கட்டுரை
வேதனையின் வெளிப்பாடே ஓவியம்
கூடல் கண்ணன்
“நிறங்களின் சேர்க்கை அழகான ஓவியமாகும் போது மனங்களின் சேர்க்கையில் அழகான இந்தியாவை ஏன் உருவாக்க முடியாது” என்ற உன்னத அங்கலாய்ப்போடு ஆரம்பித்தார் கூடல் கண்ணன்.
ஓவியம், நடனம், நடிப்பு, இயக்கம், பலகுரல், பாடுதல், சிற்பம், கவிதை... இப்படிப் பல திறமைகளைக் கொண்ட விந்தைக் கலைஞர். மதுரை தனியார் மருத்துவமனையில் நரம்பு அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் புதிய காற்றுக்காகச் சந்தித்தோம். அந்த நேரத்திலும் அவரைச் சுற்றி எண்ணற்ற படங்கள்... சாக்பீஸ் சிற்பங்கள்... குவிந்து கிடந்தன. அவற்றுள் எல்லாமே சோகம் அப்பிய வெளிப்பாடுகள் அழகுணர்ச்சி கலந்து வழங்கப்பட்டிருந்தன. வலதுகால் ஏற்கனவே விபத்தில் சிதைந்துவிட, கால் முழுவதும் பிளேட்டுகள். இப்போது இடது காலில் நரம்புகள் முடிச்சு விழுந்து சிக்கல் ஏற்படுத்த, அதிலும் அறுவைச் சிகிச்சை, என்றாலும் தளராமல் தன்முனைப் போடும், தன்னம்பிக்கையோடும் கலை வெளிப்பாடுகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் - மருத்துவ மனையிலும்.
ஓவியமே இவரது பிரதான வடிகால். தூரிகையை எடுத்து விட்டால் போதும்... சில நிமிடங்களில் அசாதாரணமான ஓவியங்கள் நம் கண்களைக் குளிர்விக்கின்றன. மனசைக் கனக்கச் செய்கின்றன. சோடா பாட்டில் மூடி, தீப்பெட்டி, கண்ணாடி டம்ளர், உப்புத்தாள் (எமரி பேப்பர்) எனப் பலவற்றிலும் ஓவியம் வரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல ஓவியங்கள் புகைப்படமோ என்ற ஐயத்தை ஏற்படுத்தும் விதமாகத் தத்ரூபமாக இருக்கின்றன. அழகானாலும் அவலமானாலும் அனைத்திலும் ஒரு சோக ரேகை ஓடாமலில்லை. ‘ஏன்’ என்று கேட்டதற்கு...
‘வாழ்வியல் அவலங்களைச் சுட்டிக் காட்டுபவனே படைப்பாளி. இங்கு நடக்கிறதையெல்லாம் ஒரு படைப்பாளியாகப் பார்க்கும் போது, வெறும் அழகை மட்டுமே ஓவியமாக்க என் படைப்பு மனம் ஒப்பவில்லை’ என்கிறார் தீர்க்கமாய்.
சுமார் 2000 குரல்களில் மிமிக்ரி செய்யும் இவரது தற்போதைய புதிய முயற்சி ‘டெலிபோன் குரல்கள்’ என்கிறார். இதுவரை இதை யாரும் செய்ததே இல்லையாம். மிமிக்ரிக்காக வாயைத் திறந்தால் ஜெயலலிதா, சாலமன் பாப்பையா எனப் பலரும் நம் முன்னே வருகிறார்கள்.
சாக்பீஸில் பல சிற்பங்களை வெகு நேர்த்தியாய்ச் செதுக்கி வைத்துள்ளார். நடனம், நடிப்பு, இயக்கம் என்றும் தனது கலைத் தேடலைப் பரப்புகிறார். பாடல் பாடுவதிலும் வல்லவரான இவர் கவிதையும் அழகுற எழுதுகிறார். கடிதம் கூடத் தலை கீழாகத்தான் எழுதுவாராம். இத்தனைக் கலையும் கை வசப்படும் இவருக்கு ஒரு விந்தைப் பொழுது போக்கும் உள்ளது. ஆம்... மறந்தும் இவர் கைகளில் சைக்கிளைக் கொடுத்துவிட்டால் போதும். திருச்சி, திருநெல்வேலி எனக் கிளம்பி விடுவாராம் - ஏதாவதொரு குறிக்கோளுடன்.
“ஓவியம் என்பது மன வேதனைகளை மறக்கப் பயன்படும் மருந்து. வரைதலில் ஒரு சுகம் இருக்கிறது. ஓவியத்தின் வழியே பல நல்ல விஷயங்களை மக்களுக்குச் சொல்ல முடிகிறது. பல கவிதைகள் உணர்த்த முடியாத விஷயத்தை ஒரே ஒரு ஓவியம் சொல்லி விடும்” என்று கூறும் கூடல் கண்ணன், ஓவியத்தின் வழியே சமூக நல்லிணக்கம் ஏற்படப் போராடுவதாகக் கூறுகிறார். ஆனால், இதற்காக ஏராளமான பணம் செலவாகுவதாகவும், அதற்காகப் பெரிதும் கஷ்டப்பட வேண்டியிருப்பதாகவும் கவலையுடன் கூறுகிறார். தற்போது மதுரை மகாத்மா பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணிபுரியும் இவரது கனவெல்லாம் கலைகள் தாம்.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|