கொந்தளிப்பின் இசை
தேவேந்திர பூபதி
அகாலத்தில் இசைத்துக் கொண்டிருக்கும்
உடைந்த நிலவின் நகக் கண்களில் இருந்து
உனக்கான ஒரு பாடலை உருவாக்குகிறேன்
காலத்தின் மிக முந்தையதான
ஒரு தலைமுறையின் பிரிவாற்றாமைப் பாடலாய்
காதல் நிறைந்தவனின் பின்மாலைக் கழிவிரக்கமாய்
மரணங்களால் விரைவுபடுத்தப்பட்டும்
முழுநிலவையும் தனக்குள் தக்கவைக்க
தத்தளிக்கும் அப்பாடலில்
எனது நிலக்காட்சி தொலைவில் தெரியும்
சிறுசிறு வீடுகளின் விளக்கொளியைப் போல்
துக்கமெழுப்புகிறது
உன் சருமத்தில் ஊர்ந்து திரிந்து
பரவசம் கண்ட என் நகக்கண்கள்
வளர்ந்து பௌர்ணமி நிலவாய்
உன் முற்றத்தில் நிற்கும் போது
அகாலத்தில் கடலலைகள் அப்பாடலை
உனக்கான கொந்தளிப்புடன்
இசைக்கத் துவங்கிவிடும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|