Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூன் 2006
சிரிப்பு தரும் சிந்தனைகள்

ஏமாற்ற எண்ணினால் ஏமாறுவது திண்ணம்
நீலம் மதுமயன்

எப்போதும் மனநிலை இரண்டுதான். ஒன்று ஏமாறுவது, இன்னொன்று ஏமாற்றுவது, ஏமாறுபவனை இனம் கண்டு ஏமாற்று பவன் கூட ஒரு நாள் ஏமாறுவான் என்ற எண்ணம் இல்லாமல் போகும் போதுதான் சமூக நீதி தடுமாற்றம் அடைகிறது.

தடுமாற்றங்களைத் தகர்க்கும் பல்வேறு சிற்றுளிச் சிந்தனைகள் பரவ வேண்டும். சின்னச் சின்ன ஏமாற்று விதைகள், முதலில் வித்தைகள் வடிவில்தான் வெளிப்படும். பெற்றோர்கள் அதைச் சீவிச் சீர்படுத்தத் தவறி விட்டால் விதை விருட்சமாகிவிடும்.

வார்த்தை வித்தைகள் வாலிபங்களின் விளையாட்டு மெத்தைகள். மாணவன் ஒருவன் புத்தகக் கடைக்குப் போய் நோட்ஸ் (கெய்டு) வாங்குவதற்காகச் சென்றான். அங்கு போனதும் அவன், ‘நோட்ஸ் வேணும்’ - என்றான். அதற்கு அவர், ‘கோனாரா?’ - என்றார். அவன் உடனடியாக தங்கு தடையின்றி, ‘இல்ல நாங்க செட்டியார்’ - என்று சொல்லி விட்டு நமட்டினான்.

இந்த மாதிரி வார்த்தை வித்தையும் ஒருவித ஏமாற்று விதைதான் என்பதை நாம் மறந்து விட முடியாது. அதற்காக அதற்குள் ஒளிந்திருக்கும் நகைச்சுவை உணர்வை நசுக்கி விடவும் கூடாது. இது ஒரு மென்மையான அதே நேரம் மேன்மயான வேலையும் கூட.

வார்த்தைகளில் இது இருப்பது வரை இதனால் யாருக்கும் பிரச்சனை இல்லை. அதுவே வாழ்கையில் வரம்பு மீறும் போது சுனாமியாக சுய ரூபம் காட்டும் என்பதையும் மறக்கக் கூடாது. ஆசிரியர் வகுப்பறையில் ஒன்றை விளக்குவதற்காக, ‘கங்கை ஆத்துல மீன் கிடைக்கும், காவிரி ஆத்துல மீன் கிடைக்கும், தாமிர பரணி ஆத்துல மீன் கிடைக்கும், வைகை ஆத்துல மீன் கிடைக்கும்...’ என்று நீட்டிக் கொண்டே போனார்.

அதில் கோபமடைந்த மாணவன் ஒருவன், ‘ஐயா அப்படின்னா எல்லா ஆத்துலயும் கிடைக்கிற மீன் ஐயர் ஆத்துலயும் கிடைக்குமா?’ - வகுப்பு முழுவதும் சலங்கை கட்டி ஆடியது. இதைத்தான் வார்த்தை ஏமாற்று என்பது. இந்த வித்தை புன்னகையோடு தன்னை புதைத்துக் கொள்ள வேண்டும்.

காரன் / காரி என்பது தற்போது எப்படி கையாளப்படுகிறது என்பது பற்றி பெரியதொரு சொற்பொழிவே ஆற்றிய தமிழாசிரியர் அதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுக்களும் கொடுத்தார். ‘பால் போடுகிறவனை பால்க்காரன் என்கிறோம், பேப்பர் போடுகிறவனை பேப்பர்க்காரன் என்கிறோம், கடை நடத்துகிறவனை கடைக்காரன் என்கிறோம்..’ என்று அடுக்கிக் கொண்டே போனார்.

ஒரு மாணவன் அவரை இடைமறித்து, ‘ஐயா அப்படியானால் உங்கள் கருத்துப்படி பிச்சை போடுகிறவர்தான் பிச்சைக்காரரா?’ - என்று வேகமாகப் போன வண்டியின் கியரை குறைத்தும் வண்டி தடுமாறியது; வகுப்பு தடம் மாறியது.

இது போன்ற வெளிப்பாடுகள் நகைப் பாட்டுக்கு மட்டும் என்ற தடத்தை விட்டு இடம் மாறாதது வரை இடர் இல்லை. இது கட்டுப் பாடற்று வளரும் போதுதான் சமூக நீதிக்கு தட்டுப்பாடே வரும்.

தந்தை ஒருவர் இறந்து போனார். அவரது மகனிடம் இறந்தது பற்றி விசாரிக்க வந்தவர், ‘கடைசியா உங்கப்பா எதுவும் சொன்னாரா?’ - என்று இழுத்தார். வந்தவர் இறந்து போனவருக்கு கடன் கொடுத்தவர் என்பது தெளிவாயிற்று இதைப் புரிந்து கொண்ட அவரது மகன், ‘ஆமாங்க குடுத்த எடத்தில வாங்கக் கூடாதுன்னு சொல்லிட்டுத்தான் செத்தார்’ - என்றான்.

உடனே இவனது கருத்தைப் புரிந்து கொண்ட அவர், ‘உங்க அப்பா நல்ல மனுசனா இருந்திருக்கார், அதனாலதான் கடன் குடுத்த இடத்தில திரும்பவும் வாங்கக் கூடாதுன்னு சொல்லி இருக்கார்’ - என்று ஒரு சக்கையை கொடுத்ததும் அவன், அப்படி இல்ல மாமா நாம கடன் குத்த எடத்தில அத திரும்ப வாங்காதேன்னு அர்த்தம்’ - என்றானே பார்க்கலாம்.

இப்படி வளரும் வார்த்தை ஏமாற்று எப்படி வாழ்க்கை ஏமாற்றாக மாறும் என்பதையும் அறிய வேண்டாமா? கல்யாண வயதில் இருந்த ஒருவன் அவன் அப்பாவிடம், அப்பா எனக்கு மலையாளம் படிக்க ஆசையாக இருக்கிறது, ஏற்பாடு பண்ணுங்க’ - என்றான்.

அவர் யோசித்தார். ‘பையன் மலையாளம் படிக்க ஆசைப்படுகிறான். இதற்காக ஒரு மலையாள வாத்தியாரை ஏற்பாடு செய்தால் நிறைய செலவாகி விடும், அதற்கு பதிலா ஒரு மலையாளப் பொண்ணாப் பார்த்து கட்டி வச்சிட்டா பொண்ணுக்கு பொண்ணும் ஆச்சி, மொழிக்கு மொழியும் ஆச்சு’ - என்று எண்ணி ஒரு மலையாளப் பெண்ணை பார்த்து கல்யாணம் செய்து வைத்தார்.

நாட்கள் கழிந்தன. ஒரு நாள் அவர் தன் மகனை அழைத்து, ‘என்னப்பா மலையாளம் படிச்சிட்டியா?’ - என்றார். அவனும், ‘ஆமாப்பா மலையாளம் படிச்சிட்டேன், இனி கன்னடம் படிக்க ஆசையா இருக்கு’ - என்றானே பார்க்கலாம். இவ்வாறு ஒருவனிடத்தில் வளரும் ஏமாற்று எண்ணம் வரம்பு மீறும் போது சமூக நீதி என்னும் கரையைக் கடக்காமல் பார்ப்பது அவசியம். அது சிரிப்பதற்கான சொல்லாக இருப்பதில் தவறில்லை. அதுவே ஊர் சிரிப்பதற்குரிய செயலாக மாறாமல் கவனிப்பது நமது கடமையுமாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.