தலையங்கம்
விவசாய நிர்ப்பந்தங்கள்
நிறுவனர் எஸ். ராஜா ஹாசன்
தனியார் தொழிற்சாலை ஒன்றிற்காக மேற்கு வங்க அரசு சமீபத்தில் விவசாய நிலங்களை கையப்படுத்தியது தொடர்பாக எழுந்துள்ள வாத - எதிர்வாதங்கள் நாட்டின் அரசியலை கொஞ்சம் சூடேற்றி உள்ளன. நிலம் வாங்கியதில் விவசாயிகளுக்கு முறையான பணம் வழங்கப்படவில்லை என்று மேற்கு வங்க அரசியலின் எதிர்க் கட்சிகள் குரல் கொடுக்கின்றன. ஏறத்தாழ எல்லாருக்கும் பணம் வழங்கப்பட்டு விட்டது என்று அரசுத் தரப்பு கூறுகிறது. நர்மதா அணைப் பிரச்சனையாகட்டும், இதர தொழிற்சாலை சார்ந்த பிரச்சனையாகட்டும் பொதுவாக இதுபோன்றவற்றில் அரசியல்வாதிகள் எழுப்பும் எதிர்ப்புக்குரல் ‘வங்கி’களை குறிவைத்த சுயநலம் சார்ந்த குரலாகவே இருக்கிறது. மனித உயிர்களுக்கும், கடல்வாழ் உயிர்களுக்கும் அச்சுறுத்தலாய் இருக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உயிரை முன்வைத்துப் பேசிய அரசியல்வாதிகள் வாய்மூடி மௌனிகளாகிப்போன மர்மக்கதைகள் நாம் அறியாததல்ல.
பெரிய தொழிற்சாலைகளும், பேரணைகளும் இயற்கை, மனிதன் தவிர்த்த பிற உயிர்கள், மனிதர்களில் ஏழைகள் இவர்களுக்கு எதிரானவை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், சமூகப் போராளிகளும் குரல் கொடுக்கிறார்கள். தேசத்தின், மாநிலத்தின் வளர்ச்சிப் போக்கில், இவை போன்ற பெரும் திட்டங்கள் தவிர்க்க இயலாதவை; தேசத்தை இதுபோன்ற திட்டங்களின் வழியாகத்தான் பொருளாதாரத்தில் முன்னெடுத்துச் செல்ல முடியும். எனவே இதுபோன்ற திட்ட உருவாக்கங்களில் ஏற்படும் சின்னச்சின்ன இழப்புகளை தேசத்திற்காக நாம் சந்தித்துதான் ஆகவேண்டும் என்று மற்றொரு குரல் கேட்கிறது.
தமிழகம், பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி போன்ற பகுதிகள் தனியார் தொழில் முயற்சிகளின் குவிமையங்களாக மாறி வருகின்றன. மேற்கு வங்கமோ சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளாகியும் தொழிற்துறையில் பின்தங்கியே இருக்கிறது. எனவே இதுபோன்ற தொழில் முயற்சிகள் தேவைப்படுகின்றன என்று இடதுசாரிகள் பேசுகிறார்கள். இடதுசாரிகளைப் பொறுத்தவரை இதுபோன்ற பெரும் திட்டங்கள் குறித்த ஆதரவான மனோபாவமே அவர்களிடம் இருக்கிறது. நாட்டின் பெரும்பான்மையான மக்களிடமும் பேரணைகள், பெரிய தொழிற்சாலைகள் இவற்றிற்கு ஆதரவான மனநிலையே இருக்கிறது. இயற்கையும், மனிதன் தவிர்த்த பிற உயிர்களும் மனிதனுக்காகவே உருவானவை என்று நீண்ட நெடுங்காலமாக இருந்து வரும் கருத்தின் வெளிப்பாடாக இதை நாம் கொள்ளலாம். இன்னொன்று இதுபோன்ற பெரும் திட்டங்களுக்கு மாற்றாக வேறு பொருளாதார முன்வைப்புகளும் இன்னும் தீவிரமாக உருவாகவில்லை.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க இதுபோன்ற பெரிய அளவிலான திட்டங்களில் வஞ்சிக்கப்படுவது விவசாயிகளாக மட்டுமே இருக்கிறார்கள். பசுமை புரட்சி தொடங்கி சமீப காலத்தில் மேற்கு வங்க அரசின் தொழில் முயற்சி வரை தேசத்தின் பொருளாதார வளர்ச்சியின் அஸ்திவாரக் கற்களாக விவசாயிகளின் நலனே புதைக்கப்பட்டு இருக்கின்றது.
ஒரு தொழிற்சாலை உருவாக வேண்டுமென்றால் அதற்கு நிலம் தேவை, கட்டுமானப் பொருட்கள் தேவை, தொழிற்கருவிகள் தேவை, மனித உழைப்பு தேவை. இதில் தொழிற்சாலைக்கான தொழிற்கருவியை தொழிலைத் தொடங்குபவர் சலுகை விலைக்கு வாங்குவதில்லை. அல்லது அவருக்கு சலுகை விலைக்கு கொடுக்கும்படி அந்த தொழிற் கருவியை தயாரிக்கும் நிறுவனத்தை அரசாங்கம் நிர்ப்பந்திப்பதும் இல்லை. கட்டுமானப் பொருட்களுக்கு தேவையான சிமெண்ட், இரும்பு உள்ளிட்ட பொருட்களிலும் இதே நிலைதான். இப்படி எல்லா நிலையிலும் அவரவர்களும் அவர வர்களுக்கான நலன்களை மையப்படுத்த விவசாயியிடம் இருந்து மட்டும் அவனுக்கு இருக்கின்ற காணிநிலம் சலுகை விலைக்கு கொடுக்கும்படி அரசாங்கத்தாலும் இதர அதிகார அமைப்புகளாலும் நிர்ப்பந்தம் கொடுக்கப்படுகிறது. இது நியாயமான ஒன்றாகத் தெரியவில்லை.
விவசாயி மட்டுமே எல்லா இழப்புகளையும் தாங்கிக் கொள்வது என்பது ஒரு விவசாய தேசத்திற்கு ஆரோக்கியமான ஒன்றல்ல. பெரிய அணைகள், பெரிய தொழிற்சாலைகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என எல்லாவற்றிலும் விவசாயி காலம் காலமாக தன் உயிர் போல் பாதுகாத்த அவனது விளை நிலமே குறிவைக்கப்படுகின்றது. விவசாயிகள் தங்கள் சொந்த மண்ணை விட்டு இடப்பெயர்ச்சி செய்யும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக் குரிய நியாயமான இழப்பீடு வழங்கப்படுவதில்லை.
பெரிய அணைகள், பெரிய தொழிற்சாலைகள் என்பவை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் விவசாயிகளின் நலன்கள். ஒன்றை பலி கொடுத்துவிட்டு இன்னொன்றை வாழ வைப்பது என்பது மனித அறவியலாக இருக்காது. எல்லாம் முக்கியமானவை. எல்லோரும் முக்கியமானவர்கள்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|