்றிச் சிந்திக்க வேண்டும்.
அன்றோ வாணிகம் செய்ய வந்தவர்கள் அரசியல் நடத்தினார்கள், இன்றோ அரசியல் நடத்த வந்தவர்கள் வாணிகம் செய்கிறார்கள் என்று எண்ண வைப்பதுதான் வேதனை தரும் விஷயம்.
சொந்த உழைப்பில் கோடிகளைச் சம்பாதிப்பதில் இங்கு யாருக்கும் வருத்தம் இல்லை. ஆனால் சுரண்டலில் கோடிகளைச் சேர்ப்பதுதான் கனவை கரை சேர்க்க முடியாத தடையாக மாறிவிடுகிறது.
ஒருமுறை வடநாட்டு எம்.எல்.ஏ. ஒருவர் தன் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு தமிழ் நாட்டு எம்.எல்.ஏ. ஒருவரை அழைத்திருந்தார். போனவர் அந்த வடநாட்டு எம்.எல்.ஏ. போட்டிருந்த வீட்டைப் பார்த்து வியந்து போய், ‘ஓராண்டு ஆட்சி முடிவதற்குள்ளாகவே எப்படி இப்படி ஒரு பெரிய வீடு உங்களால் போட முடிந்தது?’- என்று கேட்டார்.
உடனே வடநாட்டு எம்.எல்.ஏ. நம்மாளுகிட்ட, ‘அவசியம் தெரியணுமா?’- என்று கிராக்கி பிண்ண, நம்மாள், ‘தெரிஞ்சா நானும். .’ என்றுதலையைச் சொறிய, அவர் வீடு போட்ட கதையை சொல்வதற்காக மொட்டை மாடிக்கு அழைத்துக் கொண்டு போனார்.
மாடியில் நின்று கொண்டு, ‘அதோ அங்கே பாருங்கள் ஒரு மலை தெரிகிறதா?’- என்று கேட்க நம்ம ஆள், ‘ம்ம் தெரியுது’- என்று பவ்வியமாக தலையை ஆட்டினார்.
‘அந்த மலையில் ஒரு ஆறு தெரிகிறதா?’
‘ஆமா தெரியுது’
‘அந்த ஆற்றில் ஒரு பாலம் தெரிகிறதா?’
‘ஆமாமா தெரியுது’
‘அந்த பாலம் கட்டும் போது மீதி வந்த இரும்பும் சிமிண்டும் தான் இந்த வீடு’- என்றார். இந்த பால பாடத்தை படித்த நம்மவர் அடுத்த ஆண்டிற்குள்ளாகவே ஒரு பெரியவீடு கட்டி அந்த வடநாட்டு எம்.எல்.ஏ.வை விருந்துக்கு அழைத்தார்.
வந்தவர், ‘என்னப்பா எங்கிட்ட கத்துக்கிட்ட விஷயத்த வச்சி இவ்வளவு சீக்கிரமா இவ்வளவு பெரிய வீட்ட நீ எப்படிக் கட்டின?’- என்று கேட்டார். உடனே நம்ம ஆள் அவரை மொட்டை மாடிக்கு அழைத்துக் கொண்டு போனார்.
‘அதோ மேற்கே ஒரு மலை தெரிகிறதா?’
‘ஆமா தெரியுது’.
‘அதில ஒரு ஆறு தெரியுதா?’
‘ஆமாமா தெரியுது’.
‘அந்த ஆத்துல ஒரு பாலம் தெரியுதா?’
‘ஆத்துல பாலம் ஒண்ணும் தெரியல்லியே..!
‘எப்படித் தெரியும்? அந்தப் பாலம்தான் இந்த வீடு’- என்றாரே பார்க்கலாம். இது சிரிப்புக்கு உரியது மட்டுமல்ல சிந்தனைக்கும் உரியது.
மனிதத்தை தொட்டில் கட்டி தூங்க வைத்துவிட்டு, இனத்தையும் மதத்தையும் தட்டி எழுப்பி வாக்காக்கும்
முயற்சியை முறியடிப்பது யார்?
திருநெல்வேலியில் முதல் நாள் ஒரு பள்ளிக்கூடத்தை திறந்து வைத்த அமைச்சர், ‘இந்தப் பள்ளிக் கூடத்தை உங்களுக்காகவே திறந்து வைத்துள்ளேன் இதனை எல்லோரும் பயன்படுத்துங்கள்’- என்று பேசினார். மக்கள் கைதட்டி மகிழ்ந்தார்கள்.
மறுநாள் அம்பாசமுத்திரத்தில் ஒரு துணிக்கடையை திறந்து வைத்துப் பேசினார் அந்த அரசியல்வாதி, ‘இந்தத் துணிக் கடையை மக்களுக்காக திறந்து வைக்கின்றேன். அதிகமான அளவில் மக்கள் பயனடைய வேண்டுகின்றேன்’- என்று பேசியதும் அதற்கும் மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
அடுத்த நாள் குற்றாலத்தில் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் ஒரு கூட்டத்திறப்பு விழா. அங்கும் அந்த அரசியல்வாதி, இந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியை மக்களுக்காக திறந்து வைக்கின்றேன். அதிகமான அளவில் நீங்கள் இங்கு வந்து இதனைப் பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றேன்’- என்று பேசி முடித்ததும் இதற்கும் கைதட்டி மக்கள் ஆரவாரம் செய்தனர்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|