இலக்கிய முற்றம்
அப்போது மான்களாயிருந்தோம்
- இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்
பனிமொக்குகள் துளிர்த்திருக்கும்
கொழுந்துப் புல்லில்
வருகிற வாசனையில்
ஒரு ‘திங்கிறசாமான்’ உண்டா
இவ்வுலகின் முதுகு முழுதும்
வைகறையில் வரும் வெளிச்சம்
பச்சைப் புல்வெளியில்
படர்வதைப் போல
கொண்டாட்டங்களுண்டா பிரபஞ்சத்தில்
காலையில் முளைக்கும் கதிரை
மேய்ந்ததுண்டா
உங்கள் முன் பல்லால்
தளிரெனப்படுவது வேறென்ன...
ரோஜாப் பூக்களை மெல்லிதாய்
முத்தமிடும் பிள்ளைகளாய்
களங்கமின்றி
திறந்து விடப்பட்டக் காற்றைப் போல
விஸ்ஸென்று பறந்தோடுவோம்...
ஓட்டம் தானே உயிரென்பது
பிரபஞ்சப் பேரழகு
ஒரு சொட்டு வடிவிலாகி
கால் முளைத்தலைகிறோம்...
ஆனால் எங்களுக்கு
மாமிசபட்சிணிகளின்
வரவுணரும் மூக்குகளில்லை
எனவே ஒரு
இரண்டாயிரம் ஆண்டுகளின்
கழிவில் மாமிசம் பழகிக் கொண்டோம்.
கேள்விப்பட்டு
மாமிசப் பட்சிணிகள் ஒன்றுகூடி
தாவர உணவே நீண்டஆயுள்
வழங்கும் அமுதமென்று
கண்டுபிடித்திருப்பதாக
இப்போதறிகிறோம்...
அது அப்படியானால் சரிதான்...
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|