தலையங்கம்
இந்துத்துவ ‘வெள்ளாடுகள்’
ஆசிரியர்
ஆர்.எஸ்.எஸ். இந்திய அரசியலுக்கு அனுப்பி வைத்த அதன் வெகுசன அமைப்பான பி.ஜே.பி. பதவி வெறி, சாதி வெறி, ஊழல் என பல்வேறு நெருக்கடிகளோடு ஆட்சியும் பறிபோய் முகம் சிதைந்து போய் கோரமாய் காட்சி அளிக்கிறது. மீண்டும் மீண்டும் அந்தக் கட்சி தன்னை தகவமைத்துக் கொள்ள முடியாமல் திணறுகிறது. இந்து அடிப்படை வாதத்தை வளர்த்தெடுக்க முயல்வதற்குள் அடுத்தடுத்து அதன் மீது உள்ளிருந்தே கற்கள் வீசப்படுகின்றன.
பிரமோத் மகாஜனின் சாவின் ரகசிய முடிச்சுக்கள் பி.ஜே.பிக் கழுத்தை ஒரு சுற்று சுற்றுகிறதென்றால் அக்கட்சியினுடைய மேல்மட்டத் தலைவரின் வீடியோ பதிவு செய்யப்பட்ட பெண் தொடர்பு அதை நிர்வாணப் படுத்தியுள்ளது. பிரமோத் மகாஜனின் மகனுடைய போதைத் தொடர்பு அதன் ஒழுக்கங்களின் மீது கேள்வி எழுப்புகிறது. தமிழர்களை கொன்று பழகிய பால்தாக்கரேயின் பிள்ளைகள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கின்றனர். ரவுடித் தனம், அரசியல் விபச்சாரம், போதை மருந்து கடத்தல், பாலியல் வரம்பு மீறல், இவைதான் இன்றைய பி.ஜே.பியின் முகமாக வெளியே தெரிகிறது.
இந்த நெருக்கடியில் இருந்து வெளிவரத் துடிக்கின்ற இந்துத்துவத்திற்கு பால்தாக்கரேயின் மனைவி சிலை அவமதிப்பு என்ற சம்பவம் மீண்டும் கலவரத்திற்கான போதையை ஊட்டியது. கலவரக்காரர்கள் மீது சட்டம் பாயும் என மகாராஷ்டிர அரசு கடுமையாக அறிவித்த அடுத்த நாள் மும்பையில் குண்டுகள் வெடிக்கின்றன. மீண்டும் நம்முடைய ஊடகங்கள் முஸ்லிம் தீவிரவாதம் லக்ஷர்இ - தொய்பா, சிமி என்ற சொல்லாடல்களை பரப்பத் தொடங்கி விட்டன. எங்காவது ஏதாவது நடந்தால் அதை முஸ்லிம் தீவிரவாதமாக காட்டும் நம் ஊடக மூளைகள் என்று தான் சலவை செய்யப்படுமோ? தெரியவில்லை.
மும்பை பயங்கரவாதம் விஸ்வ இந்து பரிசத்தால் நிகழ்த்தப்பட்டதற்கான தடயங்கள் தென்பட்ட போது இந்துத்துவத்தின் முகம் தோல்வியை சந்திக்க தொடங்குகிறது. இந்தச் சூழலில் மத்தியில் ஆண்டு கொண்டிருக்கின்ற காங்கிரஸ் தலைமையிலான அரசு பாதுகாப்புத் துறையில் சிறுபான்மையினரின் பங்கேற்பை கணக்கெடுத்து அதை சரி செய்ய முயற்சிகளை மேற்கொள்ள தொடங்கியிருக்கின்றது. இதைக் காலி செய்ய ராணுவத்திற்குள் பணி செய்யும் முஸ்லிம்கள் அல்கொய்தாவுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்ற புது பொய்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
நரசிம்மராவ் ஆட்சியில் பாதுகாப்பு ரகசியங்களை இரு கருப்பு ஆடு கடத்தி வெளியிட்டதாக இந்துத்துவ ‘வெள்ளாடு’ ஜஸ்வந்த்சிங் ஒரு புதிய வெடிகுண்டை வீசிப்பார்த்தார். நரசிம்மராவ் ஆட்சி போய் ஒரு சுற்று வந்த வாஜ்பாய் தலைமையில் இவர் அமைச்சராக இருந்த போது ஏன் இதை கூறவில்லை? என்ற மன்மோகன்சிங்கின் கேள்விக்கு ஜஸ்வந்த்சிங்கிடமிருந்து எந்த பதிலும் இல்லை. உளவாளி யார் என்ற கேள்விக்கு ஜஸ்வந்திடம் பதில் இல்லை. பாராளுமன்றத்திலும், ஊடகங்களிலும் வெற்று பரபரப்பையும், விளம்பரத்தையும் உருவாக்க தலைவர்களே நாடகமாடுகிறார்கள்.
அகில இந்திய சூழலுக்கு கொஞ்சமும் பிசகாமல் இருக்கிறது தமிழக சூழல். தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் கலைஞர் தலைமையிலான அரசு கோவை சிறைக் கைதிகள் பிரச்சனையில் ஒரு ஜனநாயக ரீதியான அணுகுமுறையை மேற்கொள்ள முயற்சிக்கும் போது கோவையில் மீண்டும் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற சொல்லாடல் திட்டமிட்டு ஊடகங்களாலும், இதர நாக்குகளாலும் பரப்பப்படுகிறது.
இந்தியச் சூழலில் ஆர்.எஸ்.எஸ். வழியாக இந்துத்துவம் பொய், படுகொலை வாயிலாக தன்னை முன்னுக்கு கொண்டு வர முயற்சிக்கிறது. தமிழகச் சூழலிலும் இந்துத்துவம் ஊடகங்கள், காவல்துறை வாயிலாக இந்த முயற்சியை மேற்கொள்கிறது. இதனை முறியடிப்பது மதச் சார்பற்றவர்களின் முக்கியமான பணியாக இருக்கிறது.
-எஸ். ராஜா ஹஸன், ஆசிரியர்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|