தலையங்கம்
மக்களைப் புரிந்துகொண்ட ஆட்சியாளர்களே வேண்டும்
ஆசிரியர்
இரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவ் பெரிய பொருளாதார நிபுணரோ சர்வதேச பல்கலைக் கழகங்களின் வகுப்பறைகள் பிதுக்கித் வெளிதள்ளிய கல்விமானோ அல்ல. நம்முடைய தகவல் ஊடகங்களின் கேலிக்குரிய பொருள் அவர். ஊடகங்கள் கிண்டலுக்கு உட்படுத்தும் அந்த மனிதரிடமிருந்துதான் வெற்றிகரமான, மக்களை மனதில் நிறுத்திய, அதிகம் சுமையில்லாத ரயில்வே பட்ஜெட் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
பொருளாதார மேதைகள் என்றும், ஆக்ஸ்போர்டு அறிவுஜீவிகள் என்றும், ரிசர்வ் வங்கியின் புலிகள் என்றும் புகழப்படும் கனவான்கள் வெறும் புள்ளிவிபரங்களை கையில் வைத்துக் கொண்டு மக்களை மறந்த பட்ஜெட்டினை வருடந்தோறும் சிலுவை பாரமாய் மக்கள் முதுகில் சுமத்திக் கொண்டிருக்கும் போது மக்களை கவனத்தில் எடுத்து இரயில்வே நிதி நிர்வாகத்தை திட்டமிடும் லாலுவை மனதார பாராட்டலாம்.
இரயில்வே துறை அடிப்படையில் ஒரு சேவைத்துறை. இதுபோன்ற ஒரு சேவைத்துறையில் ஓரளவு சமூக நீதியை செயல்படுத்துவது என்பதும் பேருந்து, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து துறைகளின் போட்டிகளிலிருந்து இரயில்வேயை வெற்றிகரமாகக் கொண்டு செல்வது என்பதும் அவ்வளவு எளிதான ஒன்றல்ல. இந்திய விமான நிறுவனங்கள் விமான பயணக் கட்டணத்தை கழிந்த ஆண்டுகளில் கணிசமாக குறைத்துக் கொண்டே வந்திருக்கின்றன. இத்தனை நெருக்கடிகளிலும் கழிந்த மூன்று வருடங்களில் இரயில்வேயின் நிகரலாபம் வருடந்தோறும் ஆயிரம் கோடி அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த வித்தையை இரயில்வே நிர்வாகத்தை சீரமைத்ததன் மூலமும் நவீன தொழில் நுட்பத்தை இரயில்வேயில் புகுத்தியதன் மூலமும் லாலு சாதித்திருக்கிறார்.
விவசாயிகளுக்கும், பாலுற்பத்தியாளர்களுக்கும் 50ரூ கட்டணச் சலுவை, ஊனமுற்றவர்களுக்கான கட்டணச் சலுகை விகிதம் அதிகரிப்பு, முதல், இரண்டாம் வகுப்பு ஏசி வகுப்புகளுக்கு கட்டணம் குறைப்பு என்று இருந்த பிறகும் இரயில்வே வெற்றிகரமாக செயல்படுகிறது. நம்முடைய நிதியமைச்சர்களோ கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நட்டக் கணக்குகளை வாசிக்கிறார்கள். நட்டக் கணக்குகள் இருக்கும்போதே குளிர்பானங்களுக்கு வரிச்சலுகைகளை வழங்குகிறார்கள். இந்தக் குளிர்பான நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்கள் என்பதும் கவனத்திற்குரியது. இவர்கள் மக்களைப் புரிந்து கொண்டு மக்கள் தளத்திலிருந்து உருவான அரசியல்வாதிகளாய் இல்லாமல் அதிகார மையங்களிலிருந்து மக்கள் அன்னியப்பட்ட தளங்கலிலிருந்தும் வந்த அதிகாரிகளாக ஆகிவிட்டனர்.
பாரதியாரிடம் ஒரு வரி உண்டு ‘படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோன்னு போவான்’ என்று. நம்முடைய நாட்டில் படித்தவர்கள்தான் தங்கள் ‘அறிவு’ அகம்பாவத்தால் அதிகார மையத்தில் இருந்துகொண்டு மக்களை மறக்கிறார்கள். சூதும் வாதும் செய்கிறார்கள். தேசம் என்பதும் தேசத்தின் பொருளாதாரம் என்பதும் புள்ளி விபரங்களால் மட்டுமானதல்ல மக்கள் என்ற மாபெரும் சக்தியாலும் ஆனது. அதிலும் ஏழ்மையும் நெருக்கடியும் நிறைந்த மக்களால் ஆனது. இவர்களை கவனத்தில் எடுக்காத படித்த பொருளாதார மேதைகளை விடவும் இந்திய மக்களை புரிந்து கொண்ட படிக்காத, மக்கள் சமூகத்தில் ஊடாடி மக்களின் வலிகளை வறுமையை நெருக்கடிகளை பிரச்சனைகளை புரிந்து கொண்ட மேதைகள் படிக்காதவர்களாக இருந்தாலும் அவர்களே இப்பொழுது நமக்குத் தேவை.
- ஆசிரியர்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|