' விருந்தினர் கடவுளுக்கு ஒப்பானவர்’
எடுபடுமா சுற்றுலாத்துறையின் வசீகரப் பிரச்சாரம்?
- மோகன்ராவ் தமிழில் : வி. கீதா
இந்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் பலனாக, இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டு 23.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதே ஆண்டில் 3.54 மில்லியன் பயணிகள் இங்கு வந்தார்கள்.
இன்றைய நவீன சமுதாயத்தில் சுற்றுலாத்துறை ஏராளமான பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தும் முக்கிய துறையாக உருவெடுத்துள்ளது. இது பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு பெருக்கத்திற்கும் உதவுகிறது. தற்போதைய சுற்றுலாக் கொள்கை, சுற்றுலா வளர்ச்சிக்கு ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘விருந்தினர் கடவுளுக்கு ஒப்பானவர்’ என்பது இந்தியாவில் காலம் காலமாக நிலவிவரும் தொன்மையான கருத்து. இதுவே இந்திய சுற்றுலாத்துறையின் தற்போதைய தாரக மந்திரம். இந்த இயக்கத்தை சுற்றுலாத்துறை கடந்த ஆண்டு துவங்கியது. ஏராளமான சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுப்பதே இதன் நோக்கமாகும். இந்தியாவில் உள்ள வசதிகள் குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்து வதையும், பயணிகளை பாரம்பரிய கவனிப்புடன் உபசரிப்பதையும் இது வலியுறுத்துகிறது. புதிய தேசிய சுற்றுலாக் கொள்கை இந்த இயக்கத்திற்கு மேலும் உந்துதலை அளித்துள்ளது. “இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வோடும், ஆன்மீக உணர்வுகளோடும், சுருக்கமாக தன்னுள் இந்தியாவை உணரச் செய்ய வேண்டும்” என்று பத்தாவது திட்டம் சுற்றுலாத்துறையின் அணுகு முறையை வகுத்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இந்திய சுற்றுலா அலுவலகங்கள் வாயிலாக சுற்றுலா அமைச்சகம் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விளம்பரங்கள், கண்காட்சிகளில் பங்கேற்பு, கருத்தரங்குகள், பணிமனைகள் மற்றும் சாலையோர கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்தல், விளம்பர கையேடுகள் தயாரித்தல், அயல்நாட்டு பத்திரிகையாளர்கள், சுற்றுலா பயணங்களுக்கு ஏற்பாடு செய்வோர் மற்றும் முக்கிய பிரமுகர்களை இந்தியாவிற்கு அழைத்து வருவது போன்ற பல்வேறு செயல்பாடுகளும் இதில் அடங்கும். இந்தியாவில் சுற்றுலா வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள கிராமப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது. கிராமப்புற வாழ்க்கை, கலை, கலாச்சாரம் மற்றும் ஊரகப் பகுதிகளின் தொன்மை ஆகியவற்றை அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் காணச் செய்வதே இதன் நோக்கமாகும்.
கடந்த நாற்பது ஆண்டுகளாக, உலகெங்கிலும் சுற்றுலாத்துறையில் ஒரு பெரிய புரட்சி நடந்தேறி வருகிறது. உலகெங்கிலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இது 1.5 பில்லியன் டாலர்களை மிஞ்சும் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இதைக் கருத்தில் கொண்டு இந்திய சுற்றுலாத்துறை சவால்களை எதிர்கொள்ள முனைப்புடன் தயாராகி வருகிறது. இதன் விளைவாக ஹோட்டல்களையும் கடற்கரைகளையும் சார்ந்திருந்த சுற்றுலா, கிராம சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா என்று பல வடிவங்களையும் எடுத்துள்ளது.
இந்திய சுற்றுலாத்துறை, பல்வேறு தடைக்கற்களையும் மீறி, சென்ற ஆண்டு உலக சுற்றுலாப் பயணிகள் வருகையில் 0.44 விழுக்காடு பங்கு பெற்றுள்ளது. விமானங்களில் இருக்கை பற்றாக்குறை, அதிகரிக்கும் விமான கட்டணங்கள், தங்கும் விடுதிகளில் இடப் பற்றாக்குறை, அதிகமான விடுதிக் கட்டணம், உள்கட்டமைப்பு வசதிகளில் குறைபாடு, வரி விதிப்பு போன்றவை சுற்றுலா வளர்ச்சிக்கு தடையாக உள்ளன.
இந்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் பலனாக, இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டு 23.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதே ஆண்டில் 3.54 மில்லியன் பயணிகள் இங்கு வந்தார்கள். 2004ல் சுற்றுலாப் பயணிகளால் ஈட்டப்பட்ட அன்னியச் செலாவணி ரூபாய் மதிப்பில் 32.9 விழுக்காடு உயர்ந்துள்ளது. அதாவது அன்னிய செலாவணி ரூ.16,429 கோடியில் இருந்து ரூ.21,828 கோடியாக அதிகரித்துள்ளது. 2004ல் 6.2 மில்லியன் இந்தியர்கள் வெளிநாட்டுக்கு சென்றிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 2003ல் இந்த எண்ணிக்கை 5.4 மில்லியனாகவும், 2002ல் 4.9 மில்லியனாகவும் இருந்தது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜுன் வரையிலான காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18.6 விழுக்காடு கூடியிருந்தது. அந்தமான் போர்ட் பிளேயரில் உள்ள சிறைச்சாலைக்கு, கடந்த ஆண்டில் வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 94,311 ஆகும்.
கடந்த பத்து ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களை விரைவில் நிறைவேற்றுவதை கண்காணிக்க அரசு ஓர் அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. எட்டாவது மற்றும் ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில், 2,526 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஒப்புதல் அளிக்கப்பட்ட நாளில் இருந்து 30 மாதங்களுக்குள் இத்திட்டப் பணிகளை செய்து முடித்திருக்க வேண்டும். மாநில அரசுகள் திட்ட செயலாக்கத்தில் தாமதம் செய்வதால் ஒட்டு மொத்த வளர்ச்சியும் தடைபடுகிறது. எட்டாவது திட்டத்தில் வகுக்கப்பட்ட சில திட்டங்கள் இன்னும் முடியவில்லை இத்திட்டங்களுடன் தொடர்புடைய பல்வேறுத் துறைகளை ஒருங்கிணைப்பதற்காக சுற்றுலா அமைச்சகம், சுற்றுலா செயலர் தலைமையில் மாநில அளவிலான கண்காணிப்பு குழுக்களை அமைக்குமாறு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களை கேட்டுக் கொண்டுள்ளது.
சுற்றுலாத் தலங்கள் பெருகி வருவதால் ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் பின்வரும் கருத்துக்களை கூறுகிறார்கள்.
1 வனங்களின் அழிவுக்கு பெருகி வரும் சுற்றுலா துறையின் வளர்ச்சி மற்றொரு காரணம்.
2 ஏற்காடு ஏரியின் கரையில் இருப்பதால் ஏரிக்காடு என்று அழைக்கப்பட்டு இப்பொழுது ஏற்காடாக அழைக்கப் படுகிறது.
3 ஏற்காடு, ஒகேனக்கல், கொடைக்கானல், ஊட்டி போன்றவை சுற்றுலா தொழில் மையங்களாக ஆகிவிட்டன.
4 புதிய சுற்றுலா பகுதிகளைத் தேடும் கண்களை கிழக்குத் தொடர்ச்சி மலைகள் உறுத்த ஆரம்பித்திருக்கின்றன.
5 பயணிகள் விட்டுச் செல்லும் கழிவுகள், சுற்றுலா விடுதிகளும் உணவகங்களும் வெளியேற்றும் கழிவுகள் முறையான கழிப்பிட வசதி இல்லாததால் மனிதக் கழிவுகள் எல்லாம் சேர்ந்து சுகாதாரம் மற்றும் சூழல் சீர்கேட்டுப் பிரச்சனை களை உருவாக்கி உள்ளன.
6 சுற்றுலா தொழில் மூலம் மத்திய மாநில அரசுகள் நல்ல வருமானம் பெறுகின்றன. ஆனால் சுற்றுலா மேம்பாட்டுக்காகவும், சுற்றுலா பயணிகளின் கழிவுகளை நிர்வகிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய நிதி ஆதாரம் ஒதுக்கப்படவில்லை.
7 மூலதன நோக்கங்களுடன் வனத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது.
8 மேற்குத் தொடர்ச்சி மலைகளில் புதியசாலைகள் நிர்மாணிக்கப் படுகின்றன.
9 வரைமுறையற்ற சுற்றுலா வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
10 வனத்தைச் சார்ந்த மக்களை வெளியேற்றிவிட்டு சரணாலயங்களும் பூங்காக்களும் அமைக்கப்படுகின்றன.
11 திருவண்ணாமலையில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற்ற கிரிவலம் இப்பொழுது சுற்றுலா நோக்கத்திற்காக மாதம் ஒருமுறை பௌர்ணமி தோறும் நடைபெறுகிறது.
12 வனங்களைப் போன்றே கடற்கரைகளும் சுற்றுலா வளர்ச்சியால் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
13 வனங்களிலில் இருந்தும், மலைகளிலிருந்தும், கடற்கரைகளில் இருந்தும் அந்தப் பகுதிகளுக்கு சொந்தமான மக்கள் வெளியேற்றப் படுகிறார்கள்.
14 கடற் கரைகளில் மீனவ மக்கள் வெளியேற்றப் பட்டு நட்சத்திர ஹோட்டல்கள் உருவாக்கப் படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் விட்டுச் செல்லும் எல்லாக் கழிவுகளும் கடலின் மொத்த வளத்தையும் நாசமாக்குகின்றன.
மொழிபெயர்ப்பாளர் - தகவல் அலுவலர், மதுரை பத்திரிகை தகவல் மையம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|