என் கடவுள் எந்தக் கோயிலிலும் இல்லை
ஜி. மஞ்சுளா
எதன் பொருட்டும்
எந்தக் கடவுளும்
விசாரிப்பதில்லை
மக்கள் வாழ்வை.
மக்களின் மகோன்னதங்களையும்
அழிவுகளையும்
அவன் அறிவதில்லை.
மதங்களின்
காப்பகமாகவே
இங்கு கோயில்கள்
அங்கு
அவனைத்தவிர
வேறு எல்லாமே
வழிபடப்படுகின்றன.
அரசியல் மதமாக்கப்படுவதும்
மதம் அரசியலாக்கப்படுவதும்தான்
இங்கு
தேசிய விளையாட்டு.
விளையாட்டில் பங்குபெற
தகுதிகளற்று இருப்பதே
தகுதி.
அதிகாரங்களால்
கட்டப்பட்ட
கோட்டைச் சுவர்களில்
பல்லிகளாகி கத்துகின்றனர்
மக்களின் பிரதிநிதிகள்.
எந்தச் சத்தமும்
பலிப்பதில்லை
எந்தப் பாவிக்கும்
புரிவதில்லை.
தேர்தல் நேரங்களில்
கிரகங்கள் மாறினாலும்
ஆட்சி பிடிப்பவர்களின்
அரசியல் ஜாதகம்
அப்படியேதான் உள்ளது.
அறுத்து எடுக்கமுடியாத
சீமை
அவனவனே விழுங்கியாக
வேண்டும்.
மனித வேட்டைகளை
மிருகங்கள்
நடத்துகின்றன.
பள்ளிகளில்
பாம்பாட்டிகள்
மகுடி ஊதி
விளையாடுகின்றனர்.
கடவுளைக்
கல்லாக்கி
நீதி தேவதை
கனவாகிப் போனாள்
வாழ்வைப் போலவே
மரணமும்
எதன் பொருட்டும்
விசாரிக்கப்படுவதில்லை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|