பாகிஸ்தான் பயணம்: சில புரிதல்கள்
ஜே.ஆர்.எட்வர்ட்
சமீபத்தில் பாகிஸ்தான், லாகூர் நகரில் அமைந்துள்ள லாகூர் மேலாண்மை அறிவியில் பல்கலைக்கழகத்தின் கணிதத்துறை சார்பில் நடைபெற்ற அனைத்துலக கணித ஆய்வு மாநாட்டில் கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘கணிதமும் தகவல் தொழில்நுட்பத்தில் அதன் பயன்பாடுகளும்’ என்ற பொருளில் இம்மாநாடு நடைபெற்றது. அதற்காக ஒருவார காலம் லாகூரில் இருந்தேன். ஒரு திருத்தம்: நாம் ‘லாகூர்’ என்று தவறாக உச்சரிக்கிறோம். ‘லகோர்’ என்பது தான் சரியான உச்சரிப்பு.
லகோர் பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரம். (பாகிஸ்தானிலுள்ள) பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரம். பிரிவினைக்கு முன் ஒருங்கிணைந்த பஞ்சாப் மாநிலத்தின் தலைநகராயிருந்தது லகோர். டில்லியிலிருந்து 40 நிமிட விமான பயணம்தான். டில்லியின் அதே காலநிலை. விமான நிலைய சம்பிரதாயச் சடங்குகள் முடிந்து வெளியே போனால் இந்தியாவின் இன்னொரு நகருக்குள் கால்வைக்கிற மாதிரியே இருக்கிறது.
ஒருவார காலத்தில் ஒரு நாட்டைப்பற்றி சரியாக மதிப்பிடுவது இயலாத காரியம். அதுவும், ஒரு நகரத்தின் ஓரிரு பகுதிகளை மட்டும் பார்த்து விட்டு அந்நாடு பற்றி எடைபோடுவது நியாயமற்றது. இருப்பினும், அங்கிருந்த ஒருவார காலத்தில் கிடைத்த சில அனுபவங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு ஏற்றதென்று கருதுகிறேன்.
பாகிஸ்தானின் தாய்மொழி உருது. இந்திக்கு மிக நெருக்கமான மொழி. இந்தி தெரிந்தவர்கள் உருதுவையும், உருது தெரிந்தவர்கள் இந்தியையும் சுலபமாகப் புரிந்து கொள்கிறார்கள். நான் இந்தியாவிலிருந்து சென்றவன் என்பதால் பலரும் இந்தியிலும் உருதுவிலும் பேசமுயன்று, என்னால் புரிந்துகொள்ள முடியாததைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். இந்தியர்கள் அனைவருக்கும் இந்தி புரியும் என்று அவர்கள் கருதுகிறார்கள். நான் சொன்னேன்: ‘எனது தாய்மொழி தமிழ். தமிழ்நாடு என்ற மாநிலத்தைச் சார்ந்தவன்’.
தமிழ்நாடு என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருகிற முதல் பெயர் வீரப்பன். வீரப்பன் கதையை ஆர்வத்துடன் கேட்கிறார்கள். வீரப்பன் எல்லை கடந்து பிரபலமாகியிருந்தது எனக்கு அப்போது தான் தெரிந்தது. அவர்கள் கேள்விப்பட்டிருக்கும் இன்னொரு பெயர் ஜெயலலிதா. அப்புறம் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தை நன்கு தெரிகிறது தமிழர்களாக அல்ல. நடிகர்களாக. தமிழ்நாடு என்றவுடன் இலங்கையுடன் சேர்ந்த பகுதியென்று கருதுபவர்களும் இருக்கிறார்கள்.
பாகிஸ்தானில் நிறைய பேர் அமிதாப்பச்சன் ரசிகர்கள். இந்திப் படங்களை விரும்பிப் பார்க்கிறார்கள். தியேட்டர்களில் காட்டப்படுவதில்லை. செயற்கைக் கோள், டி.வி.சானல்கள் வாயிலாக இந்திப் படங்கள் வாயிலாகவே கமல்ஹாசன், ரஜினிகாந்த்தைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இந்த உரையாடலின் போது கூட இருந்தவர்களில் ஒருவர் கமல்ஹாசன் நடிப்பை வியந்து பேசினார்.
படித்த மக்களிடையே முஷரஃப்க்கு நல்ல செல்வாக்கு. அரசியல் தளத்தில் நிலவிவந்த ஊழலை ஒழிக்கும் விதமாய் பல கடும் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். ஊழலற்ற அரசுதான் முஷரஃபின் இலட்சியம். இதற்கு நல்லுள்ளம் கொண்டவர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முஷரஃப் அமைதியை விரும்புபவர் என்கிறார்கள். அண்டை நாடுகளுடன் நட்புறவை வளர்ப்பதில் அவருக்கு நிஜ அக்கரை இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இந்தியர்கள் மீது அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள் பாகிஸ்தான் மக்கள். சுமார் 200 பேர் கலந்து கொண்ட கணித ஆய்வு மாநாட்டில் 30 பேர் வெளிநாட்டினர். மீதிபேர் பாகிஸ்தானியர். இந்தியாவிலிருந்து இரண்டு பேர். இந்தியாவிலிருந்து வந்திருப்பது யார் எனத் தேடிவந்து கைகுலுக்குகிறார்கள். ‘நாம் சகோதரர்கள்; அரசுகள் மட்டும் ஏன் பகைமையுடன் இருக்கின்றன?’ என்று நெகிழ்ந்து போய் கேட்கிறார்கள். ஒரு கடையில் சில பொருள்கள் வாங்கச் சென்றபோது, நான் இந்தியன் என்பதை அறிந்து கொண்ட உரிமையாளர் காசு வாங்க மறுத்துவிட்டார். முன்பின் அறிமுகமில்லாத அவர் ‘லடிர யசந டிரச பரநளவ’ என கையைக் குலுக்கியவாறே சொன்னபோது நெகிழ்ந்து போனேன்.
கற்றவர்களிடையே கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு ஆதரவு இருக்கிறது. ஹர்கிஷன்சிங் சுர்ஜித் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் பொதுச்செயலாளர்) மீது நல்ல மரியாதை. இந்தியாவில் சில மாநிலங்களில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறுவதாக நான் சொன்னது அவர்களுக்கு ஆச்சரியமாயத் தோன்றுகிறது. பர்தா அணிந்த எந்த பெண்ணையும் நான் பார்க்கவில்லை. பெண் சுதந்திரம் அங்கு வலுவாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிகள் மிகவும் சுதந்திரமாக இருக்கிறார்கள். மாணவர்களுடன் நண்பர்களாகப் பழகுவதற்கு எவ்விதத் தடையும் இருக்கவில்லை. கிராமப்புறப் பகுதிகள் பற்றி தெரியவில்லை.
வறுமை, கல்லாமை, வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகள் அங்கும் உள்ளன என்ற போதிலும் இந்தியாவின் அளவுக்கு கோரமாக இல்லை என்றே தெரிகிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|