சர்வதேச சாளரம்
அர்ச்சனா
நைஜீரியா
பாரிஸ் கிளப் என அறியப்படும் அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பணக்கார நாடுகளிடம் வாங்கிய 1200 கோடி டாலர் கடன் தொகையை நைஜீரிய அரசு முழுமையாகத் திருப்பி செலுத்தியுள்ளது. இந்த 1200 கோடி டாலர் கடன் என்பது நைஜீரியாவில் இதற்கு முன்பிருந்த இராணுவ ஆட்சியாளர்களும் அதற்கு முந்தைய ஆட்சியாளர்களும் வாங்கிக் குவித்த கடனும் அதற்குரிய வட்டியும். நைஜீரியாவில் இப்பொழுது ஜனநயாக ஆட்சி நடைபெறுகிறது. நைஜீரியா அதிபர் பேச்சு வார்த்தை நடத்தி கடன் தொகையை 60ரூ தள்ளுபடி செய்ய வைத்துவிட்டார். திருப்பிச் செலுத்துவதன் மூலம் மிச்சமாகும் பணத்தை வறுமையை ஒழிக்கவும் நாட்டை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்ல பயன்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது. இந்த வருட ஆரம்பத்தில் (2006) கடன் தொடர்பான தரமதிப்பீட்டு நிறுவனங்கள் இரண்டு நைஜீரியாவின் திருப்பிசெலுத்தும் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி BB-என மதிப்பிட்டதுதான் இதில் விந்தையானது.
நைஜீரியா அதிபர் ஓலுஸ்ஜென் ஒபா சாஞ்சோ குழப்பம் நீடிக்கும் நைஜர் டெல்டா பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் வளர்ச்சி திட்டம் ஒன்றையும், 160கோடி டாலர் செலவில் நெடுஞ்சாலைத் திட்டம் ஒன்றையும் அறிவித்துள்ளார்.
செர்னோபில்
ஏப்ரல் 26 செர்னோபில் அணுஉலை வெடிப்பின் 20வது ஆண்டு. சாவுக்கணக்குகள் பற்றி பல்வேறு தகவல்கள் இருக்க கிரின்பீஸ் அறிக்கையின் படி 92,000 பேர் கொல்லப்பட்ட இவ்விபத்தில் உருவான கதிரியக்க மேகங்கள் ஐரோப்பாவின் பெரும்பகுதியிலும் உக்ரைனிலும் பத்து நாட்கள் வரை நீடித்தது. நார்வேயின் இறந்துபோன மானின் இறைச்சியில் கதிரியக்க பாதிப்பு இருந்தது. தைராய்டு சுரப்பியின் கோளாறுகள், புற்றுநோய், ரத்தப் புற்று உள்ளிட்ட நோய்கள் பாதிக்கப்பட்ட பல நாட்டு மக்களை இன்னமும் வாட்டுகிறது. கதிரியக்கம் 1600கி.மீ. சுற்றளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கதிரியக்கத்தின் விளைவாக சாவுகள் இன்றும் தொடர்கின்றன.
ஈரான்
அமெரிக்காவின் தவறான மற்றும் தான்தோன்றித் தனமான நடவடிக்கைகள் எல்லா தரப்பினரையும் பல்வேறு வகையில் கவலை கொள்ள வைத்துள்ளது. குறிப்பாக ஈராக், ஈரான் உள்ளிட்ட அரபு நாடுகள் மீதான அமெரிக்காவின் அணுகுமுறை எண்ணெய் விலையில் ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஜி.7 என்று அழைக்கப்படும் பணக்கார நாடுகள் எண்ணெய் விலை உயர்வு குறித்த கவலையை தெரிவித்துள்ளன. ஈராக் யுத்தத்தினை ஒட்டி 25 டாலர் விலையாக இருந்த ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை ஈரான் மீதான அமெரிக்காவின் தவறான அணுமுறையைத் தொடர்ந்து 75 டாலராக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா-பிரிட்டிஷ் படைகள் இணைந்து ஈரானுடன் போர் செய்வதாக ஒத்திகைப் பார்த்திருக்கும் தகவல் வெளிவந்துள்ளது. ஹாட்ஸ்பெர் 2004 எனப் பெயரிடப்பட்ட இப்பயிற்சி அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்திலுள்ள பெல்வாயிர் கோட்டையில் நடந்துள்ளது. காஸ்பியன் கடலை மையமாக வைத்து நடக்கும் இந்த யுத்தம் 2015ல் நடப்பதாக வகுக்கப்பட்டுள்ளது. கொரோனா என்ற நாட்டுடன் ஏற்படும் யுத்தம் என கற்பனை செய்யப்படும் இதில் எதிரிநாட்டின் எல்லைகள் ஈரானுடையனவாகும். ‘வருடத்தின் பிரதான ஒத்திகை நிகழ்ச்சி’ என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் கூறும் இந்த நிகழ்வினை ஒட்டி முன்னாள் உளவுத்துறை அதிகாரி வில்லியம் ஆட்கின் கூறுகையில் ‘அமெரிக்கா ராணுவ யுத்த திட்டங்கள் தந்திரங்கள், வகுத்து வரைபடங்களை ஆய்ந்து யுத்தத்திற்கு தயாராகி வருகிறது’ என்கிறார்.
பிரிட்டன்
மால்கம் கென்டல் ஸமித் என்ற பிரிட்டிஷ் விமானப்படை அதிகாரி ஈராக் யுத்தத்தில் ஈடுபட மறுத்ததால் வேலை நீக்கம் செய்யப்பட்டு எட்டுமாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப் பட்டுள்ளார். சட்டவிரோத போர் என்பதால் ஈடுபட மறுப்பதாக கூறும் இந்த அதிகாரி தன்னைப் போன்று பலரும் இவ்வாறு கருதுவதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் மற்றொரு ராணுவவீரர் வென்கிரிஃபின் யுத்தத்தை எதிர்த்து ராணுவத்திலிருந்து ராஜினாமா செய்தார்.
விருதுகள் விற்பனை
இங்கிலாந்தில் பிரதமர் அலுவலகம் பணம் பெற்றுக் கொண்டு விருதுகள் வழங்கியதாக சர்ச்சை எழுந்துள்ளது. நாடடின் உயர்விருதுகள் ஆளுங்கட்சிக்கு பணம் வழங்கியவர்களுக்கு வழங்கப்பட்டதாக சமீபத்தில் ராஜினாமா செய்த அதிகாரி டெஸ் ஸ்மித் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். ஆளும் லேபர் கட்சிக்கு ‘கடன்’ வழங்கியவர்கள் நான்கு பேருக்கு பிரபு பட்டம் வழங்க பிரதமர் சிபாரிசு செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு கோடி பவுண்ட் இருந்தால் மேலவை பிரபுக்கள் சபையில் இடம் பிடித்து விடலாம் என்று மாறுவேடத்தில் சென்ற பத்திரிகை நிருபரிடம் ஸ்மித் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்துத் தெரிவிக்க பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
ஹங்கேரி
அதிகரித்து வரும் பட்ஜெட் பற்றாக்குறை, வேலையில்லா திண்டாட்டம், பண மதிப்பு குறைந்து வருவது ஆகிய பிரச்சனைகளை தேர்தல் களத்தில் முன்னிறுத்தி ஹங்கேரியில் மே 23ல் இறுதி கட்டத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் வீசும் சிகப்பு அலை ஹங்கேரியிலும் வீசி அங்கு இடதுசாரிகளை ஆட்சியில் அமர்த்தும் என்பதை முதற்கட்ட வாக்கெடுப்பின் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. முதற்கட்ட வாக்கெடுப்பில் அங்குள்ள இடதுசாரி கட்சியான சோசலிஸ்ட் கட்சிக்கு 43% வாக்குகளும் வலதுசாரி கட்சியான சிவிக்யூனிக் கட்சிக்கு 42% வாக்குகளும், மற்றொரு இடதுசாரி கட்சியான சுதந்திர ஜனநாயக கட்சிக்கும் / வலதுசாரி கட்சியான டெமாக்ரடிக் கட்சிக்கும், தலா 5% வாக்குகளும் கிடைத்துள்ளன.
இந்தியா
இந்தியாவிலிருக்கும் பயிரிடத்தகு நிலப்பரப்பில் 175 மில்லியன் ஹெக்டேர் நிலம் தரிசாகவும் வளமிழந்தும் காணப்படுகிறது. இதில் ஜெப்ரோபா, மாகுவா, ஆமணக்கு போன்ற உயிரி டீசல் (Bio Diesel) தயாரிக்கப்படும் எண்ணெய் வித்துத் தாவரங்களை பயிரிடலாம் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். பிரேசில் நாடு இதற்கு முன்னோடியாக உள்ளது.
இத்தாலி
இத்தாலியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்தக் கூட்டணியின் தலைவர் ரோமனோ குரோடி. இவர் இப்போது ஐரோப்பா யூனியனின் தலைவராகவும் இருக்கிறார். பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்த வெற்றியை அங்கீகரித்து வாழ்த்துக்களை அனுப்பியுள்ளன. இத்தாலியின் இரண்டு அப்பீல் நீதிமன்றங்களும் இந்த வெற்றியை உறுதி செய்திருக்கின்றன. ஆனால் இந்த வெற்றியை இத்தாலியின் தற்போதைய பிரதமரும், உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், டி.வி. மற்றும் பத்திரிகை அதிபருமான சில்வியோ பெருலுஸ் கோனி ஏற்க மறுத்துள்ளார். விரைவில் இடதுசாரி கூட்டணி உடையும் (உடைப்போம்) என்றும், தற்போது தனக்கு மேலவையில் இருக்கும் செல்வாக்கை வைத்து சட்டங்கள் எதையும் நிறைவேற்ற விடமாட்டேன் என்றும் பெருனஸ் கோனி கூறுகிறார்.
அமெரிக்கா
அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் மூத்த இயக்குநர் மேரி மக்கர்பி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஈராக் நாட்டு சிறைகளில் கைதிகள் சித்தரவதை செய்யப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு வகித்தவர் இவர் என்பது குறிப்படத்தக்கது. உலகின் பல்வேறு நாடுகளில் சிறைச்சாலைகளை
அமைத்து குற்றம் சாட்டப்பட்டவர்களை அடைத்து வைத்து சி.ஐ.ஏ. அமைப்பு சித்தரவதை செய்வதாக செய்திகள் வெளியானதையடுத்து அமெரிக்க அரசுக்கும், அமெரிக்காவை கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்கும் இங்கிலாந்து பிரதமர் டோனிபிளேருக்கும் நெருக்கடி முற்றியது. சித்தரவதைகள் குறித்த தகவல்கள் வெளியானதற்கு மெரிமக்கர்பி தான் காரணம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெரு
பெரு நாட்டில் யூபினாத் என்ற பெயருடைய எரிமலை புகையை கக்கத் தொடங்கியிருக்கிறது. இன்னும் சில தினங்களில் அந்த எரிமலைப் பாறைகள் வெடித்துச் சிதறும் என்று தெரிகிறது. இது ஆறு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பாதிப்பை உருவாக்கும் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். எனவே எரிமலை இருக்கும் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் அவர்களின் வாழிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்தப் பட்டிருக்கிறார்கள். தற்போது அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு அந்த இடம் இராணுவத்தினரின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எரிமலையிலிருந்து வெளிவரும் சாம்பல், அமிலத்தன்மை வாய்ந்த புகை இவற்றினால் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நேபாளம்
2006 பிப்ரவரி 25 நேபாளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம், அரசர் ஞானேந்திராவால் கலைக்கப்பட்டது. இதை எதிர்த்து ஏற்பட்ட மக்களின் போராட்டம் நேபாளத்தின் மாவோயிஸ்ட்கள் மற்றும் ஏழுகட்சி கூட்டணிகளின் தலைமையில் தொடர்ந்து நடைபெற்று தீவிரமடைந்தது. நேபாளத்திற்கு புதிய அரசியல் சாசனம் வேண்டும், மன்னர் ஞானேந்திரா பதவி விலக வேண்டும். நேபாளத்தைக் குடியரசு நாடாக அறிவிக்க வேண்டும் என்ற மூன்று முக்கிய கோசங்கள் போராட்டத்தின் போது முன்வைக்கப்பட்டன. சென்ற இரண்டு வாரமாக கூர்மையடைந்த இந்தப் போராட்டத்தில் பதினான்குக்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர், போராட்டம் வலிமையடைந்த உடன் மன்னர் ஞானேந்திரா பிரதமர் பதவிக்கான வேட்பாளரை அறிவிக்க சொல்லி போராட்டக்காரர்களிடம் கோரிக்கை வைத்தார். இந்தத் கோரிக்கையை போராட்டக்காரர்கள் நிராகரித்தனர். வேறுவழியில்லாமல் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு மன்னர் இப்பொழுது ஒத்துக் கொண்டுள்ளார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|