விளையாட்டென்றால் விளையாட்டா?
முக தாட்சண்யத்துக்கு மாப்பிள்ளை கொண்டால். . .?
- சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
உலகின் உச்சியிலிருந்த இந்திய கிரிக்கெட் அணி. இடையில் என்னென்ன வெல்லாமோ நடந்து, எட்டு பூஜ்யங்களை தொடர்ச்சியாக எடுத்த அகார்கர் போன்ற ‘சாதனையாளர்களை’ அணியில் வைத்துக் கொண்டு திண்டாடி ஒருவர் நின்று, திசை மாறி பரிதவித்து, வீரர்களின் வீடுகளைக் கூட ரசிகர்கள் கல்லெறிந்து தாக்குமளவுக்கு நிலமைகள் முற்றி, டி.வி.எஸ். குழுமம் டெண்டுல்கரையும் ஹீரோ ஹோண்டா கங்குலியையும் தங்கள் விளம்பரங்களிலிருந்து விடை கொடுத்து அனுப்ப, கோக்கும், பெப்சியும் கூட சாமர்த்தியமாக சினிமா நட்சத்திரங்கள் பக்கம் தாவ, அடிபடாதவர் களிடமெல்லாம் அடிபட்டு இந்திய கிரிக்கெட் அணி தன் அடையாளத்தையே தொலைத்து விட்டு நின்றது.
கிரிக்கெட் ஒன்றே பிரதானப்பணி. இதில் சிறப்பாக செயல்படுவதைப் பொறுத்தே வேறு கேளிக்கைகளுக்கும் அனுமதி என்று பயிற்சியாளர் கிரக்செப்பல் முதன் முதலாக சாட்டையை கடுமையாக சொடுக்க, ‘முகதாட்சண்யத்துக்கு மாப்பிள்ளை கொண்டால் குலத்துக்கு ஈனம்’ என்பதை அணித் தேர்வாளர்களும் உணர, கும்பகர்ண உறக்கத்திலிருந்து விடுபட்ட இந்திய அணி வீறுகொண்டு எழ, பல புதிய நட்சத்திரங்கள் தலை எடுக்க, உலகத்தர வரிசையில் தனக்கு அருகதைப்பட்ட இரண்டாவது இடத்துக்கு வந்துவிட்டது. அதிலேயே நிற்பார்களா? நிலைப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இதன் உடனடியான பலன், உலகத்திலேயே மிகப்பெரிய விளம்பரப் பெறுமதி உடைய அணி என்கிற அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளது. இந்த வகையில் இந்திய அணியின் வருமானம் 22 மில்லியன் டாலர்களாக இருக்க இரண்டாவது இடத்தில் 20 மில்லியன் வருவாயுடன் இத்தாலியின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட அணியான யுவண்டஸ் நிற்கிறது. கால்பந்து, கூடைப்பந்து ஆகிய இரண்டு விளையாட்டுகளிலும் உலகப் புகழ்பெற்ற ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் ஐந்தாவதோ ஆறுவதோ இடத்தில் இருக்கிறது.
பிரிட்டனின் உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட அணியான மாஞ்செஸ்டர் யுனைடேட் கூட 15 மில்லியன் டாலர்களுடன் பத்தாவது இடத்தில் உள்ளது. இந்திய கிரிக்கட் அணிக்கு காலணிகளை ‘சப்ளை’ செய்யும் உரிமத்தை ‘ரீபொக்’ என்னும் நிறுவனம் பெற்றிருக்கிறது. இப்போது அந்த உரிமத்தை 200 கோடி ரூபாயை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வாரிக் கொடுத்து ‘நைக்’ எனும் அமெரிக்க நிறுவனம் தட்டிச் சென்று விட்டது. இத்துடன் இந்திய வீரர்கள் பயன்படுத்தும் உடைகளின் உபகரணங்களின் மாதிரிகளை உலகெங்குமுள்ள தனது சங்கிலித் தொடர் சில்லறைக் கடைகளில் விற்பனை செய்யும் உரிமம் பெற்றுள்ளது.
இந்திய அணியின் உடைகளில் மார்பு புறத்திலும் முதுகுபுறத்திலும் தோள் பட்டையிலும் ‘சஹாரா’ என்கிற ஒற்றை ஒரு சொல்லை பதிப்பிப்பதற்காக சஹாரா வர்த்தகக் குழுமம் எழுபது கோடி ரூபாயை கொட்டி கொடுத்துள்ளது. தொலைக்காட்சி நிறுவனங்கள் 1500 கோடி ரூபாயை கொடுக்க நீ நான் என்று போட்டி போடுகின்றன. இத்துடன் நிற்கவில்லை கதை. ஆட்டம் நடக்கும் மைதானங்களின் கண்ணில் படும் அத்தனை இடங்களிலும் விளம்பரத்துக்காக ஒதுக்கியும், உணவு முதல் ஏனைய பண்டங்களை விநியோகிக்கும் உரிமைகளிலும் ஏலம் விட்டும் கணிசமான காசு பார்க்க வாரியம் தீர்மானித்துள்ளது. எனவே பட்டம் பதவிகளுக்காக ஏன் வழக்கு வம்பு என்று அடித்துக் கொண்டு சாகிறார்கள் என்பது புரிந்து விடுகிறது.
முன்பெல்லாம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அணிகள் கொள்ளை லாபம் சம்பாதிக்கும். வசூல் அந்த அளவுக்கு இருக்கும். ஏனைய நாடுகளில் காசு பெயராது குறிப்பாக மேற்கு இந்தியத் தீவுகளில் ஆனால் அந்த நாட்டு அணி பிற நாடுகளுக்குச் செல்வதென்றால் அதிகமாக காசு எதிர்பார்ப்பார்கள். மற்றவர்க்கும் கொட்டிக் கொடுப்பார்கள். ஏனெனில் அந்த அளவுக்கு உலகிலேயே சிறந்த ஆட்டக்காரர் களைக் கொண்ட சிறப்பான அணி அது. நம்நாட்டு அணி மற்ற நாடுகளில் சமாளித்துக் கொள்ளும் மே.இ.தீவுக்கு போவதென்றாலோ அல்லது அந்த நாட்டு அணி இங்கே வருவதென்றாலோ அந்நியச் செலாவணி தேவைப்படும். அதற்காக நமது வாரியம் இந்திய அரசிடம் கையேந்தி நின்ற காலம் ஒன்றிருந்தது. இந்த நிலையை ஒரே ஒரு தனிநபர் மாற்றி அமைத்தார்.
அவர்தான் ஆஸ்த்ரேலியாவின் வர்த்தகச் சூதாடி கெர்ரி பெக்கர். இன்றைய ஊடக உலகின் சாம்ராட் ருபர்ட் மர்டக் போலவே இவரும் தன் தந்தையிடமிருந்து ஓர் ஊடக சாம்ராஜ்யத்தை கை வரப்பெற்றார். அத்துடன் சூதாட்ட விடுதிகள், லேவாதேவி என்று தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி பெரும்கோடிஸ்வரரானார்.
77/78ல் கிரிக்கெட் போட்டி ஆட்டங்களை தன்னுடைய “அலைவரிசை ஒன்பது” என்கிற தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உரிமம் கேட்டார்பல வாரியங்கள் தர முடியாது என்று சண்டித்தனம் செய்தன. அவற்றின் மீது ஒரு போரையே பிரகடனம் செய்தார் பெக்கர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் பேருக்கும் பெருமைக்கும் ஆடிக் கொண்டிருந்த பல கிரிக்கெட் வீரர்களை லட்சங்களை கொட்டிக் கொடுத்து ஒப்பந்தம் செய்தார். அவர்களை வைத்து காட்சிப் போட்டி ஆட்டங்களை நடத்தினார். பகலிரவு ஆட்டங்களை அறிமுகம் செய்தார். வெள்ளை உடைகள் வண்ண உடைகளாக மாறின. வண்ணப் பந்து வெள்ளைப் பந்தாக மாறியது. வாரியங்கள் தங்கள் மைதானங்களை தர மறுத்தன. மாற்று ஏற்பாடுகளைச் செய்தார். மக்கள் நேரில் வருவதை விட தொலைக்காட்சி வருமானமே போதும் என்று நினைத்தார். அதுவும் வந்து குவிந்தது. வருமானம் வாரியங்களின் வாயைப்பிளக்க வைத்தது. கிரிக்கெட் ஒரு பொன்பூக்கும் பணம் காய்ச்சி மரம் என்பதை உணர்ந்தார். பிறகு நடந்தவை சரித்திரம்.
பல வாரியங்கள் தர முடியாது என்று சண்டித்தனம் செய்தன. அவற்றின் மீது ஒரு போரையே பிரகடனம் செய்தார் பெக்கர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் பேருக்கும் பெருமைக்கும் ஆடிக் கொண்டிருந்த பல கிரிக்கெட் வீரர்களை லட்சங்களை கொட்டிக் கொடுத்து ஒப்பந்தம் செய்தார். அவர்களை வைத்து காட்சிப் போட்டி ஆட்டங்களை நடத்தினார். பகலிரவு ஆட்டங்களை அறிமுகம் செய்தார். வெள்ளை உடைகள் வண்ண உடைகளாக மாறின. வண்ணப் பந்து வெள்ளைப் பந்தாக மாறியது. வாரியங்கள் தங்கள் மைதானங்களை தர மறுத்தன. மாற்று ஏற்பாடுகளைச் செய்தார். மக்கள் நேரில் வருவதை விட தொலைக்காட்சி வருமானமே போதும் என்று நினைத்தார். அதுவும் வந்து குவிந்தது. வருமானம் வாரியங்களின் வாயைப்பிளக்க வைத்தது. கிரிக்கெட் ஒரு பொன்பூக்கும் பணம் காய்ச்சி மரம் என்பதை உணர்ந்தார். பிறகு நடந்தவை சரித்திரம்.
இவர் ஒரு நாள் தன் தொலைக்காட்சியை ஒருவருக்கு ஒரு கணிசமான தொகையைப் பெற்றுக் கொண்டு விற்று, உரிய காலத்தில் அவர் மீதப்பணத்தை செலுத்தாததால் ஒரு பைசாவும் திருப்பித் தராமல் அதை அப்படியே மீண்டும் எடுத்துக் கொண்டார். இந்த ஈவு இரக்கமற்ற குணம்தான் அவருக்கு வர்த்தகச் சூதாடி என்கிற பட்டத்தை பெற்றுத் தந்தது என்றாலும் ஓட்டல்களுக்கு உணவு அருந்தச் செல்லும் போதும், சூதாடச் செல்லும் போதும் அங்குள்ள ஊழியர்களுக்கு ‘டிப்ஸ்’ என்னும் பெயரில் பணத்தை வாரி வழங்கும் ‘தாராள பிரபுவும்’ இவர்தான். தனி விமானம் வைத்திருந்தார். அதன் விமானிதான் இவரது சிறுநீரகம் பழுதடைந்தபோது ஒன்றை தானமாக வழங்கினார். பிறகு இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். இவருக்கும் இதயம் உண்டென்பது அப்போதுதான் விளங்கியது. ஆஸ்த்ரேலியர்களுக்கு 66 என்பது ஒரு பெரிய வயதல்ல. ஆனாலும் தனது அந்திம காலத்தில் நோயால் அவதிப்பட்டு அவர் தூக்கத்திலேயே அமைதியாக இறந்து விட்டதாக அவரது குடும்பம் ஒரு செய்திக் குறிப்பு மூலம் அறிவித்தது. கெர்ரி பெக்கர் நல்லவரோ கெட்டவரோ அவர் ஒரு ‘சகாப்த புருஷர்’ என்பதில் சந்தேகமில்லை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|