Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2007
தலைமுறைகளின் வரலாறு அற்றவன்
-செல்மா பிரியதர்ஸன்

சிலந்திகள் வலைபின்ன ஆரம்பித்துவிட்டன
உருகிய தாரைக் கொஞ்சம் கொண்டுவந்து
வாசலில் ஓய்ந்திருந்தது காலணி.

தனது தோலின் நிறத்தை
நமது காலணிக்கு அளித்திருந்தவனுக்கு
கோடைகாலம் ஆரம்பித்துவிட்டது.
தோல் தைக்கும் தனது ஊசியில்
யாரையும் குத்திக் கொள்ளும் நியாயத்தை
வழங்கிய வண்ணம்
சூரியன் அவனுக்குள் இறங்குகிறது.

எனது அப்பன் ஒரு ஆட்டிடையன்
எனது தாத்தனும் ஆட்டிடையன் என்பதை
அறிந்திருந்தேன்
எனது தாத்தனுக்கு ஒரு அப்பன்
இருந்தான் என்பதோ
அவன் எனது ஜாடையிலோ
அவனது பெயர் எனது பெயர் போலவே இருந்ததா
என்ற குலக்குறிப்புகள் என்னிடமில்லை
இனவரையியலாளன் ஒருவன் சொன்னான்
கடவுளின் புடுக்குக்கு புறம்பாய்
பிறந்த எவனுக்கும்
இரண்டாம் தலைமுறைக்கு முந்தைய
வரலாறு தேவையில்லை என்பதை.
நானோ
தூண்டிலில் மாட்டப்பட்ட புழுக்கள்
மீனுக்கு உணவாகும் தருணத்திற்காய்
தக்கைகளின்மேல் தியானித்திருப்பவன்

இப்பொழுது நகரத்திலிருந்து
கிளம்பிய தொடர்வண்டிச் சத்தம் சமீபிக்கிறது
அதன் பயண வழியெங்கும்

பிழியப்பட்ட மலத்தை
வரலாற்றுக்கு வெளியேயும்
செய்திகளுக்கு அப்பாலும்
ஆதிப் பெருங்கைகள்
அள்ளி அள்ளி அகற்றிய பின்பு
நமது தொலைக்காட்சிப் பெட்டிக்குள் நுழைகிறது
அத்தொடர்வண்டி.
அதன் முன்பாக
நமது பெண்கள் போலல்லாத சிலர்
பின்புறமிருந்த தமது ஆண்களோடு கைகோர்த்து
பதாகைகள் தாங்கி கூச்சலிடுகின்றனர்

“whose blood is this?”
என்ற அவர்களது கேள்விக்கு முன்
மாட்டிறைச்சியால் பளபளப்பான கத்திகொண்டு
பிட்டங்களில் ரத்தங் கசிய கசிய
குத்து குத்தென்று குத்தி விரட்டியடிக்கும்
ரௌத்ரம் பழக வேண்டும்

நீதிமன்றம் தனது பூநூலை சரிசெய்து
செருமிக் காண்பிக்கிறது.

ஏர்க்கலப்பையின் கூர்முனையில்
தன் குதத்தைச் செலுத்தி
மாண்டு போயிருந்தவனின் மகளோ
மேற்கு நோக்கிப் பறக்கும்
ஆகாயக் கப்பலுக்கு கை யசைக்கிறாள்

நான் மேலும் மண்புழுக்கள் சேகரிக்க கிளம்ப வேண்டும்
உயிர்களைச் சப்பிக் கொண்டு
சிலந்திகள் வெளியேறத் துவங்கிவிட்டன
வலைக்கண்ணிகளெங்கும்
சருகான உடலகங்கள்



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.