Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
டிசம்பர் 2006
ஆர்கன் பாமுக் - முரண் ஆளுமைகளின் எழுத்தாளன்
ஆர்.அபிலாஷ்

“நம்மால் நம் கடந்த காலத்தைப் பற்றி பேச இயல வேண்டும்... 30,000 கெர்டுகளும், 1.5மில்லியன் அர்மேனியர்களும் இந்த தேசத்தில் கொன்று குவிக்கப்பட்டனர், அதைப் பற்றிப் பேச யாருக்கும் நெஞ்சுரம் இல்லை”. 2006-ஆம் ஆண்டின் நோபல் பரிசை சமீபத்தில் வென்ற துருக்கிய நாவலாசிரியர் ஆர்கன் பாமுக் 2005 பிப்ரவரியில் ஸ்விஸ்ஸர்லாந்து பத்திரிகை ஒன்றில் கூறிய இக்கருத்து துருக்கிய அரசியல் கலாச்சாரத் தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாமுக்கின் குற்றச்சாட்டு அனடோலியாவில் 1915-1917 காலகட்டத்தில் ஒட்டோமான் துருக்கியர்கள் 1.5 மில்லியன் ஆர்மேனியர்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்தனர் என்பதே. இந்த இனப்படுகொலை பெரும்பாலும் துருக்கிய அரசால் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது என்கிறார். இந்த படுகொலை பற்றி பேசினாலே துருக்கிய அரசு பதற்றமடைந்து விடும்.

ஐரோப்பிய யூனியனில் அங்கத்தினராக சர்வதேச அரசியல் தளத்தில் பல்கலாச்சார ஊடாடலை ஏற்றுக் கொள்ளும் தேசமாகவும், அமைதி விரும்பியாகவும் (பாகிஸ்தானைப் போல்) தன்னைக் காட்டிக் கொள்ளும் கட்டாயம் துருக்கிக்கு. 1980 மற்றும் 1990-களில் கெர்டிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான தனது நடவடிக்கை இனப்படுகொலை அல்ல என்றது துருக்கி. மேலும் பாமுக் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்துகிறார் என்று குற்றம் சுமத்தியது. இந்த நடவடிக்கையின் போது இஸ்லாமிய துருக்கியர்கள் பலர் உயிர்விட வேண்டியதாயிற்று என்று மழுப்ப வேறு செய்தது. இத்தகைய நெருக்கடியான சூழலில் உலக அளவில் விமர்சகர்களால் கவனிக்கப்பட்டு வரும் எழுத்தாளரான பாமுக்கிடமிருந்து இத்தகைய குற்றச்சாட்டு வர, குண்டாந்தடியாக அவரை மூன்று வருடங்கள் வரை சிறையில் தள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. “துருக்கியர்களை அவமதித்ததே” அவர் மீதான குற்றச் சாட்டு.

பாமுக்கின் நூல்களும், உருவப்படங்களும் ஊர்வலங்களில் எரிக்கப்பட்டன. போன வருடமே இது போன்ற “குற்றத்திற்காய்” 60 எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் துருக்கியில் தண்டிக்கப்பட்டுள்ளனர். முன்கூட்டியே இதையெல்லாம் எதிர்பார்த்தது போல பாமுக் பேட்டிக்குப் பின் துருக்கியில் இருந்து பறந்து விட்டார். நியூயார்க் பத்திரிகையில் பின்னர் எழுதுகையில், பாமுக் “என் மீது துருக்கி அரசு வழக்கு தொடர்ந்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை. வருடக் கணக்கில் கோர்ட்டுக்கு அலைந்து, சிறையில் கிடந்த பிறகே எழுத்தாளர்களை கவுரவிக்கும் தேசத்திடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும். என் நண்பர்கள் இப்போதுதான் நீ நிஜமான துருக்கிய எழுத்தாளன் என்று சொன்னதன் உள்ளர்த்தம் புரிகிறது” என்றார். இந்த கைது முடிவு ஐரோப்பிய யூனியனிடமிருந்து கடுமையான விமர்சனத்திற்கு துருக்கியை உள்ளாக்கியது.

ஆம்னஸ்டி இண்டர்நேஷனல், பென் எனும் சர்வதேச இலக்கியப் பேரவை போன்றவற்றோடு சேர்ந்து உம்பர்தோ ஈகோ, மார்க்வெஸ், ஜான் அப்டைக், குந்தர் கிராஸ் போன்ற முக்கிய எழுத்தாளர்களும் துருக்கியின் இந்நடவடிக்கையை கண்டித்தனர். பேச்சு சுதந்திரம் இல்லாத துருக்கி நாட்டிற்கு ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர் பதவி வேறு ஒரு கேடா என்றது பிரேசில். சர்வதேச ரீதியிலான கண்டனங்கள் மேலும் குவிய, துருக்கி அரசு பாமுக்கிற்கு எதிரான வழக்கை போன ஜனவரியில் வாபஸ் வாங்கியது. பாமுக்கின் தாய் நாட்டிற்கு எதிரான கலகச் செயல்பாடுகள் அவரது மேற்கத்திய கலாச்சார சார்பு நிலையையே காட்டுகிறது என்கின்றனர் துருக்கிய தேசியவாத விமர்சகர்கள். மேற்கிந்திய நாவலாசிரியர் வி.எஸ். நைப்பால் தன் சொந்த நாட்டை கடுமையாய் விமர்சித்து, சமகால மேற்கிந்திய படைப்பாளிகளால் துரோகிப் பட்டம் வாங்கிக் கட்டிய தோடு, இஸ்லாமியர்களை வேறு இந்தியாவை கெடுத்து குட்டிச் சுவராக்கியதாய் பழி சுமத்தியதும், அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட சம்பவத்தோடு, பாமுக்கிற்கு பரிசு வழங்கப்பட்டதையும் ஒப்பிட்டனர் சில விமர்சகர்கள். சொந்த நாட்டையோ, இஸ்லாமியர்களையோ விமர்சிப்பதுதான் நோபல் பரிசுக்கான தகுதியா என்பது இவர்களின் கேள்வி.

ஒரு எழுத்தாளன் வரலாற்று இருட்டடிப்புக்கெதிராக குரலெழுப்புவது நிச்சயம் பாராட்டத்தக்கது தான். 1998-இல் துருக்கிய அரசு வழங்கிய “தேசிய கலைஞன்” விருதை, ‘இதை ஏற்றுக் கொண்டால் பிறகு நான் முக்கியமாய் கருதுபவர்களின் முகத்தில் எப்படி விழிக்க முடியும்’ என்று காரணம் கூறி பாமுக் நிராகரித்தார். பாமுக்கின் அரசியல், கலாச்சார நிலைப்பாடு வெளியே யிருந்து பார்க்கையில் சற்று சிக்கலானதே. துருக்கியின் சமூக பண்பாட்டு பொருளாதார வளர்ச்சி, அது எவ்வாறு மேற்கத்திய கலாச்சாரத்தின் நேர்மறை அம்சங்களை தனது மரபான வாழ்க்கைக்குள் கிரகித்து வளர்கிறது என்பதைப் பொறுத்தே அமையும் என்கிறார் பாமுக். இவரது இத்தகைய நிலைப்பாடுகள் காரணமாய் இவர் ஐரோப்பிய சார்பாளரோ என்று நாம் எளிதாய் கருதும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் பாமுக்கின் அரசியல் கலாச்சார சமூக கருத்தாக்கங்கள் மேலும் நுட்பமும், விரிவும் கொண்டவை. இவரது சிக்கலான துருக்கிய மனப்பான்மையை புரிந்து கொள்ள, ‘பனி’, ‘வெண்ணிறக் கோட்டை’, ‘என் பெயர் சிவப்பு’ ஆகிய அவரது அரசியல் நாவல்களையும் முக்கிய வாழ்க்கை நிகழ்வுகளையும் ஆராய்வது உதவும்.

பனி நாவல் ஸ்டெண்டல்லின் கீழ்வரும் மேற்கோளோடு துவங்கு கிறது: “ஒரு இலக்கியப் படைப்பில் அரசியல் என்பது கச்சேரியின் போது துப்பாக்கிச் சூடு போன்றது. தவிர்க்க சாத்தியமற்ற ஒரு கொடூரமான சமாச்சாரம். நாம் அசிங்கமான சில விஷயங்களைப் பற்றிப் பேசப் போகிறோம்”. கதாபாத்திரங்களின் எதிர் கருத்தியல்களையும், “அவற்றிற்கு இடையே நிலவும் குழப்பத்தையும்” விவாதிக்கும் நாவல் இது. 9/11-க்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு புனையப்பட்ட “பனி” வடகிழக்கு துருக்கியிலுள்ள கார்ஸில் நடக்கிறது. ராணுவப் புரட்சி ஒன்றில் மாட்டிக் கொள்ளும் கவிஞனின் கதை இது. கடந்த நூற்றாண்டில் மதச்சார்பின்மை மற்றும் மதத்திற்கு இடையே மதில் மேல் பூனையாய் தவித்து வந்த துருக்கியின் நிலையை இந்நாவல் நுட்பமாய் பதிவு செய்கிறது. இவ்விரு நிலைப்பாடுகளுக்கு இடையேதான் “குழப்பத்தையே” பனி அலசுவதாய் தெகார்டியன் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் பாமுக் குறிப்பிட்டு உள்ளார்.

1995-இல் வெளியான பாமுக்கின் வெண்ணிறக் கோட்டை நாவலில் 17-ஆம் நூற்றாண்டை சேர்ந்த லத்தீன் பண்டிதன் ஒருவனை ஒட்டோமான் கடற்கொள்ளையர்கள் பிடித்து மேற்கத்திய உலகைப் பற்றி அறியும் தீவிர ஆர்வம் கொண்ட ஒரு துருக்கியனுக்கு விற்று விடுகின்றனர். இந்நாவல் “ஒரு விதமான தீவிர தனிமனித போராட்டம் மட்டுமல்ல, இரட்டையர்கள் பற்றிய புனைவுமே” என்கிறார் பாமுக். பனியில் இவர் விவாதிக்கும் “குழப்ப நிலையும்”, வெண்ணிறக் கோட்டையின் “இரட்டையர்கள்” கதைக்கருவும் ஒரே தத்துவ சரடில் கோர்க்கப்பட்டவை. 95ரூ துருக்கியர்களும் இரண்டு ஆன்மாக்களை தம்முள் சுமந்து திரிவதாய் கருதுகிறார் பாமுக். மதச்சார்பின்மையாளர்கள், குடியரசுவாதிகள், முற்போக்காளர்கள் என்று ஒரு புறமும், தேசியவாதிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், அரசியல்வாதிகள் என்று மறுபுறமும் இவர்கள் இரு விதமான முரண் அடையாளங்களை சுமக்கிறார்கள் என்பதை பாமுக் இவ்வாறு மறைமுகமாய் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு துருக்கியனும் இவ்வாறு தன்னுள்ளே முரண்பட்டு போராடுகிறான். இந்த முரண் ஆளுமைகளை சுமக்கும் சராசரி துருக்கியனே இரட்டையனாய் பாமுக்கின் எழுத்தில் பாத்திரமாகிறான். இரட்டை ஆளுமை மனிதர்களின் வாழ்வே துருக்கியின் மிகச் சரியான இலக்கியக் கரு என்கிறார் பாமுக்.

துருக்கியின் ஐரோப்பிய யூனியன் நுழைவுக்கு தீவிர ஆதரவு தெரிவிக்கும் பாமுக் தன் தேசம் நவீனப்படுவதற்கும், ஐரோப்பிய வளர்ச்சியில் பங்கேற்பதற்குமான தடைகள் தன் நாட்டிற்கு வெளியிலிருந்தும், உள்ளிருந்தும் உருவாக்கப்படுகின்றன என்கிறார். ஐரோப்பிய பழமைவாதிகள் துருக்கி ஐரோப்பாவுடன் உறவு கொள்ளும் தகுதி உடையதல்ல என்று ஒருபுறம் இழிவுபடுத்த, துருக்கியின் முற்போக்கு அதிகார வர்க்கத்தினர் தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள தங்கள் நாடு மேற்கத்திய நாடுகளால் இழிவுபடுத்தப்படுவதான போலித் தோற்றத்தை கட்டுவிக்கின்றனர். நாட்டில் நிகழும் திடுதிப்பான நவீன மாற்றங்களால் சற்றே பாதுகாப்பற்று போனதாய் வருந்தும் துருக்கியர்கள் இப்போலிப் பிரச்சாரத்தால் மேலும் தடுமாறுகின்றனர்.

துருக்கியை மீண்டும் பழமையை நோக்கித் தள்ளி அதிகாரத்தை தக்க வைப்பதே இந்த அதிகார வெறியர்களின் நோக்கம் என்கிறார் பாமுக். இத்தகைய அரசியல் பித்தலாட்டங்களால் “பிளவு மனநிலைக்கு” உட்படும் துருக்கியர்களின் குழப்பத்தையே இவரது நாவல்கள் பேசுகின்றன. எந்த நாடும் அந்நிய கலாச்சார, இலக்கிய, அரசியல் சிந்தனைகளை எதிர்கொள்கையில் இத்தகைய ஆன்மீகத் தடுமாற்றம் ஏற்படுவது இயல்பே. இந்த தடுமாற்றத்திலிருந்தும், குழப்பத்திலிருந்தும் மட்டுமே தெளிவு பிறக்கும், பழமையை நோக்கி பின்னோடுவதன் மூலமல்ல என்று அவர் வலியுறுத்துகிறார்.

2003-இல் வெளியான இவரது மற்றொரு நாவலான என் பெயர் சிவப்பு. ஒரு நாடு அயல் கலாச்சாரத்தின் வழமைகளை முழுக்க தவிர்க்கவோ, பின்பற்றவோ முடியாத இரண்டக நிலையைப் பேசுகிறது. கொலை ஒன்றின் மர்ம முடிச்சுகளை அவிழ்த்து விரியும் இந்த திகில் நாவல் இஸ்லாமிய நுணுக்க ஓவியர்களுக்கும் மேற்கத்திய சிந்தனாவாத மரபின் பால் மயக்கமுற்ற கலைஞர்களுக்கும் இடையேயான போராட்டத்தை சித்தரித்து இஸ்லாமுக்கும் கிறித்துவத்திற்கும் இடையேயான மோதலை விவரிக்கிறது.

பாமுக் தற்போது எழுதி வரும் வெகுளித்தனத்தின் அருங்காட்சியகம் எனும் நாவலில் கீழ் தரப்பட்டு உள்ள வசனம் வருகிறது: “ஏழைகள் தங்கள் வறுமையை ஒரு பாவமென்று கருதுமளவு அப்பாவிகளாய் உள்ளனர்; செல்வந்தரானவுடன் தங்களின் தெய்வக் குற்றமும் மன்னிக்கப்பட்டுவிடும் என்று நம்புகிறார்கள்”. துருக்கியின் அரசியல் பிற்போக்குவாதமும், மக்கள் வாழ்வை சிதிலமடையச் செய்யும் வறுமையும் மேற்கை சந்திக்கையில் ஏற்படுத்தும் தலை குனிவை தவிர்ப்பதற்கான முனைப்பு, பழமைவாதத்தை நோக்கி செலுத்தும் அபாயத்தை இவ்வசனத்தில் பாமுக் குறிப்புணர்த்துகிறார். வறுமையை பாவமெனக் கருதுகையில் தாழ்வுணர்வு ஏற்பட்டு நிகழும் ஆன்மீகச் சிதைவு, காலாவதியான சிந்தனைகளை போலி கௌரவத்தில் சுமக்கையிலும் நிகழலாம். ஐரோப்பிய இலக்கிய மரபிலுள்ள பயிற்சியே தன் படைப்பெழுச்சிக்கான ஊற்றுக்கண் என்று பாமுக் ஒத்துக் கொள்கிறார்.

இவரது ஐரோப்பிய சாயலுடைய எழுத்து பாணியை கண்டிக்கும் விமர்சகர்களுக்கு, துருக்கியின் எதார்த்தவாத இலக்கிய மரபே எர்ஸ்கின் கால்டு வெல், கார்க்கி மற்றும் ஸ்டெய்ன் பெக் போன்ற மேற்கத்திய படைப்பாளிகளின் நூல்களை முன்னோடியாய் கொண்டு உருவானது தானே என்று பதிலளிக்கிறார். தனது புது வாழ்வு நாவலில் தாந்தேயின் பாதிப்பையும், கறுப்பு புத்தகத்தில் ஜேம்ஸ் ஜாய்ஸின் யுலைஸஸ் நாவலின் பாதிப்பையும் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டுள்ளார். மேற்கும் கிழக்கும் நேர்த்தியாய் இணைவதன் நேர்மறை விளைவுகளையே தன் படைப்பியல் வெற்றிகள் குறிப்புணர்த் துவதாய் பாமுக் நம்புகிறார். மேற்கின் வளத்தை உறிஞ்சி, இஸ்தான்புல் தன்னை உறுதியாய் நிலைநாட்ட முடியும் என்ற பாமுக் நம்புகிறார்.

பாமுக்கின் புனைவுகளில் இடையறாது விவாதிக்கப்படும் சுயமுரண் பாட்டு ஆன்மீக நிலைப்பாட்டின் அடிவேரை தேடிச் சென்றால்அது அவருடைய பால்ய கால நினைவுகளில் சென்று முடிகிறது. “மிகச்சிறு வயதிலேயே எனது இரட்டையனான மற்றொரு பாமுக் இஸ்தான்புல்லின் ஏதாவதொரு தெருவில் எங்களுடையது போன்றதொரு வீட்டில் வாழ்ந்து வருவதாய் நான் சந்தேகித்தேன்”.

பெற்றோரிடையே அடிக்கடி நிகழும் சண்டை சச்சரவுகள் பொறுக்க முடியாமல் போகும் போது தானொரு “மறைந்து போகும் விளையாட்டை” ஆடியதாய் சொல்கிறார். அதாவது தன் அம்மாவின் அலங்கார மேஜையிலுள்ள முப்பரிமாண கண்ணாடியை அது பற்பல “பாமுக்குகளை” முடிவற்று பிரதிபலிக்கத் தக்க விதத்தில் திருப்பி வைப்பார். இம்பிம்பங்களின் பெருக்கத்தில் தன் தற்காலிக இருப்பை மறைந்திடச் செய்வார். இந்த தப்பித்து ஓடும் மனதின் ஏமாற்று வித்தை, வளர்ந்த பின் இவரது சுய அனுபவங்களை பல்வேறு தளங்களில் பிரதிபலித்து பெருக்கி, அவற்றின் இடையறாத முரண் சந்திப்புகளில் மனவிகாசம் அடையும் படைப்பியல் தேடலாக மாறியுள்ளது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com