ஒற்றைப் பண்பாட்டு மயமாக்கம்
- செ. சி. கலைமுருகன்
பருத்தி ஆடைகள் அணிவதைப் புறக்கணித்த பொழுது பருத்தி உற்பத்தி குறைந்தது. நூற்பாலைகள் இழுத்து மூடப்பட்டன. இதன் விளைவாக நாட்டின் வருமானம் குறைந்துவிட்டது. தொழிலாளர்களும், விவசாயிகளும் பட்டினியால் மாண்டனர்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இன்னொரு முகமே ஒற்றைப் பண்பாட்டு மயமாக்கம். உலகம் முழுக்க ஒரே பண்பாட்டினைக் கட்டமைப்பதே ஒற்றைப் பண்பாட்டின் செயல் திட்டமாகும். ஒரு நாட்டின் பண்பாடு என்பது அந்த நாட்டின் தட்பவெப்பச் சூழ்நிலைகளைப் பொறுத்து அமைகிறது. தமிழகம் வேளாண்மைத் தொழிலைப் பின்புலமாகக் கொண்ட வெப்பத்தை மிகுதியாக உடைய மாநிலமாகும். எனவே வெப்பத்தை தணிக்கும் வகையில் அல்லது சமச்சீராக்கும் வகையில் உணவு, உடை, மொழி, விளையாட்டு இருக்கும். ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பிடியில் தமிழகம் சேர்ந்து இந்திய ஒன்றியமாக உருவாக்கப்பட்ட பொழுது, வெல்வெட்டு உல்லன் ஆடைகள் வலுக்கட்டாயமாக வரத்தொடங்கின. இங்கிலாந்து, பிரெஞ்சு பகுதிகள் குளிர் அதிகமாக உள்ள நாடுகள். எனவே குளிரைத் தாங்கும் வகையில் உல்லன் ஆடைகளை அணிந்தனர். குளிருக்காக காலில் சாக்ஸ் கட்டி, சூ மாட்டிக் கொண்டனர். சட்டைக்கு வெளியில் டைகட்டி, கோர்ட், சூட் போட்டுக்கொண்டனர். இந்தக் காலங்களில் இந்திய ஒன்றியத்திலிருந்து குளிர் பகுதிகளுக்குக் கல்வி கற்கச் சென்ற படித்த வர்க்கங்கள் டை, கோர்ட், சூ அணிந்து கொண்டனர். பிற்பாடு தமிழகத்திற்கு வந்தப் பிறகும் ஐரோப்பிய நாகரிகம் என்ற பெயரில் அதே உல்லன் ஆடைகளையும், கோர்ட், டை வகையறாக்களையும் அணிந்து கொண்டது ஒரு பண்பாட்டுப் பிழையாகும். 1947ஆம் ஆண்டு அதிகாரமாற்றம் நிகழ்ந்த பிறகும் கூட இந்நிலை மாறவில்லை. ஜீன்ஸ் ஆடைகளை வெப்பப் பகுதிகளில் தொடர்ந்து அணிந்தால் ஆண்மைக் குறைபாடு ஏற்படும் என்பது அறிவியல் உண்மை. இவ்வாறு பருத்தி ஆடைகள் அணிவதைப் புறக்கணித்த பொழுது பருத்தி உற்பத்தி குறைந்தது. நூற்பாலைகள் இழுத்து மூடப்பட்டன. இதன் விளைவாக நாட்டின் வருமானம் குறைந்துவிட்டது. தொழிலாளர்களும், விவசாயிகளும் பட்டினியால் மாண்டனர்.
உணவைப் பொறுத்தவரை உடலின் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் பண்டையகால உணவுகள் அமைந்திருக்கின்றன. இளநீர், கள், கரும்பு, கீரை, கிழங்கு, பழவகைகளை உண்டு வாழ்ந்தனர். இளநீரும், கரும்புச்சாரும் இருந்த இடத்தை இன்று பெப்சியும், கோக்கும் பிடித்துக் கொண்டன. பெயருக்குத்தான் குளிர்பானங்களே தவிர, உண்மையில் ஆளைக்கொல்லும் பானங்கள் என்பது சில மாதங்களுக்கு முன்பு வெட்ட வெளிச்சமானது. பன்னாட்டு குளிர்பானங்கள் தமிழகத்தில் ஊடுருவியப் பிறகு இங்குள்ள காளிமார்க், மாப்பிள்ளை விநாயகர் குளிர்பானத் தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டு, அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களின் வாழ்வு பறிபோனது. அமெரிக்க ஆம்ஸ்ட்ராங் வாழ்வதற்காக நம்மூர் ஆண்டியப்பனின் உயிர் பறிக்கப்பட்டது. 00 வெப்பநிலைக்கும் கீழ் உள்ள பகுதிகளில் குளிரைத் தவிர்த்து, வெப்பத்தைப் பெறுவதற்காக தேனீர், குளம்பி, பாஸ்ட்புட் வகைகளை உண்டனர். ஆனால் கிட்டத்தட்ட 980 வெப்பநிலைக்கும் மேல் பரவும் தமிழகத்தில் பாஸ்ட்புட், குளம்பி வகைகளை உண்பது தட்பவெப்பச் சூழ்நிலைக்கு எதிரானது. பாஸ்ட்புட் உணவுகளினால் புற்றுநோய் உருவாகும் என்பது அறிவியல் கண்டுபிடிப்பு.
தமிழ் மொழியை எழுத்துக்களின் மாத்திரை அளவு குறைவுபடாமல் உச்சரித்தால், நன்றாகக் காற்றை இழுத்து உச்சரிப்பதாக (வெப்பத்தை தணிக்கும் பொருட்டு) அமையும். ஆனால் ஆங்கிலமொழி உச்சரிப்பு (தமிழர் பேசும் ஆங்கிலமன்று) குன்றாமல் பேசும்பொழுது உதடுகள் மெதுவாகத் தான் அசையும். வாயை அதிகமாகத் திறந்து பேசும்பொழுது குளிர்காற்று உடம்பினுள்ளே சென்று விடும். எனவே மொழி என்பது அந்தந்த நாட்டின் தட்பவெப்பச் சூழ்நிலை களைப் பொறுத்து அமைகிறது. அதாவது ஒரு மொழியை தெரிந்து கொள்வதில் தவறில்லை. ஆனால் அவரவர் பிறந்த நாட்டின் சிந்தனை களை உருவாக்கக் கூடிய தாய்மொழியை விட்டுவிட்டு வேற்று மொழிக் கலப்பில் பேசுவது தான் தவறு.
விளையாட்டு என்பது மூளையைச் சுறுசுறுப்பாகவும் உடம்பை நோயின்றியும் வைத்திருக்கக் கூடியது. சிறந்த பொழுதுபோக்கும் கூட. இவ் விளையாட்டானது நாட்டுப்புற மக்களின் பால், வயது உடற்திறன், களம், கருவி, காலம் ஆகியவற்றைப் பொறுத்தப் பல வகைப்படும் கோலிக்குண்டு, கள்ளன் - காவலன் போன்ற விளையாட்டுக் களையும், பெண்கள் அஞ்சுக்கல்லு, பல்லாங்குழி போன்ற விளையாட்டுக் களையும் ஆண்கள் கபடி, கிட்டி போன்ற விளையாட்டுக்களையும் வயதானோர் தாயம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுக்களையும் விளையாடுவர். நுண்ணறிவை வெளிப்படுத்தக் கூடிய ‘கோழி பறபற’ விளையாட்டை அனைத்துத் தரப்பினரும் விளையாடுவர். ஆனால் இன்றைய நிலையில் ஒற்றைப் பண்பாட்டு மயமாக்கலின் விளைவாக நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப்புற விளையாட்டுகள் நசுக்கப்பட்டு, கிரிக்கெட் என்ற ஒரு விளையாட்டு மட்டுமே மையப்படுத்தப் படுகிறது. இந்த மட்டைப் பந்து விடையாட்டும் கூட வயது, பாலின வேறுபாடின்றி எல்லாத் தரப்பினராலும் விளையாடப் படுவதில்லை. பெரும்பான்மை இளவயது ஆண்களால் மட்டுமே விளையாடப்படுகிறது. ஆனால் நாட்டுப்புற விளையாட்டுகளில் உடல் ஊனமுற்றோர்h கூட அவருடைய உடற்திறனைப் பொறுத்துச் சில விளையாட்டுகளில் (தாயம், அஞ்சுக்கல்லு) ஈடுபட முடியும்.
இன்று குளிர், கோடை என எல்லாக் காலங்களிலும் காலை, நண்பகல், மாலை என எல்லாப் பொழுதுகளிலும் மட்டைப்பந்து விளையாடப் படுகிறது. இதனால் உடலின் வெப்பம் சமச்சீரற்ற நிலையில் உள்ளது. நாட்டுப்புற விளையாட்டு களில் மோகம் இல்லை. தங்களது பொழுதை பணியைப் பாதிப்பதாக அமையாது. ஆனால் மட்டைப்பந்து விளையாட்டில் சூதாட்டம், மோகம் ஆகியன காணப்படுகின்றன. சில பொழுதுகளில் கொலை, தற்கொலையும் கூட நிகழ்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களும், அலுவலகப் பணியாளர்களும் விடுமுறை எடுத்துக் கொண்டு மட்டைப் பந்து விளையாட்டைக் காணச் செல்லும் நிலையும் உள்ளது. மட்டைப்பந்து ஒரு விளையாட்டாக மட்டுமே பார்க்கப் படாமல், மத உணர்வுகளை (இசுலாம்-இந்து, பாகிஸ்தான்-இந்தியா) கூர்மைப் படுத்துகின்றன. நாட்டுப்புற விளையாட்டுகள் ஒரு குறிப்பிட்ட இனத்தின் பண்பாட்டை வெளிப் படுத்துபவை. நாட்டுப்புற விளையாட்டு கள் நசுக்கப்படுவதால் அந்த இனத்தின் பண்பாடும், வரலாறும் மறைக்கப் படுகிறது. ஹாக்கி இந்திய தேசியத்தைக் கட்டமைப்பதைப் போன்று, மட்டைப் பந்து இனவழியிலான தேசியத்தை அழித்து, உலகம் முழுக்க ஒரு ஒற்றைத் தேசியத்தை கட்டி எழுப்ப முயல்கிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|