தலையங்கம்
இந்திய இறையாண்மையை தீர்மானிப்பது யார்?
ஆசிரியர்
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகள் ஒவ்வொன்றாக 1950-களில் விடுதலைபெறத் தொடங்கின. இந்த நாடுகளை அப்போதிருந்த வல்லரசுக் கண்ணிகள் தங்கள் அதிகார லாயங்களில் பூட்டி வைக்க முயற்சி நடைபெற்ற கெடுபிடிச் சூழலில்தான் ‘அணிசேரா நாடுகள்’, ‘கூட்டுச் சேரா நாடுகள்’, ‘பஞ்சசீலக் கொள்கைகள்’ என்ற புதிய அரசியல் சொல்லாடல்கள் மூன்றாம் உலக நாடுகளில் இருந்து ஒலிக்கத் தொடங்கின. புதிதாக விடுதலை பெற்ற நாடுகள் வல்லரசுகளின் கைக்குழந்தைகளாய் மாறிவிடாமல் பாதுகாத்ததில் இந்தியாவின் பங்கு முக்கியமானது.
இத்தகைய வலிமையான இந்திய இறையாண்மையை சந்திரசேகர் பிரதம அமைச்சராக இருக்கும் போது குலைக்கத் தொடங்கினார். அமெரிக்க போர் விமானங்கள் இந்தியாவின் பெட்ரோல் நிலையங்களில் தங்களை வயிறுகளை நிரப்பிக் கொள்ள அனுமதி அளித்தார். அன்று தொடங்கிய நெருக்கடி இன்றும் தீர்ந்த பாடில்லை.
இப்பொழுது இருக்கின்ற மத்திய அரசு தனது வெளியுறவு நிலைப்பாட்டை அமெரிக்காவின் கண்ணசைவுகளுக்கு ஏற்ப செயல்படுகிறது என்ற தோற்றமே உருவாகியுள்ளது. ஈரான் பிரச்சனையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை இந்தியா ஆதரிக்கவில்லையென்றால் ?! என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதரால் நம்மைப் பார்த்து எச்சரிக்கை செய்ய முடிகிறது. அந்த தூதரின் வார்த்தை வாய் தவறி வந்தவை என்று அரசால் அதற்கு வக்காலத்து வாங்கி வழிமொழியவும் முடிகிறது. அமெரிக்க நிர்பந்தத்தில் அமைச்சர்களை மாற்ற முடிந்த நமக்கு இந்தியாவுக்கெதிராக எச்சரிக்கை மொழி பேசும் அமெரிக்க தூதரை திரும்பி போகச் சொல்ல தைரியமில்லை.
ஈரான் விஷயத்தில் அமெரிக்காவை நாம் ஆதரிக்கவில்லையென்றால் அமெரிக்காவுடன் போட்டிருக்கின்ற அணுஆயுத ஒப்பந்தம் ரத்தாகிவிடும் என்று இந்திய மக்களுக்கு அமெரிக்காவைப் போலவே இந்தியாவும் எச்சரிக்கை செய்திகளை விட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் சுயசார்பை சாகடிக்கும் அமெரிக்காவுடனான ஆயுத ஒப்பந்தம் ரத்தானால்தான் என்ன?
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு அமைச்சர் பொறுப்பில் இருந்தே கழற்றி விடப்பட்ட நட்வர்சிங்கும், இலாகா மாற்றப்பட்ட மணிசங்கரரும் அமெரிக்காவின் சாபத்திற்கு ஆளாகி தண்டனை பெற்றார்கள். ஈரானுடனும், சீனாவுடனும் எரிசக்தி பரிமாற்றம் தொடர்பாக இந்திய முயற்சிகளை முன்னெடுத்து சென்றதே இவர்கள் மீதான அமெரிக்க வெறுப்பின் அந்தரங்கம்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கப் போகிறதா? இல்லையா? என்பதல்ல கேள்வி. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை யார் தீர்மானிக்கிறார்கள் அமெரிக்காவா? அல்லது இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசா? என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் முடிவு ஈரானுக்கு சாதகமாக இருந்தாலும் அமெரிக்கா ஈரானை விடப்போவதில்லை என்றே தெரிகிறது. ஆறுமாதங்களுக்கு முன்பே ஈரானின் வான்வெளியில் டம்மி போர் விமானங்களை பறக்க விட்டு நோட்டம் பார்த்தது அமெரிக்கா. ஈரான் அந்த டம்மி விமானங்களை எதிர் கொள்ள தன் நாட்டின் ரேடார்களைத் திறக்கும்; அப்படித் திறக்கும் போது ஈரான் நாட்டில் ரேடார்கள் இருக்கும் இடம் தெரியும், பின்னர் நிஜப் போர் வரும்போது மிக எளிதாக ரேடார்களைத் தகர்த்து விடலாம் என்ற அமெரிக்க தந்திரம் ஈரானில் செல்லுபடியாகவில்லை. ஈரான் அரசு அமெரிக்க டம்மி விமானங்களுக்கு எதிராக தன் நாட்டின் ரேடார்களை திறக்கவேயில்லை.
1950களிலிருந்தே அமெரிக்காவின் பல்வேறு நிர்பந்தங்களில் வாழ்வை எதிர்கொண்டவர்கள் ஈரானியர்கள். ஈரானின் எண்ணை வளங்களை கையகப்படுத்த அங்கே ஒரு பொம்மை ஆட்சியை வைத்து நீண்ட காலம் ஈரானிய மக்களை ஒடுக்கிய அமெரிக்க சார்பான ஈரானிய அரசை ஈரான் மக்கள் ஒரு பண்பாட்டு புரட்சியின் மூலம் முடிவுக்கு கொண்டு வந்தார்கள். ஈரானைப் பொறுத்தவரை அந்த நாட்டு மக்களின் போராட்டத்தில் மதம் ஆன்மாவாக தொழிற்பட்டது. இப்பொழுது மீண்டும் ஈரானுக்கெதிராக அமெரிக்காவின் கரங்கள் நீளுகின்றன.
தகப்பன் புஷ் கட்டவிழ்த்து விட்ட பொய்களிலும் புரளிகளிலும் ஈராக்கை அந்த மக்கள் இழந்தார்கள். இப்பொழுது மகன் புஷ் அதே பொய்களையும் புரளிகளையும் ஈரானை நோக்கி திருப்பி விட்டிருக்கிறார். ஈராக்கைப் போல் ஈரானில் ஒற்றை வரி தீர்மானத்தில் போரை ஆரம்பிக்க அமெரிக்காவால் முடியாது என்று தெரிகிறது. ஏனென்று சொன்னால் ரஷ்யாவும் சீனாவும் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியிடம் ஈரான் பிரச்சனையை கொண்டு போக அனுமதித்திருக்கும் அதே வேளையில் ஒரு வரித் தீர்மானத்தில் போர் ஆரம்பிக்கக் கூடாது என்ற நிபந்தனையையும் விதித்திருப்பதாக தெரிகிறது. ரஷ்யாவோ சீனாவோ எந்த நாடும் எப்படி வேண்டுமானாலும் போகட்டும் இன்றைய உலகமயச் சூழலில் மூன்றாம் உலக நாடுகளும், ஆசிய நாடுகளும், ஆப்பிரிக்க நாடுகளும், அமெரிக்காவின் ஒற்றை ஏகபோகத்திற்கு எதிராக தனது கலகக் குரலை எழுப்பிக் கொண்டிருக்கும் சூழலில் அதற்கு தலைமை தாங்க வேண்டிய இந்திய தேசம் அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு பணிகிறது என்பது ஆரோக்கியமான ஒன்றல்ல.
- ஆசிரியர்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|