புறக்கணிக்கப்படும் குழந்தைகள்
பெருகும் சவலைப் பிள்ளைகள்
கவலையில் வளரும் நாடுகள்!
- அர்ச்சனா தத்தா
இந்தியாவில் 15.8 கோடிக்கும் மேல் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கம் ஊட்டச்சத்து கிடைக்கச் செய்வதன் வழியே இந்தியாவின் முன்னேற்றத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைக் காண முடியும்.
வளரும் நாடுகளில் ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளில் பாதிபேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்து விடுகின்றனர். இத்தகைய நிலை அனேக நாடுகளின் வளர்ச்சியை வெகுவாக பாதித்துள்ளது.
நோயற்ற மனிதனே நாட்டின் சொத்து. அனைவரும் உடல் நலத்துடன் வாழ்வது நாட்டின் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்கிறது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமோழி. எனவே உடல் நலத்துடன் வாழ்வது என்பது தனி மனித மேம்பாட்டிற்கு மட்டுமல்ல, நாட்டின் வளத்தையும் மேம்படுத்தக்கூடியது. சத்தான உணவுதான் உடலை சிறப்பாகவும் சீராகவும் இயங்கச் செய்கிறது. அனைத்து சத்துக்களையும் கொண்ட சமச்சீர் உணவை உட்கெள்பவர்கள்தான் வாழ்வை மகிழ்ச்சியாகவும் முழுமையாகவும் அனுபவிக்கிறார்கள்.
ஊட்டச்சத்து என்பது காலப்போக்கில் மாறிவிட்டது. மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச் சத்து ஆகியவை உணவில் இருப்பது முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் அமினோ அமிலங்கள் கண்டறியப்பட்டன. மனித உடலுக்கு 24 வகையான அமினோ அமிலங்கள் தேவை என்பதை அறிவியல் வல்லுனர்கள் கண்டறிந்தனர். சத்துணவு குறைபாட்டால் வரும் நோய்களை குணப்படுத்தக்கூடிய நிபுணத்துவம் கிடைக்கப் பெற்றதை அடுத்து ஊட்டச்சத்து இன்மையால் ஏற்படும் நோய்களிலிருந்து ஏராளமானோர் காப்பாற்றப்பட்டனர்.
மனிதன் வாழும் சுற்றுப்புறச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நோய்களின் எண்ணிக்கையை பெருக்கியுள்ளன. இந்நோய்கள் வாழ்க்கை முறை சார்ந்தவை. இவை தொற்றக்கூடிய நோய்கள் அல்ல. அதிக உணவு உட்கொள்வதன் மூலம், இரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கிறது. மனிதன் உண்டே தன்னை மாய்த்துக் கொள்கிறான். உடல் பருமன் மேற்கத்திய நாடுகளில் பரவலாக காணப்படுகிறது. ஆனால் வளரும் நாடுகளில், ஒருசில நகர்ப்புறப் பகுதிகளை தவிர, ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க பெரும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
வறுமை, பசி, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றுக்கு எதிராக உலக அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபை 2000-வது ஆண்டில் தீர்மானம் நிறைவேற்றியது. 2015ம் ஆண்டிற்கு முன் வறுமை, பசி ஆகியவற்றை ஒழிக்கவும், குழந்தை இறப்பை குறைக்கவும், தாய்மார்களின் உடல்நலத்தை மேம்படுத்தவும் உறுதிபூணப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடு அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது. குழந்தைகள், இளம்பருவத்தினர், கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரை மிகவும் கடுமையாக பாதிக்கக்கூடியது. நாட்டின் மனித வள மேம்பாட்டையும் பொருளாதாரத்தையும் கடும் பாதிப்பிற்கும் உள்ளாக்கக்கூடியது. குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதன் மூலம்தான் மனிதவளத்தை மேம்படுத்த முடியும்.
ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க கொள்கைகளும் பல திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. பொது வினியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள், தேசிய மதிய உணவுத் திட்டம், வேலைக்கு உணவு போன்ற வேலைவாய்ப்புத் திட்டங்கள் போன்றவை இவை. உலகளவில் சத்துணவு சார்ந்த வளர்ச்சித் திட்டங்களில் பெரிய திட்டமான ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 6.92 லட்சம் அங்கன்வாடி மையங்கள் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் ஆறு வயதுக்கு குறைந்தவர்கள், கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் 4 கோடியே 52 லட்சம் பேர் பயன்பெற்று வருகிறார்கள்.
இந்தியாவில் 15.8 கோடிக்கும் மேல் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஊட்டச்சத்து கிடைக்கச் செய்வதன் வழியே இந்தியாவின் முன்னேற்றத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைக் காண முடியும். ஊட்டச்சத்து என்பது சுகாதாரத் துறையோடு மட்டும் தொடர்புடையதல்ல. இதன் பங்கு நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஒருங்கிணைக்கப்பட்ட பல்துறை வளர்ச்சி உத்தியை கடைபிடிப்பதன் மூலம் ஒட்டுமொத்த மனிதவள மேம்பாட்டைக் காணமுடியும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|