Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
பிப்ரவரி 2007
சூபி இசை - இதயத்திலிருந்து ஒரு செய்தி
ஹெச்.ஜி.ரசூல்

1. இஸ்லாமிய இசைக்கு சமய வாழ்வின் பின்னணி உண்டு. பொது வாழ்வின் கூட்டு வழிபாடுகளிலும், தனிமனித உணர்வு நிலைகளிலும் இதன் இயக்கத்தை உணரலாம். அரேபியா, மத்திய கிழக்கு நாடுகள், வடஆப்பிரிக்கா, எகிப்து, ஈரான், மத்திய ஆசியா, பாகிஸ்தான், வடஇந்தியா என பரவிக் கிடக்கும் நிலப்பரப்பின் எல்லைக்குள்ளும், வெளியேயும் இதன் செல்வாக்கு நீண்டுள்ளது. ஒவ்வொரு நாட்டில் கலாச்சார சூழலை உள்வாங்கியவாறு இந்த இசைமரபு பன்முகத் தோற்றங்களைக் கொண்டுள்ளது. இந்தோனேஷியா, மலேஷியா, தெற்கு பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளிலும் இஸ்லாமிய இசை மரபின் மாறுபட்ட தடயங்களை கண்டு கொள்ள முடியும்.

Sufi Instrument அரபு, பாரசீக மற்றும் வட இந்திய செவ்வியல் இசை மரபுகள் இஸ்லாமிய பூர்வீக இசை மரபின் மிக முக்கிய கூட்டு வடிவங்களாக திகழ்கின்றன. அரபு முஸ்லிம் கலிபாக்களின் ஆட்சிக் காலத்திலேயே நிகழ்ந்த வர்த்தக தொடர்புகளோடு நின்று விடாமல் பல நாடுகளிலும் இசையின் வழியாக சூபிகளும், முஸ்லிம் மறைஞானிகளும் தொடர்புகளை பெருக்கிக் கொண்டுள்ளனர்.

இஸ்லாமியர்களின் இசைத் தொடர்பு அன்றாட சமய வழிபாடுகளின் பல நிலைகளிலும் வெளிப்படுவதை கவனிக்கலாம். தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் ‘அதான்’ என்னும் பாங்கு சப்தம் குரலின் வழி இசை வடிவத்தில் சொல்லப்படுகிறது. ஒரு நாளின் ஐந்துவேளை தொழுகையிலும் இமாமின் வழியாக உச்சரிக்கப்படும் குர்ஆன் வசனங்களும் இவ்வகை இசை வடிவத்தையே உள்வாங்கியுள்ளன. இதுதவிர பிற சூழல்களில் மாறுபட்ட ராகங்களில் குர்ஆனை ஓதுதலும் நிகழ்கிறது.

குர்ஆன் தொகுக்கப்பட்ட காலத்தில் பல வட்டார வழக்குகளில் இருந்தவற்றை குறைஷி மொழிப்படி பேணிட கலிபா உஸ்மான் ஆணையிட்டதும், அப்போது ஏழு பிரபலமான ராகங்களிலான ஓதுதல் முறைகள் இருந்ததாகவும் புகாரி ஹதீஸின் (நபிமொழித் தொகுப்பு) ஒரு வரலாற்றுக் குறிப்பு தெரிவிக்கிறது. திருக்குர்ஆனை அழகிய ராகங்களில் விதவிதமாக ஓதும் திறனுள்ளவர்களை மதரசாக்கள் என்னும் இஸ்லாமிய மதவழி கல்வி நிறுவனங்கள் உருவாக்கித் தருகின்றன. இவர்கள் காரிகள் என்றழைக்கப்படுகின்றனர். ரம்சான் மாத இரவு சிறப்புத் தொழுகை (தராவீஹில்)யில் திருக்குர்ஆனின் முப்பது பாகத்தையும் ராகமாக ஓதி முடிக்கும் வழக்கமும் தமிழகத்தில் நிலவி வருகிறது.

2. சூபிகளின் ஞான வழிபாட்டு நிலைகளிலும் இத்தகையதொரு குரல்வழி இசைமரபு நிகழ்த்தப்படுகிறது. திக்ர் மஜ்லிஸ் (தியான சபை) அல்லது ஸிக்ர் என்பதாக இது அழைக்கப்படுகிறது. இதுவும் கூட்டு வழிபாட்டு வடிவத்தையும், சுய தியான வடிவத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சூபி மறைஞான இசைமரபின் வாஸிபா, ஸிக்ர் உள்ளிட்ட வடிவங்களும் வெவ்வேறு தொடர்புடைய இசை அடையாளங்களாக உருமாறியுள்ளன.

தெற்கு ஆசிய முஸ்லிம்களின் மத்தியில் திக்ர் ஓதுதல் இறைத் தேடலை உருவாக்கும் நிகழ்வாக வடிவம் பெற்றுள்ளது. துருக்கி பேரரசு காலத்தில் நிகழ்வுற்ற புனித மிகு இசைக்கு சாமாவின் ஒன்று திரட்டுதல் என்பதாக அழைக்கப்பட்டது. இந்த இசை வடிவங்கள் இறை மற்றும் நபிவாழ்த்துப் பாடல் பகுதிகளை கொண்டிருந்தவையாகும். பாரசீக இசை மரபின் மூல ஊற்றாகத் திகழ்ந்தவர்களில் மௌலானா ரூமிக்கு முதன்மைப் பங்குண்டு. எட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருவாகி பதினொன்றாம் நூற்றாண்டில் சாமா இசை மரபு வடிவம் பாரசீகத்திலிருந்து துருக்கி, உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும் இந்திய துணை கண்டங்களில் பரவியது. மௌலானா ரூமியின் மௌலவியா தரீகா மத்திய ஆசியாவில் இதனைப் பரப்பியது. மேற்குலகிலும், துருக்கி உள்ளிட்ட நாடுகளிலும் மௌலவியா தரீகாவைச் சார்ந்த சூபிகள் மனதை எளிதில் ஈர்க்கும் விதத்தில், இசை வடிவ நடன அசைவுகளை நிகழ்த்துபவர்களாக வெளிப்பட்டுள்ளனர். இத்தகு இசை நிகழ்வுகளை மக்கள் முன்னிலையில் நடத்துகையில் சமய வழிபாட்டுநிலை தாண்டிய பார்வையாளர்களின் ஒருங்கிணைப்பை உருவாக்கிக் காட்ட முடிகிறது.

3. இஸ்லாமிய மக்கள் இசை வடிவங்களில் மௌலிது எனும் புகழ் பாடல்கள் இசை நபிகள் நாயகத்தின் பிறப்பை ஒட்டி பல்வேறு வட்டாரங்களில், பல்வித ராகங்களில் பாடப்படும் பாடல்களின் வடிவமாக உள்ளன. இது தவிர ஷியா முஸ்லிம்களின் மக்களிசை வடிவங்கள் கவனத்திற்கு உரியவையாகும். ஆஷுரா இசை நபியின் பேரர் இமாம் ஹுசைனும், அவர் தம் தோழர்களும் கொல்லப்பட்ட தியாக நினைவுகளை கிளப்பும் விதமாக முகரம் பண்டிகை தினத்தில் நிகழ்த்தப்படுகிறது. இதுபோன்ற தஸீக் இசை ஈரானுக்கு வெளியே இமாம் ஹுசைனின் தியாகத்தை ஞாபகப்படுத்தும் விதத்தில் நிகழ்த்தப்படும் இசை நாடக வடிவ நிகழ்வாகும். எத்தியோப்பியா மக்கள் மத்தியில் பாடப்படும் மன்ஸுமா - அற ஒழுக்கப் பாடல்களும், முகம்மது நபியின் புகழ்பாடும் அரபி ஹைமன் பாடல்களும் இவ்வகையில் கவனத்திற்கொள்ள வேண்டியவையாகும்.

இஸ்லாமிய இசை வடிவக் கூறுகளாக நிலைபெற்றிருப்பவையில் மகாம், தஸ்தகா, ராகம் முக்கியமானவையாகும்.

இசையில் குரல் வடிவத்தோடு இசைக்கருவிகளின் ஒலிகள் இணைதல் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டே வந்துள்ளன. பக்தி சமய மரபு பாடல்களில் மரபு வழி இசைக் கருவிகளின் சேர்க்கை மூன்று விதமாக நிகழ்கிறது. முதலில் தோல் கருவிகளின் பயன்பாடு என்கிற விதத்தில் தப் உள்ளிட்டவை. நரம்பு கருவிகள் பயன்பாட்டில் சந்தூர் உள்ளிட்டவை. துளைக்கருவிகளில் ஷெனாய் உள்ளிட்ட பல வாத்தியங்களை குறிப்பிடலாம். நவீன கால இசை வடிவத்தில் முஸ்லிம்களின் பயன்பாட்டில் ஹார்மோனியம் மிக முக்கியமாக உள்ளது.

4. இஸ்லாமிய அறிஞர்களில் சலபிகள், வகாபிகள், தேவ்பந்த்கள் எனப் பலரும் இஸ்லாத்தில் இசையை தடுக்கப்பட்ட ஒன்றாக முன்வைக்கின்றனர். திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் இதற்கான அனுமதியைக் காணமுடியாது என்பதாக விவாதிக்கின்றனர். இஸ்லாத்தில் இசை தடுக்கப்பட்ட ஒரு விஷயம் என்பதாக கருதிக் கொண்டிருந்த வேளையில் இமாம் கஸ்ஸாலி இசை குறித்த ஆழ்ந்த சிந்தனைகளை வெளிப்படுத்தினார். இஸ்லாமிய வரலாற்றின் துவக்க காலங்களில் திருக்குர்ஆன் ஓதுவது காதில் விழாமல் தடுப்பதற்காக முரசுகள் கொட்டப்பட்டன. மதுவில் மயங்கிக் கிடந்தவர்கள் நரம்புக் கருவிகளின் இசையை போதைக்கு பயன்படுத்தினார்கள். ஆனால் இந்த நோக்கங்கள் அற்ற நிலையில் இசை மரபை பயன்படுத்த வழிகாட்டுதல்கள் சொல்லப்பட்டன.

பாலைவன வாழ்வில் ஒட்டகமோட்டிகளின் பாடல்கள், கஃபாவை தரிசிக்க நடைபயணமாய் செல்கையில், போர்க்காலங்களில் எதிரிகளைத் தாக்குகையில் துக்கங்கள், சந்தோஷங்களை வெளிப்படுத்துகையில் இசையின் மீது மீளாக்காதல் கொண்ட வஜ்த் நிலையில் பேரின்ப காட்சியான முஸாதபா நிலையில் என வாழ்வின் விடுபடா சுவடுகளாக இஸ்லாமிய இசை மரபு மாறியிருந்ததையும் இமாம் கஸ்ஸாலியின் சிந்தனைகள் சுட்டிக் காட்டுகின்றன. இவ்வகையில் அல்ஹிந்தி, அல்பராபி, அவிசீனா மற்றும் சபி அல்தீன் போன்றவர்கள் இசைக்குறித்த கோட்பாடுகளை உருவாக்கி உள்ளனர்.

தாவூத் நபியின் குரலைக் கேட்க பறவைக் கூட்டமெல்லாம் அவரின் தோள்களிலும் தலையிலும் உட்கார்ந்திருந்தன என்பதையும், உயிரினங்கள் மனிதர்கள் ஜின்கூட்டம். தாவூத் நபியின் குரலில் உறைந்து போயிருந்தான வாய்மொழி வரலாறும், யூனானி மொழியில் வழங்கப்பட்ட சபூர்வேதம் கூட இசை வடிவத்தில் அமைந்திருந்ததையும் இவ்வேளையில் கவனத்தில் கொள்ளலாம்.

5. இந்திய செவ்வியல் இசை கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசை மரபுகளாக உருவாகியுள்ளன. வேதகால இந்து சமய இசை மரபின் செவ்வியல் வடிவமாக தென்னிந்தியாவின் பேணப்படும் கர்நாடக சங்கீதம் சமஸ்கிருத பின்னணியைக் கொண்டது. யசூர், சாம அதர்வண வேதங்களில் சாம வேதம் முற்றிலும் - இசை வடிவங்களைக் கொண்டதாகும். கர்நாடக இசை ராகம், தாளம் என்கிற இருபகுதிகளின் இணைப்பில் நிகழ்த்திக் காட்டப்படுகிறது.

இஸ்லாமியர்களின் வருகையை ஒட்டி 12, 13ல் குறிப்பாக டில்லி சுல்தான்களின் ஆட்சி காலம் மற்றும் முகலாயப் பேரரசு காலத்திய நூற்றாண்டுகளில் இந்திய இசை மரபில் அரேபிய இசை வடிவத்தின் தாக்கம் ஏற்பட்டதன் விளைவாக கர்நாடக மற்றும் அரபு இசை மரபின் சேர்ந்துருவாக்கத்தில் இந்துஸ்தானி செவ்வியல் இசைமரபு உருவாகிறது. சிஸ்தியா தரீகா இந்த இசை மரபுக்கு முக்கியத்துவம் வழங்குகிறது. இந்தியாவிற்கு வெளியே பரவலாக்கம் செய்யப்பட்ட இந்துஸ்தானி இசைவடிவம் வெகுஜன மக்களால் ஈர்க்கப்பட்ட மக்கள் இசைவடிவமாக மாறியுள்ளது. இவ்விசையை பாடும் இந்து மதக் கலைஞர்கள் பண்டிட்டுகள் எனவும் இஸ்லாமியர்கள் உஸ்தாதுக்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர். இதன் தற்போதைய வடிவ உருவாக்கங்களை, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் நாடுகளின் இசைக் கலைஞர்களால் பேணப்படுவதை குறிப்பிடலாம். இது கவ்வாலி, கஸல் என்பதான காவிய இசை வடிவங்களுக்கு வித்திட்டது. 13-ம் நூற்றாண்டின் அமீர் குஸ்ரு வேதகால இசையிலிருந்து அடிப்படைகளை உள்வாங்கியும், பாரசீக இசைமரபின் நுட்பங்களை ஒன்றிணைத்தும் கவாலி என்னும் இந்துஸ்தானி இசை வடிவத்தையும், சிதார் நரம்பு இசைக்கருவியின் பயன்பாட்டையும் ஒன்றுபடுத்தினார். பாரசீக இசைமரபை தெற்காசிய இசை மரபுடன் இணைத்தொரு புதுவடிவமாய் கவாலி இசை வடிவம் அறிமுகமானது. உருது, பஞ்சாபி, சிந்திமொழி வழியாக இந்தப் பயணம் நிகழ்ந்தது.

மொகலாயப் பேரரசு காலத்தில் குறிப்பாக ஜலாலுத்தீன் அக்பர் ஆட்சிக் காலத்தில் இசையும் நடனமும் முக்கியத்துவம் பெற்றன. அக்பரின் அரசவையில் இருந்த புகழ்பெற்ற இசைக் கலைஞன் தான்சேன் நிகழ்த்திய ராக ஆலாபனைகள் வரலாற்றின் குறிப்புகளின் கவனிப்பிற்குரிய இடம் பெற்றுள்ளன. இருபதாம் நூற்றாண்டில் இந்து மகாராஜாக்கள் முஸ்லிம் நவாபுகள் வீழ்ச்சிக்கு பின்னரும் ஜனநாயக இசை வடிவமாக இந்துஸ்தானி இசை உருமாறியுள்ளது.

இந்துஸ்தானி குரலிசையைத் தாண்டி ராகங்களை மீட்டும் இசையாக சிதார், சாரட், சாரங்கி தாளவகைக்கு தபெலா புல்லாங்குழலையொத்த பன்சுரி என இசை சேர்க்கை வடிவமெடுத்துள்ளன. இந்துஸ்தானி செவ்வியல் இசை மரபை துலங்கவைக்கும் வடிவங்களாக துருபத், தரனா, தும்ரி பஜன், கஸல் உள்ளிட்டவை விளங்குகின்றன. இந்துஸ்தானி ராக அடிப்படையின் கூறுகளாக ஏழு சர்கம்கள் (ஸரிகமபதநி) அமைகின்றன. இதுவே கர்நாடக இசையில் ஏழு ஸ்ரவங்களாகும்.

6. பாகிஸ்தானிலும், வட இந்தியாவிலும் புகழ்பெற்ற இசை வடிவங்களில் ஒன்று கவாலி என அழைக்கப்படுகிறது. ஒரு மரபு வழி கவாலி பாடல் என்பது நான்கு பகுதிகளை கொண்டுள்ளது. ஹ்மது-அல்லாஹ்வின் புகழ் சொல்லும் துதி, நாட்-முகம்மது நபிகளின் புகழ் சொல்லுதல், மன்குவ பட்ஸ்-சூபி மூலவர்களை போற்றுதல் இசைஞானிகளின் கஸல்-ஆன்மீக இறைக்காதலை வெளிப்படுத்துதல் என்பதாக இவை அமைந்துள்ளன. ஷியா முஸ்லிம்கள் இமாம் அலியின் புகழ் சொல்லுதலையும் மர்சியா என்னும் கர்பலா போர்க்களத்தில் உயிர்நீத்த தியாகிகளை நினைவு கூர்தலை இவ்விசை வடிவத்தில் கூடுதலாக இணைந்திருப்பதை கவனத்தில் கொள்ளலாம்.

கவாலி மக்கள் மத்தியில் புகழ்பெற்ற பிரபல இசைவடிவமாக உருவாகியுள்ளது. தற்போதைய நிலையில் மரபுவழி கவாலியின் இசைப்பகுதிகளில் ஹம்துவில் துவங்கி கஸலுக்கு நேரடியாக வந்துவிடும் பாணியாக நிலை பெற்றுள்ளது. இது ஆன்மீக இசை என்ற எல்லையைத் தாண்டி கலாச்சாரத்தின் பிரபல இசை வடிவமாக மாறுபாடடைந்துள்ளதையும் குறிப்பிட வேண்டும்.

நுஸ்ரத் பதன் அலிகான், அபிதாபர்வீன் சப்ரி சகோதரர்கள், வடலி சகோதரர்கள், ஷாஹ்ரம் நஸ்ரி, ரிஷ்வான் - முஸாம் கவாலி குழு உள்ளிட்ட இசைக் கலைகளின் சமகால இசைப்பங்களிப்பு இதில் முக்கியமானதாகும்.

பாரசீக கவிதை வடிவத்திலிருந்து உருவான கஸல் வடஇந்திய உருது கவிதையின் வடிவத்தில் தீவிர செல்வாக்கை செலுத்தியது. மிர்சாகாலிப், மிர்தாகுமிர் சௌதா கவிஞர்களிடம் இதன் பிரதிபலிப்பை காணலாம். இது மக்கள் மத்தியிலான பிரபல இசைவடிவமாக உருவாகினாலும் ஈரான், மத்திய ஆசியா, துருக்கி, இந்தியா, பாகிஸ்தான் நிலப்பகுதிகளில் நாட்டுப்புற இசைவடிவம், வெகுஜன இசை வடிவம் செவ்வியல் இசைவடிவம் என பன்மைத் தன்மை மிக்க அடையாளங்களை கொண்டிருந்தது. உஸ்தாத் அமனாத் அலிகான், மெகதிஹஸன், பரீதா கானம், இக்பால் பானோ மற்றும் குலாம் அலி உள்ளிட்டோர் கஸல் இசைவடிவத்தின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களாக திகழ்கின்றனர்.

சூபி இசை மரபின் தொடர்ச்சியாக இந்திய இசை மரபின் மேதையாக விளங்கிய ஹஸரத் இனயத் கானை (1882-1927) குறிப்பிடலாம். கிழக்குலகையும் மேற்குலகையும் இசை மரபால் ஒன்றுபடுத்தி ஐரோப்பிய நாடுகளிலும் இவரது இசைப் பயணம் நிகழ்ந்துள்ளது. அரபு, பார்சி, சமஸ்கிருத மொழிப் புலமையும், இந்திய வகைப்பட்ட இசையில் தேர்ச்சியும் சூபிச தத்துவ நிலைப்பாட்டில் ஆழ்ந்த ஈடுபாடும் ஒருங்கே பெற்றவர். அஜ்மீரின் குவாஜா முகீனுதீன் தோற்றுவித்த சிஸ்திதரீகாவின் மற்றுமொரு சூபியான நிசாமுத்தீன் அவுலியாவின் வழித்தோன்றலாக ஹஸரத் இனயத் கான் அடையாளம் பெறுகிறார்.

1910களில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகளிடையே பயணம் செய்து அங்குள்ள பல்கலைக் கழகங்களில் இந்திய வகைப்பட்ட இசை குறித்த ஆய்வு சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். சூபியிசம் குறித்தும் அவர் படைத்துள்ள நூல்கள் முக்கியத்துவமிக்கவை. உலக அளவிலான சூபி இயக்கத்திற்கான தலைமையகத்தை 1920களில் ஜெனிவாவில் உருவாக்கினார். தற்போது இது பாரிசுக்கு அருகாமையில் அவரது மகன் விலாயத் இனயத்கானால் வழி நடத்தப்படுகிறது.

ஹஸரத் இனயத்கானின் ஏறத்தாழ 31 செவ்வியல் இந்திய இசைமரபு சூபி பாடல்கள் ஒலிவடிவில் வெளி வந்துள்ளன. ஹஸரத் இனயத்கானின் வாரிசான ஹிதாயத் இனயத்கானின் “இதயத்திலிருந்து ஒரு செய்தி” ஆன்மிக இசை வாஸிபா, ஸிக்ர் உள்ளிட்ட சூபி இசை ஒலித்தொகுப்புகள் சூபி இசை மரபை திரும்பவும் உயிர்ப்பித்தெழச் செய்கின்றன.

சூபிகள் ‘சாதேசர்மத்’ என்ற சொல்லாடலின் வழியாக அரூப ஒலியை உணர முயல்கின்றனர். ஹிரா மலைக்குகையில் முகமது நபிகள் ஜிப்ரயீல் (வானவர்) மூலமாக கேட்ட இக்ரஹ் - (ஓதுவீராக) இறை வசனமும் தூர்சினா மலைமுகட்டில் மூசாநபி இறையோடு பேசியதும் இவ்வகையில் ஞாபகப்படுத்தலாம். உடல், மனம், ஆத்மா என்கிற நிலையில் புலனுணர் நிலை கடந்த சஞ்சரிப்பின் தடங்களாக ‘ஹூ’வின் ஒலி தாவரங்கள், பறவைகள், விலங்கினங்கள், கடலினங்கள், என பிரபஞ்சம் தழுவி ரகசியமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. மெய்மைத் தேடிய பயணமாய் சூபிகள் இதனை புரிந்து கொள்கின்றனர். இயற்கை சார்ந்த உணர்வு நிலையின் பிரதி பிம்பமாக தாளவியம் உருவாகிறது. இந்திய இசை மரபின்படி நான்கு அடிகளைக் கொண்ட தாளகதி சதுரா, மூன்றடிகளைக் கொண்ட திஸ்ரா, ஐந்தடிகளால் ஆன காந்தா, ஏழு அடிகளைக் கொண்ட மிஸ்ரம், ஒன்பதடிகளால் ஆன சங்கரியான் என்பதாக தாளலயங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தாளலயத்தின் பின்னணி சார்ந்தே உடல் நடன அசைவுகளும் உருவாகின்றன.

இதன் நுட்பமான மற்றொரு வெளிப்பாடுதான் மௌலான ஜலாலுதீன் ரூமியின் மௌலவியா தரீகாவினர் பின்பற்றும் தியானச் சுழல் நடனமாகும். பாதங்கள், கால்கள், தோள்கள், உள்ளங்கைகள், கண்கள் என உடலின் பகுதிகள் தனித்தனி முத்திரைகளோடு முதல் பதினைந்து நிமிடங்களுக்கு மெதுவாக புதுவகை உடல்மொழியைப் பேசுகின்றன. இறுதி பதினைந்து நிமிடங்களில் விரைவு சுழற்சியாக இந்த ஞான நடனம் முற்று பெறுகிறது.

7. இந்திய நாட்டுப்புற இசை வடிவம் ஒவ்வொரு வட்டாரம் சார்ந்து மக்களிசையாகவும் நடன முறைமைகளை உள்ளடக்கியதாகவும் வெளிப்படுகின்றன. பஞ்சாபி மக்களின் பங்காரா நடன இசை, மகாராஷ்டிராவின் லாவணி இசை, குஜராத் மக்களின் கலாச்சார வடிவ டாண்டியா இசை, நவராத்திரி விழாவில் இசைக்கும் கர்பா இசை, ராஜஸ்தானியின் லங்காஸ், ஸபீரா, போபா, ஜோகி இசை, வங்காளத்தின் தாந்திரீக மரபு, சூபி மரபு இணைந்த பவுல்களின் இசை எனப் பலப்பரிமாணங்கள் வெளிப்படுகின்றன. இந்த வரிசையில் இடம்பெறும் கேரள முஸ்லிம் மக்களின் மலபாரின் மாப்பிள்ளை பாடல்கள் நடனமும் இசையும் கலந்த வடிவமாக இன்றும் நிலவி வருகின்றது.

இந்த வகையில் தமிழ் முஸ்லிம்களின் இசை மரபுகளையும் கவனப்படுத்த முடியும். அரபு வகைப்பட்ட கூட்டு வாழ்வியல் முறை சார்ந்த மௌலிதுகள், மாப்பிள்ளை பைத்துகள் (திருமண அழைப்புப் பாடல்கள்), பதங்கள் உள்ளிட்டவை இவற்றில் முக்கியமானவையாகும். தாலாட்டு, ஊஞ்சல் பாட்டு, கப்பல் பாட்டு, ஆனந்தக் களிப்பு, கும்மி, லாவணி, சிந்து என்பதான பாடல் வகையினங்கள் உண்டு. கிஸ்ஸா (எடுத்துரைத்தல்) நாமா (வரலாறு) மசாலா, படைப்போர் உள்ளிட்ட கதைப்பாடல் வடிவங்கள், நாடக வகையினங்கள் என பரந்துபட்டதொரு இசைசார்ந்த உலகம் தமிழ் முஸ்லிம்களிடம் புதையுண்டு கிடக்கிறது. இவ்வாறே செவ்வியல் இசை வடிவங்களிலும் ஆழ்ந்த புலமை மிக்க படைப்பாளிகளையும் காணலாம். முன்பு பள்ளிவாசல்களில் பயன்படுத்தப்பட்ட பாங்கிற்கு (தொழுகை அழைப்பு) முன்பு அடிக்கும் நகரா தஃப்சு என்னும் சலங்கைகள் கட்டாத சிறுபறை. (இதனை கொட்டு என்று சொல்வதுண்டு) தாயிரா என்னும் சலங்கைகள் கட்டிய சிறுபறை உள்ளிட்டவைகள் முஸ்லிம்கள் அதிகமும் பயன்படுத்தும் நாட்டுப்புற இசைக்கருவிகளாகும். இக்கலை வடிவத்தை அழியாமல் காப்பாற்றுவதில் பக்கிர்களுக்கு முக்கிய பங்குண்டு.

தஞ்சை ஆபிராகம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் போல 1982-களில் குலாம் காதிறு நாவலர் இசை நுணுக்கம் சார்ந்த இசை இலக்கண நூலொன்றை படைத்தளித்துள்ளார். செவ்வியல் இசை மரபின் தொடர்ச்சியை புதுக்கோட்டை அரசவைப் புலவராக இருந்த சோட்டுமியான், தலைமுறை வாரிசுகளான கௌஸ் மியான், தாவூது மியான் மற்றும் டி.என்.காதர்பாட்சா, நாதஸ்வர கலைஞரான ஷேக் சின்ன மௌலானா, இசை மணி எம்.எம்.யூசுப், நாகூர் இ.எம்.அனீபா, உசேன் பாகவதர், ஏ.ஆர்.ஷேக் முகம்மது, சாகுல் ஹமீது அண்மையில் வெளிவந்த முதல் தமிழ் சூபி பாடல் ஒலி இசைத் தொகுப்பான மஜ்லிஸ் வழி அறியப்பட்ட ராஜா முகம்மது என நீள வரிசைப்படுத்தலாம்.

8. மொழியின் அடிப்படை இரு வித இயங்குதளங்களை பிரதானப் படுத்துகிறது. ஒன்று ஒலித்தளம். மற்றொன்று உணர்தளம், ஒலித் தளத்திலிருந்து இசையின் துவக்கமும் உணர்தளத்திலிருந்து படைப்பிலக்கிய உருவாக்கமும் நிகழ்கிறது. இசை இயலில் தனித்தனி இசைக்குறிப்புகளுக்கு அர்த்தம் எதுவும் இல்லை. வெறும் ஓசையாக இருக்கும் இவற்றின் பல குறிப்புகள் ஒன்றிணையும் போது இசை பிறக்கிறது. மேற்கத்திய நவீன கால இசையின் உருவாக்கம் பாரம்பரிய தோல், நரம்பு, துளைக் கருவிகளிலிருந்து மாறுபாடடைந்து நவீன தொழில் நுட்பக் கருவிகளின் வளர்ச்சியாகி மின்சாதன இசைக் கருவிகளாகவும் கிடார், பியானோ, ரிதம், சிந்தனசசர், கீபோர்டு என்பதான மாறுபட்ட வகையினங்களாகவும் உருவாகியுள்ளன. 17ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரஸ்கோபால்டி அதோல், 18ம் நூற்றாண்டில் பாக் அதைத் தொடர்ந்து மோஸாட், பீத்தோவன், வாக்னர் உள்ளிட்ட இசை மேதைகளிடம் மேற்கத்திய இசை முழுவடிவத்தை பெற முனைந்தன. வாக்னரின் நாற்பரிமாண படைப்பான த ரிங் இசை நாடகம் மிகவும் புகழ்பெற்றதாகும். இவ்வகையில் பியூக் சிம்பொனி சொனடா ரொண்டோ, டொக்காடா என்பதான இசை வடிவங்களும் கவனம் பெறுகின்றன.

ஐரோப்பியச் சூழலிலே மேற்கத்திய இசைவடிவங்களில் ஜாஸ் இசையைத் தொடர்ந்து மாறுபட்டு மிதக்கும் தன்மை இல்லாமல் போராடும் குணம் கொண்டதாக ரேப் இசை விளங்குகிறது. அமெரிக்காவில் வெள்ளை இன வெறி ஆதிக்கத்தால் நசுக்கப்பட்டுக் கிடக்கும் ஆப்பிரிக்க கறுப்பின மக்கள் தங்களின் விடுதலைக்கான அடையாளமாக ரேப் இசையைப் பயன்படுத்துகின்றனர். எலிஜா முகமதுவால் வழி நடத்தப்பட்டு மால்கம் எக்ஸ் மற்றும் குத்துச் சண்டை வீரர் காஸியஸ்கிளே என்னும் முகமது அலியால் பிரபலப்படுத்தப்பட்ட இஸ்லாத்தின் தாயகம் இயக்கமும் அதனை முன்னெடுத்துச் செல்லும் பாரகான் ரேப் இசை “உலகின் குழந்தைகளை எல்லாம் உன்னிடம் அழைத்து வருகிறது” என்பதாக பிரகடனப்படுத்துவதைக் குறிப்பிடலாம்.
இஸ்லாமிய சமய அரசியல் அடையாளமும், ஆப்பிரிக்க மைய கறுப்பின விடுதலை உள்ளமும் கொண்ட முஸ்லிம் ரேப் இசைக் குழுக்கள் பப்ளிக் எனிமி, நேட்டிவ் டீம், ஸ்கின்னி பாய்ஸ் உள்ளிட்ட பல்வகைப் பட்டவையாய் இயங்குகின்றன.

உலக அளவில் ஆப்கான், ஈராக், பலஸ்தீனம், போஸ்னியா உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கமயப்படுத்தப்பட்ட உலக பன்னாட்டு ஏகாதிபத்தியம் ஆக்ரமிப்பு போரின் மூலம் முஸ்லிம்களை அழித்தொழிக்கிறது. இதற்கு எதிர்வினையாக ஜிகாத்ரேப் என்னும் வடிவிலான இசை ஆல்பம் மோசாமான நிராகரிப்பாளர்கள் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. ஈராக்கின் அப்பாவி மக்களை வெறிகொண்டு குண்டுவீசி கொன்ற அமெரிக்க ராணுவப் படையின் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு எதிரான கோப உணர்வை இது பரப்பிச் செல்கிறது. ரொனால்டு ரீகன் ஒரு மோசமான நிராகரிப்பாளன் மிஸ்டர் டோனிப் பிளேயர் ஒரு மோசமான நிராகரிப்பாளன். தீயில் தூக்கி வீசுங்கள் அவர்களை என்பதாக ஜிகாத்ரேப் இசையின் பாடல் வரிகள் ஒலிக்கின்றன. உலக அளவில் புகழ்பெற்ற பாப் இசை கலைஞரான கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட கேட்ஸ்டீவன்சன் என்ற யூசுப் இஸ்லாம் வெளியிட்ட இசைத் தொகுப்புகளும் இஸ்லாமிய அடையாளங்களை முன்நிறுத்தி இயங்குகின்றன.

9. இன்றைய தமிழ் சூழலில் ஒற்றைப்படுத்துப்பட்ட அரசியல், பொருளியல் கலாச்சாரச் சூழலில் அழிக்கப்படுகிற அல்லது ஓரம் கட்டப்படுகிற கலாச்சார மைய நீரோட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. செவ்வியல் இசை, திரை இசை என ஏதோ ஒன்றை மட்டும் மையப்படுத்தி அதுவே எல்லாவித இசை வடிவங்களுக்கும் அடிப்படை என்கிற பார்வை நிலை பெற்றுள்ளது. இஸ்லாமிய சூழலிலோ இசையை விலக்கப்பட்டதாக பிரச்சாரம் செய்வதும் அல்லது ஷிர்க் (இணை) வைக்காத இசை என்று பகுத்துப் பார்ப்பதும் சூபிகளை இஸ்லாமிய எல்லையிலிருந்து வெளியேற்றி காபிர்கள் (நிராகரிப்பாளர்கள்) என தீர்ப்பு வழங்குவதும் ஓர் இஸ்லாமிய அடிப்படைவாத மனோநிலையாக கட்டமைக்கப்பட்டு வருகிறது. இவ்வேளையில் சூபி கவிஞர்களின் புதைக்கப்பட்டு கிடக்கிற இசை மரபை கண்டெடுத்து வெளிக் கொண்டு வருவதும் இஸ்லாமிய இசை அரசியல் குறித்த தெளிவினை உருவாக்க இடமளிக்கும்.

மாறுபட்ட அடையாளங்களை ஒன்றிணைக்கும் பன்மை இசைவடிவத்தை முதன்மைப்படுத்தும் பின் நவீன இசை பல்வித இசை மூலங்களிலிருந்து தேர்விடப்பட்ட எதிர்மறைப்பண்பு கொண்டதொரு சுயவிளக்கத் தன்மைமிக்க பகுதிகளை ஒன்றிணைப்பதாக விளங்குகிறது. உயர்தரப்பினருக்கான இசை, அடித்தள மக்களுக்கான இசை என தரப்படுத்தும் மரபு வழி சிந்தனையை எதிர்த்து கலகம் செய்து இந்த இரு வேறு எல்லைகளை உடைத்து ஒன்றுபடுத்த முயல்கிறது. பெரும்பான்மை மக்களுக்கான நுகர்விய கலைப்பண்டமாகவும் இது தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொண்டிருக்கிறது. பின் நவீன இசை ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் குழுமத்தின் அடையாளமாகவும், அதன் உட்கலாச்சார வெளிப்பாடாகவும் முன்வைக்கப்படுகிறது. இந்த வகையில் முஸ்லிம் குழுமத்தின் உட்பகுதியான சூபி கலாச்சார தமிழ் அடையாளத்தை பன்மை இசை வடிவ நுட்பங்களோடு அரபு முஸ்லிம் இசை கர்நாடக, இந்துஸ் தானி, நாட்டார் இசை என வெகுஜன மக்களின் மத்தியில் மறுஉருவாக்கம் செய்வதும் மிக முக்கியமான எதிர்கொள்ளலை வேண்டி நிற்கிறது. இசை அறிஞர் நா.மம்மது, கீற்று வெளியீட்டக ஹாமீம் முஸ்தபா குழுமம் இணைந்து வெளியிட்டிருக்கும் சூபி ஞானி பீர்முகம்மது சாகிபுவின் சில பாடல் பகுதிகள் மஜ்லிஸ் என்ற பெயரில் தமிழின் முதல் சூபி இசைப்பாடல் ஒலித் தொகுப்பாகியுள்ளது. இதிலிருந்து கூட புதிய பயணத்தை துவக்கலாம்.

தமிழ் சூபி ஞானிகளான தக்கலை பீர்முகம்மது சாகிபு, ஞானியார் சாகிபு, குணங்குடி மஸ்தான் சாகிபு, ஜவ்வாது புலவர் அருணகிரிநாதருக்கு இணையாக இசைவடிவில் திருப்புகழ் படைத்த காசிம் புலவர், வண்ணக் களஞ்சியப் புலவர், காளை அசனலிப்புலவர் ரசூல்பீவி, கச்சிப்பிள்ளையம்மாள் உள்ளிட்ட பலப்பல இசைவாணர்களின் பா வடிவங்களும், கீர்த்தனைகளும், ஞானக்குறம், ஆனந்தக் களிப்பு, பூவடிச் சிந்து உள்ளிட்ட எண்ணற்ற நாட்டுப்புற பாடல் வடிவங்களும் இவற்றில் முக்கியத்துவம் பெறுகின்றன. வரிகளாய் வார்த்தைகளாய் வாழும் சூபி இசைமரபின் அரிய பொக்கிஷங்களான இவை ஒலியாய், இசையாய் மறுவடிவம் பெறும்போது நிகழும் அற்புதங்களை மனதால் மட்டுமே உணரமுடியும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com