தலையங்கம்
மறைந்திருக்கும் விலங்கு
நிறுவனர் எஸ். ராஜா ஹாசன்
மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் தடா நீதிமன்றம் தவணை முறையில் தனது தீர்ப்பை அளித்து வருகின்றது. காவல் துறையாலும், குற்றப்புலனாய்வுத் துறையாலும், இவற்றிற்கு இணையாக தொடர்ந்து புனைவு களையும் பொய்களையும் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கும் ஊடகங்களாலும் 13 ஆண்டுகாலம் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு படுத்தப்பட்ட நடிகர் சஞ்சய்தத்தை அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்திருக்கிறது தடா நீதிமன்றம்.
இந்த 13 ஆண்டுகாலம் சிறுபான்மையினரோடு நெருக்கமானவர் என்கிற ஒரே காரணத்திற்காகவே பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்ட சஞ்சய்தத்திடம் ஊடகமோ, வழக்கை ஜோடித்த சி.பி.ஐ.யோ வருத்தம் தெரிவிக்கப் போவதில்லை. இந்திய அதிகார அமைப்பின் விளையாட்டில் இது ஒன்றும் புதிய விஷயமும் அல்ல. பாராளுமன்ற தாக்குதலை ஒட்டி “தீவிரவாதிகளின்” கூட்டுச்சதிக்கு பங்களித்தவர் என்ற பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் காவல் துறையாலும் ஊடகங்களாலும் உடல் மற்றும் மனச்சித்தரவதைகளுக்கு ஆளான டெல்லி பேராசிரியர் கிலானி நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட போதும் யாரும் வருத்தம் தெரிவித்ததில்லை.
‘பாராளுமன்ற கட்டிட தாக்குதல் தொடர்பான எந்த சதிச் செயலிலும் ஈடுபடவில்லை. எந்த “தீவிரவாத” இயக்கத்திலும் அவர் உறுப்பினர் இல்லை. எந்தத் “தீவிரவாத” இயக்கத்தோடும் அவருக்குத் தொடர்பு இல்லை. ஆனாலும் தேசத்தின் மனச்சாட்சியை திருப்திபடுத்த வேண்டும் என்றால் முகமது அப்சல் குருவிற்கு மரண தண்டனை வழங்கியாக வேண்டும்’ என்று தலைமை நீதிமன்றம் தனது தீர்ப்பில் அறிவித்தது.
தேசத்தின் மனசாட்சியை திருப்தி படுத்துவதற்காக இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான சிறுபான்மை மக்கள் அநியாயமாக சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். தண்டிக்கப்பட்டுள்ளனர். எழுத்தாளர் அருந்ததிராய் சொல்வதைப் போல ‘நம் நீதித்துறையின் அடிபாதாளத்தில் எங்கோ குறுக்குமறுக்கான திரும்ப முடியாத பாதைகளுக்கு அப்பால் வெட்கத்துடன் ஒரு விலங்கு மறைந்துள்ளது. அது தன்னை மிக அரிதாகவே வெளிக்காட்டும். தலைமை வழக்கறிஞர்களின் மொத்தக் குழுவும் நயந்து பேசித்தான் அதனை வெளிக்கொண்டு வர முடியும். இதனை இதழியல் மொழியில் வலிமை மிக்க காரியம் (ஹெர்குலியம்) என்பார்கள். முகமது அப்சல் பக்கத்தில் ஹெர்குலஸ் இல்லை’.
நம் சமூக அமைப்பில் இரண்டு வித சட்டங்கள் இருக்கின்றன. ஒன்று வலிமை மிக்கவர்களுக்கானது. மற்றொன்று ஒடுக்கப்படுவோர்களுக்காக ஆனது. வலிமை மிக்கவர்கள் இந்த சட்டங்களைக் கொண்டே தங்கள் பீடங்களை தக்கவைத்துக் கொள்கிறார்கள். உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். பால்தாக்கரே, நரேந்திமோடி, அத்வானி என இந்த வரிசை நீண்டு கொண்டே போகிறது. கிலானி, அப்சல், சஞ்சய்தத் என மற்றொரு சட்டம் தொழிற்பட்டு வருகிறது. காலம் காலமாக ஒடுக்குபவர்கள் ஒடுக்குமுறைக்கு ஆளானவர்களை நோக்கி ஏவி வரும் சட்டம் இது. இப்போது இது சிறுபான்மையினரை நோக்கிப் பாய்கிறது.
சமீபத்தில் தமிழக அரசு மாவட்டம் தோறும் சிறுபான்மையினர் நிலை குறித்து ஆராய ஆட்சித் தலைவர் தலைமையில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் சிறுபான்மையினர் அரசிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்? என்பதை தெரிவிக்கச் சொன்னார்கள். முஸ்லிம்களின் எதிர்ப்பார்ப்பாக மதுரையில் இருந்து சொல்லப்பட்ட பரிந்துரைகளில், ‘தலித் மக்களுக்கு வன்கொடுமை தடைச் சட்டம் இருப்பதைப் போல, குடும்பப் பெண்களுக்கு குடும்ப வன்முறை தடைச் சட்டம் இருப்பதைப் போல, அதிகார அமைப்புகளாலும் பிற வகுப்புவாத சக்திகளாலும் அச்சுறுத்தலுக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகும் முஸ்லிம்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்களுக்கு முஸ்லிம்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது’.
இந்த தேசத்தின் உயர்ந்த அதிகார அமைப்புகளும், அந்த அதிகார அமைப்பிற்குள் ஊடுருவி நிற்கும் வகுப்புவாத சக்திகளும் சிறுபான்மையினரை நடத்துகின்ற நிலையைப் பார்த்தால் இத்தகைய ஒரு சட்டத்தை நோக்கி முஸ்லிம்கள் நகருவதை தவிர்க்க முடியாது என்றே தோன்றுகிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|