பட்டினிக்கு எதிராகப் போர்
பி.எஸ். பத்மநாபன்
நாட்டின் பல பகுதிகளில் பட்டினி கிடந்து ஊட்டச்சத்து குறைவால் வாடும் பல்லாயிரம் குழந்தைகள் உள்ளனர் என்று அண்மையில் செய்தித் தாள்களும் பத்திரிகைகளும் தெரிவித்துள்ளன. அரசு தகவலின்படி கடுமையான ஊட்டச்சத்துக் குறைவு விகிதம் குறைந்துள்ளது. ஆனால் குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைவு அதிகமாகியுள்ளது. ஆறு வயதுக்குட்பட்ட சுமார் 66 சதவீத குழந்தைகள் மிதமான ஊட்டச்சத்துக் குறைவாலும் ஊரகப் பகுதிகளில் வாழும் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைவாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வுகள் பல்வேறு ஆரோக்கியக் குறைவுகளுக்கு ஊட்டச் சத்துக்குறைவே காரணம் என்று கூறுகின்றன. ஊட்டச் சத்துக்குறைவு என்பது மறைமுக பட்டினியாக வருணிக்கப்படுகிறது.
1918ல் குன்னூரில் பெரி பெரி ஆய்வு பிரிவு ஏற்படுத்தப்பட்டு ஊட்டச் சத்துக்குறைவு குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தது. 1958ல் இந்த பிரிவு ஹைதராபாத்திற்கு மாற்றப்பட்டு ஊட்டச் சத்து நோய் கண்டுபிடிப்பு மையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1969ல் மீண்டும் தேசிய ஊட்டச் சத்து நிறுவனமாக அழைக்கப்பட்டது. இதே வளாகத்தில் உணவு மற்றும் மருந்து ஆராய்ச்சி மையம், தேசிய ஊட்டச் சத்து கண்காணிப்பு அலுவலகம், தேசிய விலங்கின அறிவியல் ஆய்வு மையம் ஆகியவை அமைக்கப்பட்டன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் இந்த அமைப்புகள் மறைமுக பட்டினியை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மக்கள் தொகையில் ஊட்டச் சத்து குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த ஆய்வுகளைத் தொடர்ச்சியாக இந்த அமைப்புகள் கண்காணித்து வருகின்றன. மேலும் இதனை தடுப்பதற்கு ஏதுவாக திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
உதாரணமாக ராஜஸ்தானில் உள்ள பாரன் மாவட்டத்தில் கிஷன் கஞ்ச் மற்றும் ஷாபாத் வட்டத்தில் வசிக்கும் சகாரியா பழங்குடியின மக்களிடையே ஊட்டச் சத்துக்குறைவு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த மக்கள் பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் தவிர இவர்கள் பால், பாலில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றை உண்பதில்லை என்று தெரியவந்துள்ளது. இவர்களுக்கு வைட்டமின் ‘ஏ’-யில் சத்துக்குறைவு அதிகமாக உள்ளது. மொத்தத்தில் எடை குறைவாக காணப்படும் மக்கள் 72 சதவிகிதமாகவும் வளர்ச்சி குன்றியவர்கள்
மறைமுக பட்டினி இனியும் தொடருமா
2003 மே, ஜுன் மாதங்களில் வறட்சிப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில் இம்மாநிலங்களில் வசிக்கும் மக்கள் போதுமான சத்தாண உணவு உண்பதில்லை என்றும் குடும்பங்களில் உணவுப் பாதுகாப்பு விகிதம் குறைவாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதில் பள்ளி செல்லும் வயதுக்கும் குறைவான குழந்தைகளில் 0.8 சதவிகிதம் பேர் வைட்டமின் ‘ஏ’ குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கேரளா மற்றும் ஒரிசா மாநிலங்களைத் தவிர பிற மாநிலங்களில் உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த ஊட்டச் சத்து வரம்புக்கும் குறைவாக 0.5 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 6 முதல் 12 வயதுக்குட்பட்ட 4 சதவீத குழந்தைகள் கழுத்துக் கழலை நோயால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 75 சதவிகிதம் கர்ப்பிணிப் பெண்களும் 70 சதவிகிதம் இளவயது பெண்களும் 67 சதவிகித பள்ளி செல்லும் வயதுக்கும் குறைவான குழந்தைகளும், அதிகபட்சமாக 78 சதவிகித பாலூட்டும் தாய்மார்களும் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. வைட்டமின் ‘ஏ’, இரும்பு சத்து, ஃபாலிக் அமில மாத்திரைகள் வினியோகம் மிகவும் குறைவாக இருந்ததாகவும் ஊட்டச்சத்து குறைபாடுகள் குறித்த விழிப்புணர்வு திருப்திகரமாக இல்லை என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வைட்டமின் ‘ஏ’ குறைவை கண்டுபிடிக்கும் முறைகள் கொஞ்சம் கடினமாக உள்ளன. ரத்த மாதிரிகளை சோதனை செய்யும் ஆய்வுக் கூடங்கள் வெகு தொலைவில் உள்ளன. மேலும் பரிசோதனை முறையும் சற்றுக் கடினம். எனவே தற்போது மிகவும் எளிதான நவீன பரிசோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. விரலில் சிறிய ஊசியைக் கொண்டு எடுக்கப்படும் ரத்த மாதிரிகள் பாதுகாக்கப்பட்டு பின்னர் ஆய்வு கூடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த முறையை பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஆய்வுக் கூடம் அமைக்க மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் நிதியுதவி அளிக்கும்.
அயோடின் சத்துக் குறைபாடுகளும் ரத்த சோகை, இரும்பு சத்து குறைபாடுகளும் பொது சுகாதாரத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே அயோடின் சத்து குறைபாட்டை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பயன்தரத் துவங்கியுள்ளன. இதனால் கழுத்துக் கழலை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்தக் குறைபாட்டைக் களைவதற்காக தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகின் பல பகுதிகளில் நீரழிவு நோய் ஏற்படுவதற்கு ஊட்டச்சத்து குறைவும் ஒரு காரணமாக உள்ளதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ரத்தத்தில் இரும்புச் சத்து, அயோடின், நீரிழிவு நோய் ஆகியவற்றை ஒரே பரிசோதனையில் கண்டுபிடிக்கும் முறை குறித்த ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதனை பரிசோதனை அடிப்படையில் மேற்கொள்ள விருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரிசா மற்றும் ராஜஸ்தானில் மதிய உணவு திட்டத்தின் மூலம் ஊட்டச் சத்துக் குறைபாடுகளைக் களைவதற்கான நடவடிக்கைகளை தேசிய ஊட்டசத்து நிறுவனம் தயாரித்து வருகிறது. முதல் மூன்று மாத காலத்திற்கு 43 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவில் முதலீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்படி பள்ளிகளில் மதிய உணவு திட்டங்களில் இரும்பு சத்து, அயோடின், வைட்டமின் ‘ஏ’, தயாமின், ரிபோஃபிளாவின், அஸ்கார்பிக் மற்றும் ஃபாலிக் அமிலங்கள், ஸிங்க் போன்ற சத்துக்கள் அடங்கிய உணவு தயாரிக்கப்படும். ஆறு முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இளம் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள். இத்திட்டம் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு துறையின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் ஊட்டச் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடையே பரிசோதனைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு நோயின் அறிகுறிகள் காணப்பட்டால் அதன் அடிப்டையில் விரிவான அளவில் ஆய்வு மேற்கொள்ளவும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆந்திராவில் மதிப்பீடு, ஆய்வு மற்றும் செயல்பாடு என்ற முறையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு மையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த முறை மகராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மேகாலயா மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. திட்ட நிர்வாகத்தின் அனைத்து நிலைகளிலும் மக்களுக்கு பயன்படும் விதத்தில் ஆய்வுகளும் அதனைத் தொடர்ந்து ஆராய்ச்சியின் முடிவில் தெரியும் பலன்களின் அடிப்படையில் திட்டங்களை உருவாக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எப்படியோ ஊட்டச்சத்துக் குறைபாடு என்று மறைமுக பட்டினிக்கு எதிராகப் போர் தொடங்கியுள்ளது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|