Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
மே 2006
மருத்துவப் பக்கம்

இந்திய மருத்துவம் இயற்கை மருத்துவமா?
தொகுப்பு: வி. கீதா

நீண்ட கலாச்சார வரலாற்றுப் பின்னணியில் பல வகையான பாரம்பரிய மருந்துகளையும், மருத்துவ முறைகளையும் இந்தியா கொண்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் போதுமான ஊக்கமில்லாததால் இவை பாதிக்கப்பட்டு ஆங்கில மருந்துகளின் ஆதிக்கம் மேலோங்கியது. விரைவான தொழில் மயமாக்கத்தின் காரணமாக மக்கள் தங்களுடைய உடல் நலக் குறைவுகளுக்கு உடனடித் தீர்வை தேடினர். ஆங்கில மருத்துவ முறை அதையே அளித்தது. மருத்துவரின் ஆலோசனை சீட்டும், மருந்து புட்டிகள் மீதான குறிப்புகளும் மாத்திரமே அப்போது சிகிச்சைக்கு போதுமானவையாக இருந்தன.

மாறாக, பாரம்பரிய மருந்துகளை பொறுத்தமட்டில் ஒவ்வொரு முறையும் நோயாளி தன்னை பார்க்க வரும் பொழுதும் வைத்தியர் அல்லது ஹக்கிம் இவற்றை தயாரித்து கொடுக்க வேண்டியிருந்தது. இன்று ரசாயன சேர்க்கை மற்றும் செலவு மிகுந்த நவீன மருந்துகளினால் ஏற்படும் பின்விளைவுகளையும் பாரம்பரிய மருத்துவ முறைகளின் நன்மைகளையும் மக்கள் மெல்ல மெல்ல உணர்ந்து வருகிறார்கள். நோய்களின் அறிகுறிகளை மாத்திரமல்லாது அவற்றுக்கான முழு காரணங்களையும் கண்டுபிடித்து அவற்றுக்கு நீண்டகால தீர்வளிக்க பாரம்பரிய மருத்துவ முறைகள் உதவுகின்றன.

இதை கருத்தில் கொண்டு இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ‘ஆயுஷ்’ என்ற பிரத்யேக துறையை உருவாக்கியுள்ளது. ‘ஆயுஷ்’ என்பது ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகியவற்றின் ஆங்கில வார்த்தைகளின் சுருக்கமாகும். சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தத்துறை இந்திய மருத்துவ முறைகளையும், மருந்துகளையும் ஊக்குவிப்பதற்கும் பரப்புவதற்கும் பாடுபட்டு வருகிறது.

யுனானி மருத்துவமுறை கிரீஸ் நாட்டிலிருந்தும், ஹோமியோபதி முறை ஜெர்மனியில் இருந்தும் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இவற்றை ஏற்றுக்கொண்ட நாம் பின்னர் நமது தேவைகளுக்கேற்ப இவற்றை மாற்றியமைத்துக் கொண்டோம். இந்த வெற்றி நமது நாட்டின் உயிரி பன்முகத் தன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு என்றும் கொள்ளலாம். வடக்கில் இமயமலை சரிவுகளில் இருந்து தெற்கே வெப்பமான பகுதிகள், மேற்கே பாலைவனங்களில் இருந்து கிழக்கே சதுப்பு நிலங்கள் வரையான பகுதிகள் ஆயுர்வேத, யுனானி மற்றும் சித்தா முறையில் மருந்துக் கலவைகளை தயாரிப்பதற்கான மருத்துவச் செடிகளையும், மூலிகைகளையும் வழங்கி வருகின்றன.

இந்திய மருத்துவ முறைகளின் நன்மைகளை மேற்கத்திய நாடுகள் மெல்ல மெல்ல தற்போது உணர்ந்து வருகின்றன. அந்நாடுகளுக்கு இவை இன்னும் மாற்று சிகிச்சை முறைகளாகவே உள்ளன.
தற்போதைய வாழ்க்கை முறைகளுக்கேற்ப இந்த மருத்துவ முறைகளின் திறன்களை அறிவியல் அடிப்படையில் விளக்குவதற்கான திட்டத்தை ஆயுவுமுறை மேற்கொண்டுள்ளது. கல்வித் தரத்தை உயர்த்துவது, தரக்கட்டுப்பாடு, மருந்துகளை தரம் பிரித்தல் போன்றவை முக்கியத் திட்டங்களாக தெரிந்தெடுக்கப் பட்டுள்ளன. இப்பிரிவுகள் ஒவ்வொன்றுக்குமான மத்திய குழு ஒவ்வொரு மருத்துவமுறை குறித்தும் மக்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் விழிப்புணர்வை உருவாக்க முயன்று வருகிறது. இந்த மருத்துவ முறைகளில் காணப்படும் அறிவுக் களஞ்சியங்களை தற்போதைய நடைமுறைகளுக்கேற்ற வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதே இத்துறையின் விருப்பமாகும்.

ஆயுர்வேதம் கிட்டத்தட்ட நமது நாகரீகத்தைப் போன்று பழமையானது. இந்த உயிர் அறிவியல் உடல், உள்ளம், சமூக அம்சங்களை உள்ளடக்கியதாகும். மற்ற அனைத்து மருத்துவ முறைகளைக் காட்டிலும் ஆயுர்வேத முறை விரிந்து பரந்தது. உட்கொள்ளும் மருந்துகள், அறுவைச் சிகிச்சை, கண், காது, மூக்கு, தொண்டை குழந்தைகளுக்கான வியாதிகள், மகப்பேறு, மனநோய் உள்ளிட்ட எட்டு பிரிவுகளை கொண்டதாகும். இந்த மருத்துவ அறிவியல் விரைவாக புதுப்பிக்கப் படுகிறது. இந்த முறையை மேம்படுத்தும் வகையாக மேலும் பல பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆயுர்வேதம், யுனானி, சித்தா போன்ற எந்த முறைகளாக இருந்தாலும் மருந்துகள் தயாரிப்பதில் தரமான மூலப்பொருட்கள் கிடைப்பது ஒரு முக்கியப் பொருளாக உருவாகியுள்ளது. மருத்துவச் செடிகள் வாரியம் மூலமாக உற்பத்தியாளர்களுக்கு தரமான மூலப் பொருட்கள் கிடைக்க அரசு வழி செய்கிறது. இதற்காக இச்செடிகளைப் பாதுகாத்தல், வளர்த்தல், பதனிடுதல், மருந்துகளுக்கு தேவைப்படும் அடிப்படைப் பொருட்களை உற்பத்தியாளர்களுக்கு வழங்குதல் போன்ற பல பணிகளை இந்த வாரியம் செய்து தருகிறது. வரும் நாட்களில் உள்நாட்டு உபயோகிப்பாளர்களின் தேவைகளுக்கு மாத்திரமின்றி ஏற்றுமதிக்கான வாய்ப்புகளும் பெருகும்.

‘அனைவருக்கும் சுகாதாரம்’ என்ற குறிக்கோளை எட்டுவதற்கான வழிமுறைகளில் ஒன்றாக பாரம்பரிய மருத்துவத் திட்டத்தை உலக சுகாதார அமைப்பு ஏற்றுக் கொண்டது. எனினும் முழு அறிவியல் அடிப்படையிலான மருத்துவ முறைகளுக்கு மாத்திரமே இந்த அமைப்பு அனுமதி வழங்குகிறது.
நமது வாழ்க்கை முறைகள் வெகுவாக மாறிவருவதையடுத்து இதயநோய் போன்ற பல வியாதிகள் அதிகமாகி வருகின்றன. நீரழிவு நோய் அமைதியாக நின்று கொல்லும் ஒரு வியாதியாகும். எத்தனை மாத்திரைகளை விழுங்கினாலும் பலன் ஏற்படப் போவதில்லை. பல இதய நோய்கள் பளு நிறைந்த வாழ்வுடன் நேரடித் தொடர்பு கொண்டவை. இயற்கை மருத்துவம் மூலம் இவற்றை கட்டுப்படுத்த இயலும். இயற்கை மருத்துவம் ஒரு மிகச் சிறந்த முறையாகும். இது பட்டினியாக இருப்பதைப் பற்றியதோ, அரியவகை உணவுகளை உட்கொள்வதைப் பற்றியதோ அல்ல. ஒவ்வொரு தனிநபரின் உடல்வாகு மாறுபட்டது. எனவே அதற்கான தேவைகளும் மாறுபடுகின்றன.

மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது யுனானி மருத்துவ முறையும் ஆயுர்வேதத்தைப் போன்றே தோன்றலாம். ஆனால் நுட்பமான மாறுபாடுகள் உண்டு. உடலில் உள்ள திரவங்களின் ஓட்டங்கள் - குறிப்பாக நோய் தடுப்புக்கானவை. அடிப்படையில் யுனானி முறை அமைந்துள்ளது. இரத்தம், கபம், மஞ்சள் பித்தம், கருப்பு பித்தம் ஆகியவை உடலில் உள்ள நான்கு திரவங்களாகும். ஒரு மனிதனின் நடையுடை பாவனைகள் இந்த திரவங்களின் அளவைப் பொறுத்ததாகும். அதே போன்று மருத்துவ செடிகளுக்கும் தனித்தனியே குணங்கள் அமையப் பெற்றுள்ளன. முன்பு குறிப்பிட்டதை போன்று நோயாளியின் உடம்பில் உள்ள திரவங்களைப் பொறுத்து நோய்க்கான மருந்துகளின் கலவைகளும் மாறுபடுகின்றன. இம்முறையிலான சிகிச்சைகள் இதுவரை நல்ல பலனை கொடுத்துள்ளன. வாதநோய், மஞ்சள் காமாலை, எக்சிமா, சொறி, கால் வீக்கம், ஆஸ்த்மா போன்ற வியாதிகளை குணப்படுத்துவதில் யுனானி முறை மருந்துகள் சிறப்பான இடத்தை வகிக்கின்றன. மற்ற இந்திய மருத்துவ முறைகளை போன்று எச்ஐவி, எய்ட்ஸ், புற்றுநோய், இதயநோய்கள் மற்றும் காசநோய் ஆகியவற்றுக்கும் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை யுனானி மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

ஆயுர்வேதம் போன்றே சித்தா மருத்துவ முறையும் தொன்மையானதாகும். சித்தர்கள் என்ற வார்த்தையில் இருந்து இந்த பெயர் உருவாகியதாக தோன்றுகிறது. இவர்களில் 18பேர் இந்த மருத்துவ முறைக்கு பெரும் பங்காற்றியிருப்பதாக நம்பப்படுகிறது. இவர்களுள் அயோத்திதாசப் பண்டிதர் குறிப்பிடத்தக்கவர். இவருடைய நினைவாக தற்போது சென்னையில் சித்தவைத்திய ஆராய்ச்சி மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. சித்தமருத்துவ முறையின் கோட்பாடுகளும், செயல்பாடுகளும், ஆயுர்வேத முறைக்கு ஒத்துள்ளன. அவசர சிகிச்சை நோய்கள் நீங்கலாக பிற வியாதிகளை குணப்படுத்தும் வலிமை சித்த மருத்துவ முறையின் சிறப்பு அம்சமாகும். பால்வினை நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள், ஈரல் சம்பந்தப்பட்ட வியாதிகள், இரத்த சோகை, வயிற்றுப் போக்கு, வாதம், ஒவ்வாமை போன்றவைகளுக்கு சித்த மருத்துவ முறை சிறந்த பயன் அளிக்கிறது.

அதிக செலவில்லாதது என்பதைக் காட்டிலும் அதன் திறனுக்காவும், வசதிக்காகவும் ஹோமியோபதி முறை இந்தியாவில் பிரபலமடைந்துள்ளது. மருத்துவ செலவுகள் பெருகி வரும் நிலையில் ஹோமியோபதி முறை ஒரு வரப்பிரசாதம் என்று கூட கூறலாம். ஹோமியோபதி முறையில் குணமாக்கப்படும் வியாதிகள் பல உண்டு. வைரஸ் காய்ச்சல், குழந்தைகளின் சாதாரண வியாதிகள், கருவுற்ற பெண்களுக்கான பிரச்சனைகள் போன்றவை இதில் அடங்கும். எச்.ஐ.வி., எய்ட்ஸ், புற்றுநோய், போதை மருந்து பழக்கங்கள், உயர் இரத்த அழுத்தம் போன்ற வியாதிகளுக்கு பிற மருந்துகளுடன் ஹோமியோபதி முறையை பயன்படுத்துவதால் சுகாதாரம் மேம்படும் என்று தெரியவந்துள்ளது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com