தலையங்கம்
மதச்சார்பின்மை - வெகுஜன தமிழ் மனோபாவம்
ஆசிரியர்
2006 தமிழக சட்டமன்றத் தேர்தல் சில முக்கியமான சமூகப் பிரச்சனைகளை நம் முன் விரித்துப் போட்டுள்ளது. குறிப்பாக முழு அரசியல்படாத அடித்தள மக்கள் அமைப்புகளையும்; தங்கள் சொந்த சாதி நலன்களை மட்டுமே மையப்படுத்தும் சாதிக் கட்சிகளையும், மதத்தின் பெயரால் வியாபாரம் நடத்துகின்ற பாரதீய ஜனதாவையும் தமிழக அரசியல் களம் நிராகரித்திருக்கிறது.
இப்படி நிராகரிக்கப்பட்ட கட்சிகள் ப.ஜ.க-வின் தலைமையில் தேர்தல் அணி சேர்ந்திருக்கின்றன. இப்பொழுதிருக்கின்ற சூழலில் தமிழகத்தில் மெகா கூட்டணி பா.ஜ.க தலைமையிலான கூட்டணிதான்.
தமிழகத்தில் வாக்கு வங்கியே இல்லாத பா.ஜ.க. மத அடிப்படைவாத மனோபாவ சிக்கலின் வழியாக தன்னை பெரிய கட்சியாக கருதிக் கொண்டிருக்கிறது.
மதச்சார்பின்மைக்கு எதிரான இடதுசாரிகளின் உக்கிரமான பிரச்சாரமும், வெகு ஜன தமிழ் மக்களின் மதச்சார்பின்மை மனோபாவமும் பா.ஜ.க.வை தமிழகத்தில் நிராகரிக்க வைத்தது. இதனை உணர்ந்து கொள்ளாத பா.ஜ.க. தற்பொழுது அரசியல் மயப்படாத தலித் அமைப்புகள், சாதி அமைப்புகள் ஆகியவற்றை தன்பக்கம் இழுத்திருக்கின்றது.
தமிழகத்தில் மதம் என்ற சொல்லைக் காட்டிலும் சாதி என்ற சொல் வலுவாக வினை புரிந்து வருகிறது. சாதியக் கொடூரத்தால் பாதிக்கப்பட்ட தலித்துகள் இயல்பாகவே மத மாறுதலை ஒரு செயல் திட்டமாக முன் வைத்து வந்திருக்கின்றனர். இதனை ஒட்டித்தான் 1980களில் மீனாட்சிபுரம் மத மாற்றத்தைக் காண வேண்டியிருக்கிறது. சமூக விடுதலை, சுயமரியாதை என்ற அர்த்தத்தில் இம்மக்கள் இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்தனர். இவை இரண்டையும் கொஞ்சமும் அறியாத இந்து அமைப்புகள் இந்து மதத்திற்கு பேராபத்து என்ற சொல்லின் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவின. இந்த சொல் இந்து மத பாதுகாப்பு என்ற பெயரில் செயல்பட்டு வரும் பண்பாட்டு அமைப்புகளுக்கு வேண்டுமானால் உறுதுணையாக இருந்திருக்கலாம். அந்தச் சொல்லை அரசியல் ரீதியாக பா.ஜ.க. கட்டி எழுப்பிய போது அக்கட்சி மிக மோசமான தோல்வியையே சந்தித்தது.
தமிழகத்தில் மத ரீதியான பண்பாட்டு அடையாளங்கள் எப்பொழுதும் நாம் அணியும் மேல் சட்டையைப் போன்றே செயலாற்றி வந்திருக்கின்றன. அதை மட்டும் வைத்து அரசியல் செய்து விடலாம் என்ற நினைப்பை பா.ஜ.க. கைவிடுவதால் தெரியவில்லை.
வெளிப்படையாக சாதி நலனோ, மத நலனோ, பேசும் கட்சிகளை தமிழக மக்கள் மனோபாவம் நிராகரித்தே வந்திருக்கிறது. ஏதோ ஒரு விதத்தில் சாதி மறுப்பு, மத ஒற்றுமை, பொருளியல் தேவை இவை மூன்றையும் முன்வைக்கும் அரசியல் கட்சிகளை மட்டுமே தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டதாக தமிழக அரசியல் வரலாறு தொடர்கிறது.
பா.ஜ.க. இந்து அடிப்படைவாதம், சாதிய நலன் இவற்றில் அக்கறை கொண்டிருக்கும் வரை அக்கட்சியால் அரசியல் மயப்படாத தலித் அமைப்புகளையும், சாதி நலன் பேசும் சாதி அமைப்புகளையும் மட்டுமே சார்ந்திருக்க முடியும். அதைத் தாண்டி வெளிவருவது கடினம்.
- ஆசிரியர்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|