ஆக்கங்கெட்ட கூகைகளும்
கட்டப்பட்டுக் கொண்டேயிருக்கும் கோயில்களும்
தேவதேவன்
தன்னைப் பற்றிய மெய்மை
தன் உணர்வுக்குக் கிட்டிய போதெல்லாம் -
மூடமே,
தாங்கொணாத வெவ்விதியே,
குமுறுகின்ற இதயத்தின்
இறுக்கும் கைகளுக்குள்
குலுங்கும் என் நெஞ்சமே,
அதை உன்னை வழிபடச் சொன்னது யார்?
காலத்துக்குத் தக இடம் நகர்ந்து கொள்ளும்
அக்ரஹார உயர்வுகளின் பின்கட்டில்
விடாப்பிடியாய் வளர்ந்து கொண்டிருக்கும்
இரத்த வெறி கொண்ட
அந்த மிருகத்தைக் கண்டதில்லையா?
அதிகார சுகம்
தன்னைக் காத்துக் கொள்வதற்காக
மறைமுகமாகவும் கொள்ளும்
உலகின் அதிபயங்கர கொடூரங்களினின்றும்
மனிதன் எழுந்திருக்கவே முடியாத
கதை இதுவோ?
அதிகாரங்களின்
வல்லுறவு வன்கொலைகளால் மாண்ட
நம் கன்னிப் பெண்களுக்கு
கோயில் கட்டியதால்
எல்லாம் சரியாயிற்றா?
கூகைக்குக் கோயில் கட்டியது,
கூகைத் தனத்தை நகர்த்தி விட்டது,
இல்லையா?
நம் கொந்தளிப்பானது
காளிக்குக் கோயில் கட்டிக்
கும்பிடக் கும்பிட
ஒடுங்கி அடங்கிக் கொண்டது,
இல்லையா?
இன்று என்ன கோயில்களையடா
நாம் கட்டிக் கொண்டிருக்கிறோம்
நம்மிடமுள்ள எவற்றையெல்லாம்
நம்மிடமிருந்து நகர்த்தி, நம்மைக்
கல்லறை சடலங்களாக்கிவிடுவதற்கு?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|