தலையங்கம்
இதுதான் வர்ணாசிரம தர்மம்
ஆசிரியர்
உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து நடைபெற்ற பத்தொன்பது நாள் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. எந்த முடிவுக்கும் வராமல் உச்சநீதிமன்றம் பிரச்சனையை தற்காலிகமாக ஒத்தி போட்டிருக்கிறது.
இந்த பத்தொன்பது நாள் போராட்டத்தின் போது ‘போராட்டக்காரர்கள்’ தங்கள் போராட்ட வடிவமாக ‘தெரு’ப் பெருக்கினார்கள், ‘ஷுக்களுக்கு பாலீஸ்’ போட்டார்கள். இந்தத் தொழில்களைப் பற்றியும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களைப் பற்றியும் ‘போராட்டக்காரர்கள்’ உருவாக்கி வைத்திருக்கும் கீழ்த்தரமான மதிப்பீட்டின் வெளிப்பாடு இது. ஆனால் தங்கள் இயக்கத்திற்கு மட்டும் சமத்துவத்திற்கான இயக்கம் எனப் பெயர் சூட்டிக் கொண்டார்கள். சாதிக்கொரு தர்மம் பேசிய நாட்டில் என்றைக்கு சமத்துவம் இருந்தது.
சாதி ரீதியாக பிளவுண்டு கிடக்கும் ஒரு சமூக அமைப்பில், அந்த பிளவின் கொடூரம் குறித்து இரண்டாயிரம் ஆண்டு காலமாக கொஞ்சமும் கவலைப்படாதவர்கள் இப்பொழுது தங்களின் சாதி அதிகார ஏகபோகத்தின் மீது உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டுச் சட்டம் கைவைக்கிறது என்று தெரிந்தவுடன் அலறுகிறார்கள். காலம் காலமாக இந்தியாவில் சாதியும்/தொழிலும் இணைந்தே செயல்பட்டு வந்திருக்கிறது. செய்யும் தொழிலை வைத்தே மக்கள் சாதி ரீதியாக கீழ்நிலைப் படுத்தப் பட்டிருக்கிறார்கள். இதற்கு மருத்துவம், தோல் தொழில், மீன்பிடித் தொழில் எனப் பல உதாரணங்களைச் சொல்லலாம். ஐரோப்பிய கல்வியோடு இந்த தொழில்கள் இணைந்த போது பொருளியல் ஆதாயங்களுக்காக இந்த மேல்சாதிக்காரர்கள் இந்த தொழில்களைக் கையிலெடுத்தார்கள். இப்போது இதே சாதி தன் தொழிலாக மருத்துவம்; பொறியியல்; தோல் தொழில் (பாட்டா குரூப்ஸ்) என மாற்றிக் கொண்டது. அத்தொழில்களின் வழியாக அதிகாரம் கட்டமைக்கப்பட்டது.
வி.பி.சிங் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் மண்டல் கமிசன் அறிமுகப் படுத்தப்பட்ட போது அதனை எதிர்த்த இந்த இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களின் மூதாதையர்கள் ‘வேலை கொடுத்தால் தரம் கெட்டு விடும்’ எனவே கல்வியில் இடஒதுக்கீடு கொடுக்கலாம் என்று கூறினார்கள். இப்போது உயர் கல்வியில் இடஒதுக்கீடு என வரும்போது அந்த உரிமையை கொடுக்கக்கூடாது என்கின்றனர்.
இடஒதுக்கீட்டினால் தரமோ திறமையோ பாதிக்கப்படாது என்பதற்கு தென்னிந்திய மாநிலங்களே உதாரணம். இந்தப் பிரச்சனையில் தென்னிந்தியாவின் குரல் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக இருந்தது. இடஒதுக்கீட்டால் பலனை அனுபவிக்கப் போகிறவர்களை வைத்தே 1998ல் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி. கூட்டணி மண்டல் கமிசனுக்கு எதிராகப் போராடியது. இன்று ஆர்.எஸ்.எஸ்.சின், NRI-களின் பிள்ளைகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். உயர் கல்வியின் ஏகபோக பலனை அனுபவித்த NRI-களின் பிள்ளைகள் உழைப்பதற்கு அமெரிக்கா செல்கின்றனர். இவர்களின் கல்விச் செலவை 75ரூ வரிக்கொடுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களே மேற்கொள்கின்றனர். இப்போது பிற்படுத்தப் பட்டவர்களின் பிள்ளைகள் அதே கல்வியை பயிலுவதற்கு ஏன் தடையிட வேண்டும்? பதில் ரொம்ப சுலபம். ஏகலைவன்கள் கட்டை விரலை வெட்டத்தான் வேண்டும். துரோணாச்சாரியார்கள் ஆளத்தான் வேண்டும். இதுதான் இந்தியாவின் வர்ணாசிரம தர்மம்.
-எஸ். ராஜா ஹஸன், ஆசிரியர்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|