சர்வதேச சாளரம்
அர்ச்சனா
பிரான்ஸ்
FIRST JOB CONTRACT என்ற பெயரில் பிரான்ஸ் நாட்டில் கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய தொழிலாளர் சட்டம் ஒன்றால் நாடே ரணகளப்பட்டுக் கொண்டிருக்கிறது. சட்டத்தை எதிர்த்து பள்ளி, பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், வங்கி, விமானம், ரயில்வே, அஞ்சல் பணியாளர்கள் என முப்பது லட்சம் பேர் தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சட்டத்தை கொண்டு வந்ததன் காரணமாக பிரான்ஸ் பிரதமர் டி வில்லாபின் உண்மையிலே வில்லனாக மாறி இருக்கிறர்.
பிரான்ஸ் நாட்டில் பணியில் சேர்பவர்களின் “தகுதி பருவகாலம்” என்று சொல்லப்படும் (Probition Period) பழைய தொழிலாளர் சார்பாக மூன்று மாதகாலம், ஆறுமாதம் வரை இதை நீடிக்கலாம் அதற்குமேல் நீட்டிக்கக் கூடாது. இப்பொழுது வந்திருக்கும் FIRST JOB CONTRACT சட்டம் இந்த கால கட்டத்தை இரண்டு வருடமாக அறிவித்திருக்கிறது. அதிலும் இருபத்தி ஆறு வயதுக்குக் கீழ் உள்ளவர்களை அப்பருவ காலத்தில் பணி நீக்கம் செய்யலாம் என்றும் கூறுகிறது.
இந்தச் சட்டம் பணியாளர்கள் இரண்டாக பிளவு படுத்துகிறது என்றும் தொழிலாளர் உரிமைகளுக்கு எதிரானது என்றும் போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள்.
பிரிட்டன்
சென்ற மாதம் 28ம் தேதி பிரிட்டனில் மாபெரும் வேலை நிறுத்த போராட்டம் நடை பெற்றிருக்கிறது. நகராட்சி, மருத்துவமனை போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுபவர்களின் ஓய்வு ஊதிய வயதை அறுபதிலிருந்து அறுபத்தி ஐந்தாக மாற்றியதை எதிர்த்து இந்த வேலை நிறுத்தம். 1926க்கு பிறகு பிரிட்டனில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டமாக இதைக் கூறுகிறார்கள். மாணவர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் என பல்வேறு தரப்பிலிருந்து 15லட்சம் பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். கல்லறைத் தோட்டத்தில் பிணங்களை புதைக்கும் பணிகள் வரை இதனால் தடை பட்டதாக கூறுகிறார்கள்.
அமெரிக்கா
2003ல் ஈராக் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 9000 அமெரிக்க ராணுவ வீரர்கள் ராணுவத்திலிருந்து வெளியேறி இருக்கின்றனர். இவர்களில் நானூறுபேர் கனடா நாட்டிற்கு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஈராக்கில் யுத்த விதிகளை மீறி அமெரிக்க ராணுவம் நடத்தி வரும் அப்பாவி ஈராக் பொது மக்களைக் கொல்லுதல், மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் குண்டு வீசி தாக்குதல் நடத்தி அழித்தல் போன்ற நடவடிக்கைகளை கண்டித்து வெளியேறுகின்றனர். இவர்கள் இருபது பேர் சட்ட பூர்வமாகவே இந்த காரணத்தைக் காட்டி வேறு நாடுகளில் வாழ அனுமதி கேட்டுள்ளனர்.
சைப்ரஸ்
2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லினால் செய்யப்பட்ட சவப்பெட்டி ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த சவப்பெட்டியில் ஹோமர் எழுதிய காவியத்தின் காட்சிகள் வண்ண ஓவியங்களாக தீட்டப்பட்டிருக்கின்றன. இந்த வண்ண ஓவியங்கள் இன்றுவரையிலும் நிறம் மங்காமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிது என்கிறார்கள் ஆய்வாளர்கள். கட்டிடத் தொழிலாளர்கள் பணி செய்யும் போது இதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஸ்பெயின்
யூதர்கள் - முஸ்லிம்கள் இரு சமூகத்தவர்கள் சந்தித்துக் கொண்ட நான்கு நாள் மாநாடு ஒன்று சமீபத்தில் நடைபெற்றுள்ளது. பாரீஸில் இயங்கிவரும் அமைதி நிறுவனம் ஒன்று இந்த சந்திப்புக்கான ஏற்பாட்டை செய்திருந்தது. இந்த நிறுவனத்தின் தலைவர் ஹோமஸ் டி. பரோல் மாறிவரும் உலகின் சூழ் நிலைக்கேற்ப யூதர்களும் முஸ்லிம்களும் தங்களை அறவியலாகவும், குடும்ப அமைப்பு உள்ளிட்டவற்றில் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்பது இந்த அமைப்பின் நோக்கம். நோவா என்ற இறைத்தூதர், உலகின் பிரளயத்தின் போது ஒரு மரக்கலப் பேழையில் உலகின் உயிர்களைப் பாதுகாத்தது போல் இது உலகம் முழுவதும் நெருக்கடியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் யூதர்களையும் முஸ்லிம்களையும் அழிவிலிருந்து பாதுகாக்கும் முயற்சி என்கிறார்கள் அமைப்பாளர்கள்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|