உமா மகேஸ்வரி கவிதைகள்
மரப்பேழை
மேக மதில் விளிம்பில் தெரிகிறது
நான்
ஒரு போதும் கேட்டிராத
நட்சத்திரத்தின் சங்கீதம்.
அதன்
ஒளிச் சரடுகள்
வளைத்திழுக்கின்றன என்னை,
விழியோரம் சுழன்றாடும்
ஒளிச்சக்கரங்கள் எறிந்து,
என்னைத் துளைக்கும்
கயிறுகள் இறுகும்,
மகள், மனைவி, மருமகள்
பிறகு அதிக இறுக்கமாய் தாய்.
இதில் ஒரு
கனவுலகக் காதலி வேறு.
எனக்குத் தெரியவே தெரியாது.
சிறு மரப்பேழையில்
போட்டு வைத்த
பட்டுப்புழு
இறுதியில் என்னாகுமென்று
உன்
சந்தேகங்களில் துருவேறுகிறது.
ஒரு
தகரக் கித்தானைப் போல.
சாரலுக்குப் படபடக்கும்,
ஓரிலை அசைவில்
உலுக்கி விழும்,
என் அழைப்பின் தட்டல்களை
இடியென்றெண்ணி. மறுகும்
ஒவ்வொ ரு கணமும்
சஞ்சலம் கொண்டு
இறுகும்
உன் சந்தேகங்களின்
உலோகத் திரை
மறைக்கிறது
உன்னை எனக்கும்,
என்னை உனக்கும்
கடைசி வரை காட்டவே காட்டாமல்.
மீறிய அலைகள்
நீ வரமளித்துப் போன
வெளி முழுவதும்
விடாமல் கொட்டிக் கொண்டிருக்கிறது
மழை.
உதிரும் கற்பனைகளினூடே
நீர்க் குமிழ்கள் கொண்டு
லகுவாய் மிதந்து நெருங்கும்
மனங்களைத் தாக்குகிறாய்.
நா நுனிக் கங்கு தீண்டி
வெந்து வீழ்கிறாள் ஒருத்தி.
விரைந்து கொண்டிருக்கிறது
சாரல் வேறெங்கோ.
சகதி படிந்த
என் அங்கங்களில்
வேர் பிடிக்கிறதொரு
மாங்கன்று.
உடல் நடுங்கிச் சில்லிட,
விரிந்த உள்ளங்கைகளில்
திசையறியாத் துளிகள்
ரத்தினங்களாகின்றன.
காட்டுப்புனலாய் நான்
நீர்த்தோட
கனவுகள் புரளும் என் மீது.
விழியோரம் மொட்டுக்கள்
துளிர்க்க
எழுகிறேன் அனிச்சையாக
அலைமீறி.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|