Keetru
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் தகவல் களம் சிரிப்'பூ'
Font problem?
Keetru Puthiya Kaatru Article
Puthiya Kaatru
டிசம்பர் 2006
மு. மேத்தாவின் கவிப்பார்வை
பேரா. இரா.மோகன்

தீபம்’ இதழில் வெளிவந்த ‘தேசப் பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி’ என்னும் கவிதையின் வாயிலாகப் புதுக் கவிதை உலகில் காலடி எடுத்து வைத்தவர் மு.மேத்தா. அவருக்கு அடையாளத்தை தேடித் தந்த கவிதைத் தொகுப்பு ‘கண்ணீர்ப் பூக்கள்’. அதன் முதற்பதிப்பு 1974-ஆம் ஆண்டில் வெளிவந்தது. அதன் இருபத்தைந்தாவது பதிப்பு ‘குமரன் பதிப்பக’த்தின் சார்பில் 2004-ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது. தன்னிரக்கம் ததும்பி நிற்கும் வண்ணம் காதல் கவிதைகளைப் பாடுவது மேத்தாவின் தனித்தன்மை. ‘அரளிப் பூ அழுகிறது’ என்னும் கவிதையின் வாயிலாக முதிர்கன்னியரின் அவலத்தை முதன்முதலில் உருக்கமான மொழியில் வெளிப்படுத்தியவரும் மேத்தாவே ஆவார். அவரது ‘முதல் தேதி’ என்னும் கவிதை நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கையைப் பற்றிய அருமையான படப்பிடிப்பு; அற்புதமான அலசல்.

‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள், இரண்டு பேரையும் அடித்து நொறுக்குவதற்கு அப்பன்காரனும் நோக்கினான்’ என இன்றைய பட்டி மன்றங்களில் பெயர் சுட்டாமல் சொல்லப்படும் நகைச்சுவை வரிகளுக்கு சொந்தக்காரர் மேத்தா தான்! ‘இலக்கணச் செங்கோல், யாப்புச் சிம்மாசனம், எதுகைப் பல்லக்கு, மோனைத்தேர், தனி மொழிச் சேனை, பண்டித பவனி இவை எதுவும் இல்லாத கருத்துக்கள் தம்மைத் தாமே ஆளக் கற்றுக் கொண்ட புதிய மக்களாட்சி முறை’ எனப் புதுக்கவிதைக்கு இலக்கணம் வகுத்துத் தந்த பெருமையும் மேத்தாவுக்கு உண்டு. ‘கண்ணீர்ப் பூக்கள்’ தொடங்கி மேத்தா இதுவரை 18 கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். ‘ஆகாயத்துக்கு அடுத்த வீடு’ என்பது 2004-ஆம் ஆண்டில் வெளிவந்த அவரது கவிதைத் தொகுதி ஆகும். இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள் வெளிப்படுத்தும் மேத்தாவின் படைப்பாற்றலும் ஆளுமைத் திறனும் குறித்துக் காண்போம்.

கலில் ஜிப்ரானில் இருந்து மாக்ஸிம் கார்க்கி வரை தாய்மைக்குப் புகழாரம் சூட்டியுள்ள படைப்பாளிகள் உலகளாவிய நிலையில் பலர் ஆவர். திரைப்பாடல் உலகிலும் காலங்காலமாகத் தாய்ப்பாசத்தின் அருமையும் பெருமையும் பேசப்பட்டு வந்துள்ளன. நாட்டு பற்றற்று உலக வாழ்வை விட்டுத் துறந்த பட்டினத்தாரையும் ஆதி சங்கரரையும் கூடத் தாய்ப்பாசம் விட்டு வைக்கவில்லை. மு.மேத்தாவும் தம் பங்கிற்கு இத்தொகுப்பில் ‘தாய்’ என்னும் தலைப்பில் ஓர் அற்புதமான கவிதையைப் பாடியுள்ளார். புகைவண்டியில் பயணம் செய்யும் ஒரு மனிதன் தன் பெட்டியை மேலே வைக்கிறான்; சிறிய பெட்டியைப் புகை வண்டியின் இருக்கைக்குக் கீழே இழுத்துத் தள்ளுகிறான்; தோள்பையைக் கம்பியில் தொங்க விடுகிறான்; கனமாய் இருக்கிறது என்று கைப்பையைக் கழற்றுகிறான்; கையில் பிடித்திருந்த பத்திரிகையைக் கூடப் பக்கத்தில் வைக்கிறான்; கடைசியில் ஒரு வழியாக நெட்டி முறித்து நிமிர்கிறான்.

அப்போது எதிரே கண்ட காட்சி அவனுடைய உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றது. அக்காட்சியின் மாட்சியைக் குறித்துக் கவிஞரின் மொழியிலேயே காண்பது நலமாக இருக்கும். தாயன்பின் தனிப்பெரும் பண்பினைப் புலப்படுத்தும் கவிஞரின் வரிகள் இதோ:

எதிரே
இடது தோளிலும்
வலது தோளிலும்
இடுப்பிலும்
மாற்றி மாற்றி
வைத்ததன்றி
தன் குழந்தையைக்
கீழே
இறக்கி வைக்காத
தாயைப் பார்த்துத்
தலை குனிந்தான்!” (ப.74)

‘பெற்றெடுத்த குழந்தை தாய்க்குப் பாரமா?’ என்பதைக் கவிஞர் இக்கவிதையில் புலப்படுத்தி இருக்கும் பாங்கு தனித்தன்மை வாய்ந்தது.

நாட்டு நடப்பையும் சமூக அவலத்தையும் கூர்மையான மொழியில் விமர்சனம் செய்யும் கவிதைகள் இத்தொகுப்பில் நிறையவே காணப்படுகின்றன. பதச் சோறாக, ‘சுவரொட்டித் தலைவர்கள்’ என்ற கவிதையை இங்கே காணலாம். இன்று நாட்டில் அரசியல், ஆன்மீகம், சாதிச் சங்கம் முதலான துறைதோறும் ஏராளமான தலைவர்கள் தினமும் எழுத்தாய் படமாய் சுவரில் முளைக்கிறார்கள்; ஆளே இல்லாத் தலைவர் ஆயினும் அலைகடலாய்த் திரண்டு வருமாறு மக்களை அழைக்கிறார்கள். இவர்களுக்கு அங்கதச் சுவையோடு கவிஞர் சூட்டி இருக்கும் சிறப்புப் பெயரே ‘சுவரொட்டித் தலைவர்கள்’ என்பது.

“சுவரொட்டித் தலைவர்கள்
நாங்கள்
சகிப்பதன் காரணம்
ஒட்டுவோர் எழுதுவோர்
ஒருசிலர் பிழைக்கிறார். . .” (ப.88)

என்னும் கவிதையின் முடிப்பு வரிகள் முத்தாய்ப்பானவை.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மூன்றோடு நான்காவதாகச் சேர்க்கத் தக்கது ‘சினிமா ஆசை’. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள், தமிழனுக்குச் சினிமா மோகமோ வாழ்நாள் எல்லாம்!
இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் இரண்டே இரண்டு சாதிகள் தான்! ஒன்று, வீட்டில் இருந்து சினிமா பார்க்கத் திரையரங்கிற்குச் செல்லும் சாதி; மற்றொன்று, திரையரங்கில் இருந்து சினிமா பார்த்து விட்டு வீட்டிற்குத் திரும்பும் சாதி. தமிழனின் சினிமா மோகத்தைச் சாடும் விதத்தில் மேத்தா படைத்துள்ள கவிதை ‘சிறுகுறிப்பு வரைக: நெய்வேலி - டிசம்பர் 2003’ என்பது.

அக்கவிதை வருமாறு;
“தண்ணீர் வேண்டி
பிரமாண்டமான
பேரணி. . .

நடிகர்களைக் காணக்
காத்துக் கிடந்த
கூட்டம்
கவலைப்பட்டது. . .

மழை வந்து
கெடுத்து விடுமோ
என்று” (ப.32)

தண்ணீர் வேண்டி நடத்தப்படும் பிரமாண்டமான பேரணியில் கலந்து கொண்டிருக்கும் கூட்டத்தினர் கவலைப்படுவது எது குறித்து என்பதைக் கவிஞர் இங்கே நயமாகச் சாடியுள்ளார்.

‘மதிப்பீடு’ என்னும் தலைப்பில் கவிஞர் படைத்திருக்கும் சிறுகவிதை காரமும் சாரமும் மிக்கது. அக் கவிதையில் கவிஞர் சுட்டிக்காட்டி இருக்கும் அனுபவம் தனியொரு படைப்பாளிக்கு மட்டும் உரியதன்று; பெரும்பாலும் விருதுகளை வழங்குவதில் தமிழ்நாட்டில் அடிக்கடி அரங்கேறி வரும் சாபக்கேடு தான் அது.

“எழுதிக் கொண்டிருந்தான்
விமர்சனங்கள் வந்தன. . .
எழுதாமல் இருந்தான்
விருதுகள் வந்தன!

கால் நடைக்குத்
தெரியுமா
கவிதை நடை?” (ப.91)

முத்தாய்ப்பாகக் கவிதையின் முடிவில் வெளிப்பட்டிருக்கும் கவிஞரின் சத்திய ஆவேசம் நியாயமானது; கடுமையான அங்கதக் குறிப்பைத் தன்னகத்தே கொண்டது.

கும்பகோணம் என்றதும் நம்மில் பலருக்கு ‘மகாமகம்’ நினைவுக்கு வரும்; கவிஞர் மேத்தாவுக்கோ கொழுந்து விட்ட நெருப்பில் சிக்குண்டு பள்ளிக் குழந்தைகள் இறந்து போன கொடுமை நினைவுக்கு வந்து வாட்டுகின்றது. ‘கும்பகோணத்தில் மகாவதம்’ என்ற தலைப்பில் அக் கொடுமையைக் குறித்து கவிஞர் எழுதியுள்ள கவிதையின் கடைசி வரிகள் இவை:

“விதியின்
விளையாட்டு மைதானம்
விசித்திரமானது. . .

தமிழ்நாட்டில்
தண்ணீரை
ஒளித்து வைத்து விட்டு
வெறி பிடித்த நெருப்பை
விளையாடச் சொல்கிறது”. (ப.75)

‘கும்பகோணத்தில் மகாவதம்’-பயில்வார் நெஞ்சை நெகிழச் செய்யும் தலைப்பு!

தன்னிரக்கம் நனி சொட்டச் சொட்டக் காதல் கவிதைகள் பாடு வதில் மேத்தாவுக்கு நிகர் மேத்தாவே ஆவார். ‘குற்றப் பத்திரிகை’, ‘ஆகாயத்துக்கு அடுத்த வீடு’, ‘விடை பெறும் வேளை’, ‘கன்னி மாடம்’, ‘இதயத்தின் தொலைபேசி’ ஆகிய கவிதைகள் இவ்வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை, காட்டாக, ‘குற்றப் பத்திரிகை’ என்னும் கவிதையில் இருந்து கவிஞரின் கை வண்ணம் பளிச்சிடும் சில வரிகள் இதோ:

“கம்பன் காவியத்தில்
வாலி வதை
கண்ணே நீ செய்வது
வாலிப வதை!

நியாய விலைக் கடையில்
நிற்பது போல்
நிற்க வைத்தாய்
என் ஆசைகளை. . .” (பக்.8-9)

வாலி வதை - வாலிப வதை: நல்ல சொல் விளையாட்டு! இங்கே ஆசைகளில் அணி வகுப்பிற்குக் கவிஞர் கையாண்டிருக்கும் உவமை வித்தியாசமானது.

‘வித்தகக் கவிஞனின் கை பட்டால் விறகுக் கட்டையும் வீணை யாகும்’ என்பதற்குக் கட்டியம் கூறும் ஒரு சிறுகவிதை இதோ:

“எடைக்குப் போடும் போது தான்
தெரிகிறது. . .
பத்திரிகைகளில்
படிக்காமல் விட்ட
பயனுள்ள பக்கங்கள்!” (ப.13)

‘ஞானம்’ என்பது கவிஞர் இக் கவிதைக்குச் சூட்டி இருக்கும் பொருள் பொதிந்த தலைப்பு ஆகும்.

பேராசிரியர் பாலா கூறுவது போல், “மேத்தா கவிதைகளின் ரகசியம் தான் என்ன? எந்த இலக்கணப் புலவனுக்கும் வேலை வைக்காத எளிமைதான்” (கண்ணீர்ப் பூக்கள், முற்றுப் பெறாத ஒரு முடிவுரை, ப.12). இன்றைய புதுக்கவிஞர்களின் இடையே மேத்தாவுக்கு ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தந்திருப்பதும் இந்த அபூர்வமான எளிமை தான்!




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.


கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.thaagam.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.bank.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP