புதிர் பூத்த மரம் !
-சி.றீ.நான். மணிகண்டன்
விழுதுகள் தொங்கிய முதிர்ந்த மரமது.
ஊரிலிருந்து பிரிந்து போகும் ஒற்றையடிப்பாதை
மரத்தின் வேரடியில்தான் முடிவடைகிறது.
பள்ளிவிட்டு வீடு திரும்பும் சிறுவர்கள்
தினமும் எறிகின்ற கற்களை
உள்வாங்கிக் கொள்ளும் மரம்
ஒரு நாளும் உதிர்த்ததில்லை
கனிகளையோ
சிறுவர்கள் எறிந்த கற்களையோ.
மரம் தனக்குள்
ஒளித்து வைத்திருக்கும் புதிரை
உடைக்கவெண்ணிய சிறுவர்கள்
கற்களை தொடர்ந்து எறிந்து வந்தனர்.
மரத்தின் உடம்பெங்கும் புண்கள் விழுந்து
இரவு நேரங்களில்
அழுகை சத்தம் வந்து கொண்டிருந்தது.
பறவைகளின் கூச்சல்களும்
குருவிகளின் ஒலிகளும்
ஊரை விழிப்படைய வைத்த காலையில்
எதிர்திசையில் சுற்றியது பூமி.
சிறுவர்கள் இதுவரை எறிந்த கற்களும்
நேற்றுவரை வீழாத கனிகளும்
வழிநெடுக இரைந்து கிடப்பதை கண்டு திகைத்தனர்.
கூடவே மரமும் அங்கில்லாததை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|