வேட்டையின் காடு
பா.தேவேந்திர பூபதி
நாள் முழுவதும் தந்திரங்களைத்
தேடியலைகிறது எனது கைவிரல்கள்
அழைப்பின்குரல் கேட்டவுடன்
அவைகள் பதறுகின்றன
இரவில் தலையணைக்கடியில் பதுக்கி
வைத்திருக்கும்
தந்திரங்களை ஒருநாள் மனைவி பார்க்கக்கூடும்
ஆளைக்கண்டதும் அலுவலகம் முழுவதும்
தந்திரங்கள் சட்டென ஓடி மறைந்து
கொள்கின்றன
எனது மேசையின் இழுப்பறையிலிருந்து
தந்திரங்கள் பெருகிவழிகின்றன.
தந்திரங்களையே பரிமாறிக்கொள்ளும்
உலகத்தில்
சாப்பாட்டுக் கூடைகள் காத்திருக்கின்றன.
புலிகள் உலவுவதாய் நாய்கள் புலம்புவதும்
நாய்கள் அலைவதாய் புலிகள் உறுமுவதும்
வேட்டையின் காடுகளில் ஒலிக்கும்போது
அதனதன் வளைக்குள் ஒளிந்து கொண்டு
பார்க்கின்றன
அறியாமை மினுங்கும் கண்கள்
ஒரே தந்திரம்தான்
நேற்றொருவன் கண்ணீர் மல்கினான்
இன்றொரு தந்திரம் என் கத்தியில்
இரத்தமுறைந்துவிட்டது
தந்திரத்தின் நடமாட்டங்களை இன்னும்
எனதறையின் பக்கங்களில் உணர்கிறேன்
இப்போது நான் கைவிட்ட கத்தியோடு
நேரெதிரே ஒருவன்
ஆவேசத்துடன் நின்று கொண்டிருக்கிறான்
நான் எனது உணவை அருந்திக்
கொண்டிருக்கிறேன்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|