கனவு மெய்ப்பட வேண்டும்
லிம்கா சாதனை படைக்க வேண்டும்
தமிழ்ப்பிரியன்-ராஜசேகரன்
‘எஸ்.இஸ்மாயில்’
எங்களிடம் இப்படித்தான் தன் பெயரைச் சொல்லி அறிமுகமானார் இந்த ‘தலைகீழ் மனிதர்’.
‘தலைகீழ் மனிதர்’ என்றதும் உங்களுக்கு தலைகால் புரியாமல் தலையைப் பிடிக்க வேண்டி வரலாம். ஆம். எங்களுக்கும் முதலில் அப்படித்தான் இருந்தது. எங்களிடம் வெறும் வெற்றுப்பேப்பர் ஒன்றைக் கேட்டார். நாங்களும் தயக்கத்துடன் பேப்பரை நீட்டினோம். மனிதர் ‘விறுவிறு’வென்று 60 வினாடிக்குள் ஒரு பக்கம் முழுவதும் தலைகீழாகவே எழுதிவிட்டார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘என்னடா இது!’ என்று பேப்பரைத் தூக்கி வெளிச்சத்தில் திருப்பிப் பார்த்தால் யதார்த்தமாக எழுதும் வடிவம் இருந்தது.
இந்த தலைகீழ் எழுத்துக்குத் சொந்தக்காரர் இஸ்மாயிலின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர். மலேசியாவின் ‘ரூபி புக் சென்டரில்’ வேலை செய்யும் இஸ்மாயில் தற்போது விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.
பத்தாவது வரை படித்திருக்கும் இவர் தொடர்ந்து வறுமையினால் மேற்படிப்பை தொடர முடியாமல் படிப்பை நிறுத்தினார். இருப்பினும் மனமெங்கும் சின்னவயதில் படிப்பை நிறுத்திய மனபாரம் மட்டும் நெஞ்சைக் குமைந்து கொண்டேயிருந்திருக்கிறது. தொடர்ச்சியாக கையில் கிடைத்த புத்தகங்களை எல்லாம் அசுர வேகத்தில் வாசித்திருக்கிறார். மனசுக்குள் கதை, கவிதை, கட்டுரை என்ற பல்வேறு வடிவங்கள் ரீங்காரமிட்டபடி உலாவர ஆரம்பித்தன. இருப்பினும் தொடர்ச்சியான குடும்ப வறுமையும் இக்கட்டான வாழ்க்கை நெருக்கடியும் உட்கார கூட நேரமின்றி கஷ்டப்பட வைத்தது.
குடும்பத்தினர் வற்புறுத்தலின் பேரில் 1990ல் பிழைப்பதற்காக துபாய் சென்றார். அப்போது தான் இந்த தலைகீழாய் எழுதும் பழக்கம் ஆரம்பித்திருக்கிறது. ஓய்வாய் இருக்கும் நேரங்களில் எதையாவது வாசித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கும் இஸ்மாயிலுக்கு அதுவே மனதுக்கு இதமான பழக்கமாகவும் மாறிப்போனது. அங்கும் சில நாட்களிலேயே வேலை இல்லாமலும் ஊர் திரும்ப முடியாமலும் 4 வருடங்கள் வாழ்வைக் கழித்தார். பின் உறவினர்களின் உதவியுடன் ஊர் திரும்பினார். வாழ்வின் நெருக்கடியால் 1998ல் மீண்டும் வெளிநாடு போக வேண்டியதாயிற்று. இம்முறை மலேசியாவுக்கு. அங்கு இவருக்கேற்ற புத்தகக் கடை வேலையும் கூடவே ஒய்வும் கிடைத்தது.
தொடர்ச்சியாக தலைகீழாக எழுத பயிற்சி எடுக்க வாய்ப்பும் கிடைத்தது. தற்போது எவ்வளவு பக்கத்தைக் கொடுத்தாலும் நாம் இடமிருந்து வலமாக எழுதுவதை தலைகீழாக எழுதுகிறார். இலக்கியம், மருத்துவம், தொழில் என பல்துறைப் புத்தகங்களை வாசிக்கும் பழக்கமுள்ள இவருக்கு தரமான, சிறந்த நாவல் ஒன்றை தலைகீழாக எழுதுவதும் அத்துடன் இதுவரை இல்லாத லிம்கா சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்வதுமே தமது கனவும் லட்சியமும் என்கிறார் இஸ்மாயில்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|